(திருத்தங்களுடன் மீள்பதிவு)
மறைந்த எஸ்.ஏ.பி. அண்ணாமலை குமுதத்தை ஒரு பெரும் சக்தியாக உருவாக்கியவர். ஆனால் குமுதம் பத்திரிகையின் தரம் என்பது என் கண்ணில் விகடனை விட, கல்கியை விட, கலைமகளை விட கொஞ்சம் குறைவுதான். என் வீட்டில் எது படித்தாலும் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள், அதனால் பிரச்சினை எதுவும் கிடையாது. ஆனால் குமுதம் கொஞ்சம் lowbrow, சிறுவர்கள் படிக்கக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். (அய்யய்யோ என் வயசு எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சே!)
குமுதம் நன்றாக விற்க வேண்டும் என்பதையே குதிரைக்கு கண்ணில் பட்டை கட்டியதைப் போல இலக்காக வைத்துக் கொண்டு ஓடி இருக்கிறார். சுஜாதாவிடம் அவர் “பர்சனாலிட்டி நான் இல்லை, குமுதம்தான்” என்று சொன்னாராம். நிறைய படித்திருந்தும், நல்ல ரசனை இருந்தும், தன் பத்திரிகை ஒரு “பாமரனுக்காக” என்று உறுதியாக இருந்திருக்கிறார், தன் ரசனையை விட்டுவிட்டு சராசரி குமுதம் வாசகன் என்ற ஒரு பிம்பம் என்ன நினைப்பானோ, எதை ரசிப்பானோ அதையே கொடுக்க முயற்சித்திருக்கிறார். உதாரணமாக சோமனதுடி என்ற ஆர்ட் படத்தை பார்த்துவிட்டு மறைந்த சுப்ரமணிய ராஜுவிடம் புகழ்ந்து பேசினாராம். ஆனால் அரசு பதில்களில் இதெல்லாம் ஒரு படமா என்று நக்கல் அடித்தாராம். ஆனானப்பட்ட சுஜாதா எழுதிய தொடர்கதையையே பிரச்சினை என்று வந்ததும் நிறுத்திவிட்டார்.
குமுதத்தில் அவரது சொந்தப் பங்களிப்பான அரசு பதில்கள் பெரும் வெற்றி அடைந்தது. சிறந்த டீம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன் அவருக்கு கைகளாக இருந்திருக்கிறார்கள். ஜ.ரா.சு. எழுத்தாளராக உருவானதில் அவருக்கும் பெரும்பங்கு உண்டு – குறிப்பாக அப்புசாமி கதைகளில் ஜ.ரா.சு.வை பெண்டு நிமிர்த்தி வேலை வாங்குவாராம். அவர்களை மிகச் சரியாக பயன்பதயவ்டுத்தினார். அறுபதுகளில் அவரும், ரா.கி.ர.வும் நிறைய கதைகள் எழுதினார்கள். அவர்கள் பாணி எழுத்துகளுக்கு வரவேற்பு குறைகிறது என்று புரிந்துகொண்டார். அவர் எழுபதுகளில், எண்பதுகளில், அவருக்கு அரசு பதில்கள், ரா.கி.ர.வுக்கு லைட்ஸ் ஆன், ஜ.ரா.சு.வுக்கு அப்புசாமி என்று தயவு தாட்சணியமே இல்லாமல் மாற்றிவிட்டார். ரா.கி.ர.வின் மாஸ்டர்பீஸான நான், கிருஷ்ணதேவராயன் விகடனிலோ கல்கியிலோதான் வெளிவந்தது.
சாண்டில்யன், சுஜாதா, ஜெயராஜ் ஆகியோரை மிகச் சரியாக பயன்படுத்தினார். சுஜாதாவை சூப்பர்ஸ்டாராக ஆக்கியதில் அவருக்கும் பங்குண்டு. ப்ரியா தொடர்கதையாக வந்தபோது, ப்ரியா இங்கிலாந்தில் நடக்கிறது, இங்கிலாந்தைப் பார்த்துவிட்டு வாருங்கள், பின்புலத்தை இன்னும் சிறப்பாக எழுதலாம் என்று சுஜாதாவை இங்கிலாந்துக்கு அனுப்பினாராம்.
அவருக்குப் பிறகு குமுதம் பெருங்காய டப்பாதான். அவருக்கும் அந்தக் கவலை இருந்திருக்கிறது. Transition plan-ஐ உருவாக்கி இருக்கிறார். பிரபஞ்சன் உட்பட்ட பலரை உள்ளே கொண்டு வந்திருக்கிறார். ஆனால் காலமும் மாறிக்கொண்டிருந்தது. பத்திரிகைகளின் பொற்காலம் போய்விட்டது. ஆனானப்பட்ட சுஜாதா கூட குமுதத்தின் ஆசிரியராக வெற்றி பெறவில்லை.
குமுதம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றதே தவிர நல்ல சிறுகதைகளையோ (ஆனந்த விகடன் முத்திரைக் கதைகள் மாதிரி), நல்ல இலக்கியத்தையோ தர முயன்றதே இல்லை. (ஆனால் அசோகமித்திரன், லா.ச.ரா. ஆகியோரின் எழுத்துகளை சின்ன வயதில் படித்திருக்கிறேன்). என் சம வயது நண்பர்கள் ஓரிருவர் குமுதத்தில் சில கதைகளைப் படித்து பாலியல் கிளர்ச்சி அடைந்ததை சொல்லி இருக்கிறார்கள். (நான் மிஸ் பண்ணிட்டேனே!) சாண்டில்யன் சில சமயம் (யூஸ்லெஸ்) போர்னோ மாதிரி எழுதுவார், அதை எல்லாம் எடிட் செய்ய முயன்றதாகவே தெரியவில்லை. விஜயமஹாதேவி என்ற நாவலில் நாயகன் நாயகியிடம் கப்பல் உள்ளே போக வேண்டும், போகுமா தெரியவில்லை என்றெல்லாம் பேசுவான். நாயகி வெட்கப்பட்டுக் கொண்டே இருப்பாள். கடைசியில் நீங்க நிஜ கப்பல் கடலுக்குள்ளே போவதைப் பற்றி பேசறீங்களா என்பாள். ஜெயராஜின் “கவர்ச்சி ததும்பும்” படங்கள், நடிகைகளின் ஃபோட்டோக்கள், அட்டைப்படத்தில் தவறாமல் பெண்கள், கிசுகிசு என்று அன்றைக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் போனார். இப்படி ஒரு பத்திரிகையை மலினப்படுத்தினார் என்று கூட அவர் மேல் எந்த விமர்சனமும் யாரும் வைத்து நான் பார்த்ததில்லை. உண்மையை சொல்லப்போனால் அவரைப் பற்றி யாரும் எதிர்மறையாக சொல்லி நான் பார்த்ததே இல்லை. குமுதத்தின் வணிக வெற்றி அவரது எல்லா குறைகளையும் மறைத்துவிட்டது போலிருக்கிறது.
பிரபஞ்சன் குமுதத்தில் பணியாற்றிய காலத்தைப் பற்றி எழுதி இருக்கிறார் – பகவத்கீதையும் பலான படங்களும். ஒழுங்கு ஒழுங்கு என்று பயங்கர ஆபீஸ் rituals நிறைந்த அலுவலகமாம். மீட்டிங்குக்கு போனால் கூட முதலில் பெரிய சீனியர் ரா.கி. ரங்கராஜன் உள்ளே நுழைய வேண்டும், அடுத்தது சின்ன சீனியர் ஜ.ரா. சுந்தரேசன், அப்புறம் சீனியாரிட்டிபடி எல்லாரும், கடைசியில்தான் புதிதாக சேர்ந்த பிரபஞ்சன் அறைக்குள் நுழைய வேண்டுமாம். காலையில் பத்திலிருந்து பத்தரை வரை குமுதம் ஆஃபீஸில் எஸ்.ஏ.பி. தலைமையில் பகவத்கீதை, திருக்குறள் விளக்கமாம். அதற்குப் பிறகு நடிகைகளின் எந்த கவர்ச்சிப் படத்தை இந்த வாரம் போடலாம் என்று பல சைட் போஸ், குனிந்த போஸ் புகைப்படங்களை அளைந்து அளைந்து தேர்ந்தெடுப்பாராம்.
ஆனால் எனக்கென்னவோ இது hippocrisy என்று தோன்றவில்லை. அவர்தான் கீதையை புரிந்துகொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது!
எஸ்.ஏ.பி.யின் பங்களிப்பு என்பது குமுதமும் அதன் பெருவெற்றியும்தான். ஆனால் அவரும் ஓரளவு எழுதி இருக்கிறார். அவரது சில நாவல்களை ஜெயமோகன் தனது குறிப்பிடத் தக்க வணிக நாவல்கள் பட்டியலில் பரிந்துரைத்துமிருக்கிறார். அவர் எழுதி சின்ன வயதில் ஏதோ படித்திருக்கிறேன். (ஆளவந்தார் என்ற போலி ஆனால் கைராசிக்கார டாக்டர் வரும் கதை ஒன்று யாருக்காவது நினைவிருக்கிறதா? இது ரா.கி. ரங்கராஜன் எழுதியதாம், எஸ்.ஏ.பி. இல்லை. பேர் கையில்லாத பொம்மை) ஆனால் எதுவும் சரியாக நினைவில்லை. ஜெயமோகன் சின்னம்மா, மலர்கின்ற பருவத்தில், பிறந்த நாள் ஆகிய நாவல்களை நல்ல social romances என்று குறிப்பிடுகிறார்.
பொதுவாக அவரது நாவல்கள் அறுபதுகளின் உணர்ச்சி பொங்கும் திரைப்படங்கள் போன்ற உணர்வை அளிக்கின்றன. பரிச்சயமான ஒரு சமையல் குறிப்பைப் படித்து ஒன்றன்பின் ஒன்றாக பொருட்களைச் சேர்த்து சமைப்பது போலத்தான் இருக்கிறது. சமையல் குறிப்பை சரியாக செயல்படுத்தினாலும் கலையம்சம் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் விரும்பிப் படிக்கப்பட்டிருப்பார் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
அவரது சமையல் குறிப்பு அணுகுமுறைக்கு சரியான உதாரணம் ‘உன்னையே ரதியென்று‘. ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்படும் சம்பவங்கள் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன, பிறகு ஒன்றன்பின் ஒன்றாக அவை அவிழ்கின்றன. அதுவும் தொடர்கதை வடிவத்துக்கு நன்றாகவே ஒத்துவரும். சம்பவங்கள் நடப்பது இயல்பாக இருப்பதும் சரளமான நடையும்தான் கதையின் பலங்கள். இளம் பெண் சிவராணி; பணக்காரத் தோழி லேகா; லேகாவுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருக்கும் மாப்பிள்ளை சுந்தரப் பிரசாத். பிரசாத் அவ்வப்போது மது அருந்துபவன். நிச்சயம் ஆனதும் முதல் ஆனதும் மதுவை நிறுத்துகிறான். ஆனால் மது அருந்துபவர்களை வெறுக்கும் லேகாவுக்கு சிவராணி மூலம் சுந்தரப் பிரசாத் மது அருந்துபவன் என்று தெரிகிறது. திருமணம் நிற்கிறது. சிவராணி மேல் ஆசைப்படும் மணிகண்டன் பணம் சம்பாதிக்க திருட ஆரம்பிக்கிறான். சிவராணி மேல் பிரசாத்துக்கும் லேசான ஈர்ப்பு. மணிகண்டனால் சுடப்பட்டு இறக்கும்போது சிவராணிக்கு மணிகண்டன் ஏறக்குறைய நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை என்று தெரிந்து மணிகண்டனைக் காப்பாற்றிவிடுகிறான். கதைச்சுருக்கம் எழுதும்போதுதான் சம்பவங்கள் இத்தனை செயற்கையாக இருந்தனவா என்று தோன்றுகிறது. 🙂
நீ சுமாரான வணிக நாவல். எனக்கு அன்றைய வணிக நாவல்கள் மேல் curiosity இல்லாவிட்டால் படித்திருக்கமாட்டேன். இன்று எழுதப்பட்டிருந்தால் புரட்டி இருக்கக்கூட மாட்டேன். காதலி வேறொருவனை மணக்க, காதலன் நீ கன்னியாகவே வாழ வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொள்கிறான். இதில் எத்தனை செயற்கையாக மூவரும் ஏறக்குறைய ஒரே வீட்டில் வாழும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்!
பிரம்மச்சாரி போன்ற நாவல்கள் எல்லாம் எல்லாம் குமுதத்தின் பக்கங்களை நிறைக்க எழுதப்பட்டவை.
பூவனம் தளத்தை நடத்தும் ஜீவி எஸ்.ஏ.பி.யை பெரிதும் ரசிப்பவர். எழுத்தாளர் திலகம் என்று இவரை புகழ்கிறார். அவரது நீ என்ற நாவலிலிருந்து ஒரு excerpt-ஐ இங்கே பதித்திருக்கிறார். எழுத்தாளர் கடுகு தன் நினைவுகளை இங்கே பதிவு செய்திருக்கிறார்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் வணிக எழுத்து
தொடர்புடைய சுட்டிகள்:
பிரபஞ்சனின் கட்டுரை – குமுதத்தின் கதை
37.523851
-122.047324
Like this:
Like ஏற்றப்படுகின்றது...