சாண்டில்யனின் கடல் புறா

சாண்டில்யன் நாவல்களில் என்னை மிகவும் கவர்ந்தது கடல் புறாதான். முதல் முறை படிக்கும்போது எட்டு ஒன்பது வயதிருந்திருக்கலாம். கடலைப் பார்த்தது – கடலை விடுங்கள், நான் பார்த்திருந்த மிகப் பெரிய நீர்நிலையே உள்ளூர் குளம்தான். (ஏரி அதை விடப் பெரியதுதான், ஆனால் அதில் தண்ணீர் இருந்ததில்லை.) கடல், கப்பல், கடற்கொள்ளைக்காரர்கள்,கடற்போர் என்றெல்லாம் கதை விரிந்தது அந்தக் காலத்துக்கு humdinger ஆக இருந்தது. இன்றும் படிக்கக் கூடிய, சுவாரசியம் உள்ள நாவல்தான். வணிக நாவல்களைப் பொருட்படுத்தி எழுதும் ஒரே தீவிர இலக்கிய விமர்சகரான ஜெயமோகன் இந்த நாவலை சரித்திர மிகுகற்பனை நாவல்களின் முதல் வரிசையில் வைக்கிறார்.

அத்தியாத்துக்கு அத்தியாயம் திடுக்கிடும் திருப்பங்கள். இப்போது பல திருப்பங்கள் உப்புசப்பில்லாமல் இருந்தாலும் பழைய ஞாபகம் மறக்கவில்லை. ஓரளவு சின்னப் பசங்கள் காணும் பகல் கனவு போல இருந்தாலும் சுவாரசியமாகத்தான் போகிறது. சிருங்கார ரசம் சாண்டில்யன் லெவலுக்கு குறைவுதான். நாவலில் சொல்லப்படும் வரலாறு எத்தனை தூரம் உண்மையோ தெரியவில்லை உண்மைதான். குலோத்துங்க சோழனாக பின்னாளில் அரசாண்ட அநபாயன் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை (இன்றைய மலேசியா மற்றும் சுமத்ரா, ஜாவா தீவுகள்) வென்று அரசு பூசலைத் தீர்த்து வைத்ததாக வருகிறது.

என்ன கதை? முதல் பாகத்தில் நாயகன் கருணாகர பல்லவன் (இளைய பல்லவன்) எதிரி நாடான கலிங்கத்தில் (இன்றைய ஒரிசா) இருந்து நாயகியும் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் மீது உரிமை உள்ளவளும் ஆன இளவரசி காஞ்சனாவை பல வீர சாகசங்கள் புரிந்து தப்புவிக்கிறான். இந்த பாகத்தில் கடலே கிடையாது. இரண்டாவது பாகத்தில் ஸ்ரீவிஜயத்தின் ஒரு கடற்கரை கோட்டையான அக்ஷய முனையையும் அடுத்த நாயகியான மஞ்சளழகியின் மனதையும் வெல்கிறான். இதில் துறைமுகம் உண்டு, ஆனால் கடற்கரையைத் தாண்டி கதை போகாது. மூன்றாவது பாகத்தில் கடலில் சோழர் மேலாதிக்கத்தை நிறுவி ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தின் அரியணையில் காஞ்சனாவின் அப்பாவை உட்கார்த்தி வைக்கிறான். இதில்தான் கடல், இரண்டு மூன்று கடற்போர்கள்.

அன்று படிக்கும்போது மனதை மிகவும் கவர்ந்த பாத்திரங்கள் சீனக் கொள்ளைக்காரனான அகூதா (Aguda), அரபு நாட்டைச் சேர்ந்த உபதலைவன் அமீர். அந்தப் பாத்திரங்களின் அன்னியத்தன்மை (exotic) ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். அகூதா உண்மையில் சீனாவின் அரசராக இருந்தவராம்.

இளைய பல்லவன் – கருணாகரத் தொண்டைமான் – பிற்காலத்தில் கலிங்கத்தை வென்றவன். ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணியின் நாயகன். அவனது தலைநகரமான வண்டை இன்றைய வண்டலூர்!

ஏறக்குறைய எல்லா சாண்டில்யன் புத்தகங்களையும் படித்திருக்கிறேன். சில சமயம் அவரது பாணி பற்றி அலுத்துக் கொண்டும் இருக்கிறேன். ஒன்று நிச்சயமாகச் சொல்ல முடியும் – அவர் புத்தகங்களை அனுபவிக்க வேண்டும், ஆராயக் கூடாது. ரஜினி எப்படி வெற்றிக் கொடி கட்டு என்று ஒரு பாட்டுப் பாடும் வேளையில் பெரும் பணக்காரர் ஆகிறார் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் படையப்பா திரைப்படத்தை ரசிக்க முடியாது.

இந்தப் புத்தகத்தை எல்லாருக்கும் – குறிப்பாக சிறுவர்களுக்கு – பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்

6 thoughts on “சாண்டில்யனின் கடல் புறா

  1. Sandiyan twists are mostly boring and predictable. His novels are miles behind ponniyin selvan and sivagamiyin sabatham.

    Aaanum nammala epdiyavdhu padikka vaithu viduvaar puthagathai kayyil eduthaal. Adhaan avar strength pola.

    Like

  2. ப்ரதாப், சாண்டில்யன் பற்றி நீங்கள் சொல்வது என் விஷயத்தில் சரியே. அதற்கு நாஸ்டால்ஜியாதான் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன் – என் விஷயத்திலாவது.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.