திலீப்குமார் சிறுகதைகள்

திலீப்குமார் குறைவாகவே எழுதி இருக்கிறார். இன்னும் நிறைய எழுதக் கூடாதா என்று நினைக்க வைப்பவர்களில் ஒருவர்.
ஒரு சிறுகதையில் அவரே தன்னை கிண்டல் செய்துகொள்கிறார் – “ஜெயமோகன் நான் வருஷத்துக்கு அரைக்கதைதான் எழுதறேன்பார்.”

திலீப்குமாரின் கதைகள் அனேகமாக சென்னையின் ஒரு மத்திய தர வர்க்க குஜராத்தி காலனியில் நடைபெறுபவை. அவற்றில் ஒரு பாட்டி தென்பட்டால் கதை சும்மா கலக்கிவிடுகிறது. பல கதைகளில் மெல்லிய நகைச்சுவை. சின்னதாக புன்னகை வரும், வாய்விட்டு சிரித்துவிட மாட்டோம். மிகக் கூரிய அவதானிப்புகள். நாம் நம்மிடமும் பிறரிடம் நடிக்கும் நடிப்புகள், காட்டும் தோரணைகள், ஆகியவற்றை அருமையாகக் காட்டிவிடுவார்.

திலீப்குமாரை ஒரு விதத்தில் அசோகமித்திரன் பாணி எழுத்தாளர் என்று சொல்லலாம். அவரை வேறுபடுத்துவது அசோகமித்திரனின் கசப்பும் குரூரமும் இல்லாமல் மனிதர்களை அவர்களது பலவீனங்களோடு ஏற்பது. மெல்லிய நகைச்சுவை. அசோகமித்திரனின் கதைகளில் எழுத்தாளன் இருக்கமாட்டான்தான், ஆனால் எழுத்தாளன் இருக்கக் கூடாது என்று முனைப்பு தெரியும். திலீப்குமாரின் கதைகளிலோ கதைசொல்லி என்று ஒரு பாத்திரமே இருந்தாலும் எழுத்தாளனின் சுவடே தெரிவதில்லை. புற உலகத்தை இன்னும் துல்லியமாக சித்தரிப்பார். ஆனால் அசோகமித்திரன் போன்று பெரும் மானுட தரிசனங்களுக்கு திலீப்குமார் முனைவதே இல்லை. இன்னொரு விதமாகச் சொன்னால் திலீப்குமார் அசோகமித்திரன் போட்ட ரோட்டில் கோடு மட்டுமே போடுகிறார்.

அவருடைய கடிதம், மூங்கில் குருத்து சிறுகதைகள்தான் எப்போதும் பேசப்படுகின்றன. ஆனால் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை கடவு. அடுத்தபடியாக தீர்வு. பிறகுதான் மிச்சம் எல்லாம்.

கடவு சிறுகதையை ஜெயமோகன் கூட எழுதி இருக்கலாம். பாட்டி இன்று அவற்றைப் பற்றி காலனியின் மனைவிமார்களிடம், இளம் பெண்களிடம் சுலபமாக, சின்ன புன்னகை வரும் நகைச்சுவையுடன் பேசும் பாட்டி முன்னால் என்றால் அவள் அனுபவித்த பாலியல் கொடுமைகள் பின்புலம். மிகப் பிரமாதமான சித்தரிப்பு. அவருடைய எழுத்திலேயே இதுதான் கொஞ்சம் ஆர்ப்பாட்டமானது என்று நினைக்கிறேன். அதனால்தானோ என்னவோ, இதுதான் எனக்கு மிகவும் பிடித்த சிறுகதை. முழுக்கதையும் இங்கே.

காலனியின் ஒரே கிணற்றில் பூனை விழுந்து அசுத்தமாகிவிட்டது. என்னதான் தீர்வு? மிகப் பிரமாதமான சிறுகதை. பல முறை அப்படித்தான், நம்மை சமாதானப்படுத்திக் கொள்ள, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள, நமக்கு ஏதாவது face-saving தீர்வு தேவைப்படுகிறது. முழுக்கதையும் இங்கே.

இந்த இரண்டு சிறுகதைகளுமாவது சுலபமாகப் புரிந்துவிடுகின்றன, ஏன் பிடித்திருக்கின்றன என்று மண்டையைப் போட்டு குழப்பிக் கொள்ளாமல் சொல்லிவிட முடிகிறது. ஆனால் கடிதமும் மூங்கில் குருத்தும் ஏன் பிடித்திருக்கின்றன என்ற தெளிவாக சொல்ல முடிந்ததே இல்லை. கடிதம் சிறுகதையில் ஒரு குஜராத்தி ஏழைக் கிழவர், குடும்பத்தில் ஆதரவில்லாதவர், தன் பணக்கார உறவினருக்கு எழுதும் கடிதம், அவருக்கு பண உதவி வேண்டும், ஆனால் கேட்பதில் கௌரவப் பிரச்சினைகள் உண்டு. இதில் என்ன இருக்கிறது, ஏன் பிடித்திருக்கிறது, மெல்லிய நகைச்சுவையாலா? (கிழவருக்கு கதைசொல்லிதான் கடிதம் எழுதித் தருகிறான், கிழவர் “என் கண்ணில் கண்ணீர் ததும்புகிறது” என்று எழுது என்று சொன்னவுடன் கதைசொல்லி அவர் கண்ணைப் பார்க்கிறான்). Black Humor-ஆலா? (அவர் கடிதம் எழுதினால் பணக்கார உறவினர் இறந்தே போகிறார்.) மூங்கில் குருத்திலோ ஏழ்மையின், பற்றாக்குறையின் இரக்கமற்ற சித்தரிப்பு. ஆனால் அதையும் மீறி அதில் என்னவோ இருக்கிறது.

மிச்சத்தில் ஒன்று அக்ரஹாரத்தில் பூனை. சாதாரண சிறுகதையாகப் போய்க் கொண்டே இருக்கும். திடீரென்று கடைசி ஓரிரு பாராக்களில் மாறுகிறது!

இன்னொரு குறிப்பிட வேண்டிய சிறுகதை கண்ணாடி. கணவன், மனைவி, குழந்தை, சண்டை, சமாதானம் என்று சிறப்பான சித்தரிப்போடு போகும் கதை, விலகிப் படுக்கும் மனைவியோடு முடியும்போது வேறு தளத்துக்குப் போய்விடுகிறது.

தடம் இன்னொரு நல்ல சிறுகதை. போலீஸ் சித்திரவதையிலிருந்து விடுபட மரணத்தை ஏற்க மனரீதியாக தன்னை தயார்படுத்திக்கொள்பவன் என்று கதையைச் சுருக்கலாம். ஆனால் அது கதையின் வீரியத்தை விவரிக்கவில்லை.

ஜெயமோகன் கடிதம், மூங்கில் குருத்து, அக்ரஹாரத்தில் பூனை, தீர்வு ஆகிய சிறுகதைகளை பரிந்துரைக்கிறார். எஸ்ராவுக்கு கடிதம், மூங்கில் குருத்து இரண்டு மட்டும். மூங்கில் குருத்து விட்டல்ராவ் தொகுத்த “இந்த நூற்றாண்டு சிறுகதைகள்” தொகுப்பிலும் இடம் பெறுகிறது.

ரமாவும் உமாவும் சிறுகதைத் தொகுப்பு பற்றி இங்கே.

அழியாச்சுடர்கள் தளத்தில் கானல் என்ற சிறுகதையும் இணையத்தில் கிடைக்கிறது. சுமார்தான்.

திலீப்குமாரை சந்தித்ததும் மறக்க முடியாத அனுபவம். நானும் புத்தகங்களும் பதிவிலிருந்து:

நான் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தபோது கையில் ஓரளவு காசு புரண்டது. புஸ்தகங்களை வாங்கி குவிக்க வேண்டும் என்ற வெறியை தீர்த்துக்கொள்ள நல்ல சந்தர்ப்பம். ஆனால் எங்கே புஸ்தகங்கள்? எனக்குத் அப்போதெல்லாம் தெரிந்த ஒரே புத்தகக் கடை ஹிக்கின்பாதம்ஸ்தான். சில புஸ்தகங்கள் கிடைத்தன. அப்புறம் லாண்ட்மார்க் பற்றி கேள்விப்பட்டு அங்கே போனேன், இன்னும் சில கிடைத்தன. ஆனால் நான் தேடிக்கொண்டிருந்த புஸ்தகங்கள் – வாடிவாசல், நித்யகன்னி மாதிரி – எதுவும் கிடைக்கவில்லை. கடைசியில் அல்லையன்ஸ் பதிப்பகம் போனேன். அங்கே சில தேவன் புத்தகங்களை வாங்கினேன். பிறகு வாடிவாசல் கிடைக்குமா என்று கேட்டேன். விற்பனையாளர் அந்தப் பேரையே கேட்டதில்லை. கடைசியில் அவர் சொன்னார் “இதே ஆர்.கே. மட் ரோட்லே போங்கோ. பி.எஸ். ஹைஸ்கூல் முன்னாலே, இந்தியன் பாங்க் மாடிலே திலீப்குமார்னு ஒருத்தர் சின்னக் கடை நடத்தறார், அவரைப் கேட்டு பாருங்கோ” – சரி இதுதான் கடைசி என்று அங்கே போனேன். என் பல வருஷ தேடல் அங்கே ஒரு நொடியில் முடிந்தது. நான் அதற்கப்புறம் சென்னைக்கு போய் என் உறவினர்கள், நண்பர்களை பார்க்காமல் வந்திருக்கிறேன். திலீப்குமாரை பார்க்காமல் வந்ததில்லை. அவர் கை காட்டும் புஸ்தகங்களை வாங்குவேன். மெதுவாகத்தான் படிப்பேன். (விஷ்ணுபுரம் படிக்க 4 வருஷம் ஆயிற்று.)

ஒரு பத்து வருஷமாவது சென்னையில் அவரது புத்தகக் கடை எனக்கு ஒவ்வொரு முறை இந்தியா செல்லும்போதும் தரிசிக்க வேண்டிய புண்ணிய ஸ்தலமாக இருந்தது. சொந்த வாழ்க்கையில் பட்ட அடிகளால் எல்லாம் கொஞ்சம் நிலைகுலைந்து போய்விட்டன. இன்று அவருக்கு என்னை நினைவிருக்குமா என்று கூட தெரியவில்லை. நினைவில்லை என்றால் பரவாயில்லை, அடுத்த முறை சென்னை செல்லும்போது மீண்டும் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்!

தொகுக்கப்பட்ட பக்கம்: திலீப்குமார் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:

பிடித்த சிறுகதை – திலீப்குமார் எழுதிய “கடவு”

முதன்முதலாக திலீப்குமாரை சந்தித்த தருணம் என்றும் மறக்காது. அதைப் பற்றி ஒரு நாள் தனியாக எழுத வேண்டும்.

திலீப்குமார் குறைவாகவே எழுதி இருக்கிறார். இன்னும் நிறைய எழுதக் கூடாதா என்று நினைக்க வைப்பவர்களில் ஒருவர். அவருடைய கடிதம், மூங்கில் குருத்து சிறுகதைகள்தான் எப்போதும் பேசப்படுகின்றன. ஆனால் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை இதுதான். அடுத்தபடியாக தீர்வு. பிறகுதான் மிச்சம் எல்லாம்.

விவரிக்க விருப்பமில்லை, படித்துக் கொள்ளுங்கள்!

திலீப் குமார் சிறுகதைகள் தொகுப்பிலிருந்து:

இந்த முறை கங்குப் பாட்டி யாரையும் ஏமாற்றாமல் செத்துத்தான் போவாள் என்று தோன்றியது. ஆனால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எப்போதும் போல அன்றும் நள்ளிரவுக்கு மேல் மூன்றாம் ஜாமத்தில்தான் கங்குப் பாட்டிக்கு மூச்சு முட்டியது. வழக்கம் போல கால்களை நீட்டி, பின்னந்தலையைச் சுவரில் அழுந்தப் பதித்து, விட்டத்தைப் பார்த்தபடி வாயைப் பிளந்து மிகுந்த சிரமத்துடன் சத்தமாக மூச்சு விட்டாள் பாட்டி.

பாட்டியின் எதிரே, எதிர் வீட்டு சாரதா பெஹனும் அடுத்த வீட்டு புஷ்பா பெஹனும் உட்கார்ந்திருந்தார்கள். உயிர் பிரிந்ததும் பாட்டி நேரே சொர்க்கத்துக்குப் போகும் வகைக்கு, ஒரு மூலையில் நாத்தி பெஹன் வியாசப் பலகையில் டோங்கரே மஹராஜின் பாகவதத்தை விரித்து வைத்துப் படிக்கத் துவங்கியிருந்தாள். பாட்டியின் மருமகள் சுரேகா பாட்டியின் முதுகைத் தடவிக் கொடுத்தபடி இருந்தாள்.

வாசல் பக்கம் தாழ்வாரத்தில் பாட்டியின் மருமகன் கோபால்பாயுடன் நான் நின்றுகொண்டிருந்தேன். அண்டை வீட்டுக்காரர்களான த்ரம்பக்பாய், பாபுபாய், ப்ரான் ஜீவன்லால், மற்றும் ஓரிரு இளைஞர்கள் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒட்டடை சூழத் தொங்கிக்கொண்டிருந்த பழுப்பேறிய 25 வாட்ஸ் பல்பு அழுது வடிந்தது.

வழக்கம்போல் தரம்பக்பாய் என்னைப் பார்த்து ”டேய் நிலைமை ஒன்றும் சரியில்லை. எதற்கும் 31லிருந்து ரஜனியை அழைத்து வந்துவிடு”, என்றார். நான் தயங்கி நெளிந்தபடி மாடிப்படிப் பக்கம் நகர்ந்தேன்.

ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரத்தில், 25ஆம் எண் கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் 22ஆம் எண் வீட்டு முன்னறையிலும் தாழ்வாரத்திலும் பல முறை அரங்கேறிய காட்சிதான் இது. சாகக் கிடப்பவர்கள் செத்துதான் போக வேண்டும் என்று நியதி கிடையாது. ஆனாலும் கங்குப் பாட்டி சாகக் கிடப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியத்தை பல முறை மீறி விட்டிருந்தாள். ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, 27 முறை அந்தக் கட்டிடத்தில் வாழ்ந்த 24 குஜராத்திக் குடித்தனக்காரர்கள் எல்லோரையும் இப்படி அர்த்த ராத்திரியில் எழுப்பி சாகாமலேயே கலவரப்படுத்தியிருக்கிறாள். அக்ரஹாரத்தில் இறங்கி, “கங்குப் பாட்டிக்கு சீரியஸ்” என்று யாரிடமாவது சொல்லிப் பாருங்கள். உடனே உங்கள் கன்னத்தில், செல்லமாகத்தான் என்றாலும், சப்பென்று அறைந்துவிடுவார்கள். உள்மூச்சு திணறத் துவங்குவதற்கு முன்பான சில கணங்களில் ஒவ்வொரு முறையும் பாட்டி கண்களை அகல விரித்து அந்த முன்னறையின் வெறுமைக்குள் வெறித்தபடி, “மகனே கோபால், இன்று எனக்கு ஜீவன் தவிக்கிறது. நான் கோலோகம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டதடா! சீக்கிரம் கங்காஜலம் கொண்டு வா” என்று உருக்கமாகக் கூறுவாள்.

கொண்டித்தோப்பிலிருந்த மார்வாடி ஆஸ்பத்திரியின் தலைமை வைத்தியரான 80 வயது கன்னடக்காரர் ராமச்சந்திர சர்மாவை ஸ்கூட்டரில் உட்கார்த்தி அழைத்து வந்ததும், அவர் பாட்டியின் நாடியைப் பிடித்துப் பார்ப்பார். “மாஜிக்கு இதயம் வீக்தான். ஆனால் பயப்படும்படி ஒன்றுமில்லை. ராத்திரி ஏதும் எண்ணெயில் பொரித்த பதார்த்தத்தைச் சாப்பிட்டிருப்பார்” என்பார் அலட்சியமாக (பாட்டி நாத்தி பெஹன் வீட்டு போண்டாக்களையோ, கீழ்வீட்டு மதூரியின் சமோசாக்களையோ ஒரு கை பார்த்திருப்பாள்). தொப்பியைக் கழற்றித் தன் வழுக்கைத் தலையைத் தடவியபடி ஒரு கணம் யோசிப்பார். பிறகு, தன் கோட்டுப் பைக்குள் கை விட்டுச் சிறு சிறு சூரணப் பொட்டலங்களைக் கொத்தாக எடுப்பார். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பிரித்து, பாட்டியின் திறந்த வாய்க்குள் கொட்டுவார். மேலும் சில பொட்டலங்களை சுரேகாவிடம் கொடுத்து, “வேளைக்கு ஒன்று, மூன்று நாளைக்கு. சாப்பாடு கூடாது. பார்லி வாட்டரும் உப்பில்லாத அரிசிக் கஞ்சியும்தான். எல்லாம் சரியாகி விடும்” என்று கூறுவார். 15 ரூபாய் ஃபீஸ் வாங்கிக் கொண்டு “நமஸ்தே” சொல்லிவிட்டுக் கிளம்புவார். பரீட்சித்து மஹராஜன் “சர்ப்பம் தீண்டல்” சாபத்திற்கு ஆளாவதற்குள், பாட்டி ஆ, ஊ என்று ஆர்ப்பரித்து பெரிய பெரிய ஏப்பங்களையும், டர்ர், புர்ர் என்று ஏகப்பட்ட குசுக்களையும் விடத் துவங்குவாள். நாலைந்து நிமிடம்தான். பின்பு எல்லாம் சரியாகிவிடும். பாட்டி ஒரு மிடக்குத் தண்ணீரைக் குடித்துவிட்டுக் குழந்தையைப் போல் தூங்கிவிடுவாள். கிழவியைக் கன்னாபின்னாவென்று திட்டிவிட்டுக் கட்டிடம் மறுபடியும் கோழித் தூக்கம் போடும்.

தெருவில் கால் வைத்ததும் நிலவொளியில் அக்ரஹாரம் வெறிச்சென்றிருந்தது. ஏகாம்பரேஸ்வரர் கோயில் கோபுர உச்சியில் ஒரு சிறிய மின்விளக்கு மினுங்கியது. குளிர்ந்த காற்று ரகசியம் போல் மேலெல்லாம் படர்ந்தது. 31ஆம் நம்பர் கட்டிடத்தை நெருங்க நெருங்க ரஜனிகாந்த் மாமாவின் முகம் மனதுக்குள் தோன்றியது.

குஜராத்தி முறைப்படி பாடை கட்டுவதில் படுவல்லவரான ரஜனிகாந்த் மாமாவுக்கு ப்ராட்வேயில் ஒரு மொத்த சைக்கிள் கடையில் விற்பனைப் பிரதிநிதி வேலை. பெரும்பாலான நாட்களில் சைக்கிள் உதிரி பாகங்கள், டயர் ட்யூப்களுக்கு ஆர்டர் சேகரிக்க சென்னையைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு அதிகாலையிலேயே கிளம்பிப் போய்விடுவார். அவரும் அவர் மனைவியும் மட்டும்தான். குழந்தை குட்டி கிடையாது. அன்பும் சிறிது ரெளடித்தனமும் மிக்கவர்.

பித்ருக்களான பிறகு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்ய வாரிசில்லாதவர்கள் பேயாய் அலைவார்கள் என்று ரஜனிகாந்த் மாமாவிடம் யாரோ சொல்லியிருந்தார்கள். கூடவே அந்த விதிக்கேட்டுக்குப் பரிகாரமாக 108 சாவுக்குப் பாடை கட்டினால் நல்ல கதி கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்கள். அதற்குப் பிறகுதான் ரஜனிகாந்த் மாமா பாடை கட்டுவதில் முழுமூச்சாக இறங்கினார். அதை ஒரு கலையாகவே கற்றுத் தெளிந்திருந்தார். அவர் கட்டிய பாடையில் கடோத்கஜனை கூட படுக்க வைத்துத் தூக்கிச் செல்லலாம் என்பார்கள். சௌகார்பேட்டை சுற்றுவட்டாரத்தில் எங்கே குஜராத்திகள் செத்துப் போனாலும் ரஜனிகாந்த் மாமாவுக்குத்தான் முதல் தாக்கல். தன் 45 வயதில் இதுவரை 102 பாடைகளைக் கட்டியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரை ஒரு பாடை என்பது மோட்சத்தை நெருங்குவதற்கான ஒரு படி.

31ஆம் எண் கட்டிடத்தின் பின்கட்டில் வசித்த ரஜனி மாமாவை எழுப்ப கோயில் கதவு போன்றிருந்த அந்தப் புராதன முன்கதவின் இரும்பு நாதாங்கியைப் பிடித்து சத்தமாக அவரை அழைத்தபடி நான் தட்டியபோது தெருவோரம் படுத்திருந்த மூன்று நாய்கள், இரண்டு பெருச்சாளிகள் மற்றும் கட்டிடத்திற்குள் இருந்த மிட்டு மாமா, லக்கு மாமா, சூரி சித்தப்பா எல்லோரும் கூட குடும்பசகிதம் எழுந்துவிட்டார்கள். ரஜனி மாமாவிடம் விஷயத்தைக் கூறியதும் அவர் அந்த அரைத் தூக்கத்திலும் கூட சற்று ஆவேசமாகத்தான் பேசினார்: “அடேய் பைத்தியக்காரா, அந்தக் கிழவியாவது சாவதாவது! கொள்ளை வந்து ஊரே பாடை ஏறினாலும் அவள் சாகமாட்டாள். எழுதி வைத்துக் கொள்! சரி, சரி யார் உன்னை இங்கே அனுப்பியது? அந்தத் த்ரம்பக் பயல்தானே? இன்றைக்கு மட்டும் கிழவி சாகாமல் இருக்கட்டும், பேசிக் கொள்கிறேன் அந்த படவாவை.”

ரஜனி மாமாவுடன் நான் 25ஆம் நம்பருக்குத் திரும்பியபோது, முற்றம் வெறிச்சோடிக் காணப்பட்டது. கோபால் மாமாவைத் தவிர யாரும் இல்லை. வைத்தியர் வந்து போயிருந்தார். வாயு பிரிந்து, பாட்டி அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். ரஜனி மாமா “நான் சொன்னேன் அல்லவா! கிழவி மறுபடியும் எமனுக்குக் கொக்காணி காட்டி விட்டாள்” என்றார் லேசாகச் சிரித்தபடி.

கங்குப் பாட்டியும், பாட்டியாவதற்கு முன் ஒரு காலத்தில், பேதையாக, சிறுமியாக, பெதும்பையாக, மங்கையாக, மடந்தையாக, அரிவையாக, எல்லாமாக இருந்திருந்தாள் என்பது இப்போது யாருக்கும் ஞாபகம் இல்லை. பாட்டியின் சம காலத்தவர்கள் எல்லோரும் பெரும்பாலும் செத்துவிட்டார்கள். இப்போது உயிரோடிருக்கும் கிழவிகளும், கிழவர்களும் கூட அவளை விட எட்டு பத்து வயது குறைந்தவர்கள்தான். கங்குப் பாட்டிக்குக் கல்யாணமானபோது அவளுக்கு வயது 13. 15 வயதில் புஷ்பவதியாகி, 22 வயதுக்குள் 6 குழந்தைகளைப் பெற்று, அந்த 6 குழந்தைகளையும் வரிசையாகப் பறிகொடுத்து 27 வயதில் விதவையும் ஆகிவிட்டாள். கங்குப் பாட்டி கோபால் மாமாவின் ஒன்றுவிட்ட அத்தையின் பெண். அவளைப் பெற்றவர்களும், அவள் கூடப் பிறந்தவர்களும் அவளது கண் முன்னாலேயே ஒருவர் பாக்கியில்லாமல் செத்துப் போயிருந்தார்கள். விதவையான பின் கோபால் மாமாவின் தந்தைதான் அவளைத் தன் குடும்பத்தோடு சேர்த்துக் கொண்டார். கங்குப் பாட்டியின் சோகம் அத்தோடு முடிந்து விடவில்லை. கோபால் மாமாவின் தந்தை மறு வருடம் ரேணிகுண்டாவில் வேலை காரணமாகச் சில மாதங்கள் தங்கும்படி நேர்ந்தது. அப்பொழுது அவர்கள் வசித்துவந்த இடத்துக்கு எதிரில் ஒரு மிலிட்டரி ‘பாரக்ஸ்’ இருந்தது. உள்ளூர் மற்றும் ஆங்கிலோ-இந்திய சோல்ஜர்கள் லாரிகளிலும் ட்ரக்குகளிலும் வருவதும் போவதுமாக இருப்பார்கள். ஒரு நாள் இரவு திடீரென்று கங்குப் பாட்டியைக் காணவில்லை. மிலிட்டரிக்காரர்கள்தான் அவளைத் தூக்கிக் கொண்டு சென்றுவிட்டதாகச் சொல்வார்கள். அதன் பின் கங்குப் பாட்டியை 4, 5 வருடங்கள் காணவில்லை. என்ன ஆனாள், எப்படி எங்கே இருந்தாள் என்பது இன்று வரை புதிர்தான். கங்குப் பாட்டி திரும்பக் கிடைத்தபோது, அவள் பம்பாயில், பூலேஷ்வரில் ஒரு தெருவோரத்தில் கர்ப்பமாக, இடது கால் மூட்டுப் பிசகி, சித்தம் கலங்கித் திரிந்து கொண்டிருந்தாள். அக்ரஹாரத்துக்காரர்கள் யாரோ பம்பாய்க்குச் சென்றவர்கள் தகவல் சொல்ல, கோபால் மாமாவின் தந்தை போய் அவளை மீட்டு வந்தார். பம்பாயிலேயே கருக்கலைக்கப்பட்டு, காலுக்கும் ஓரளவு சிகிச்சை அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டாள். அந்த நாட்களில் கங்குப் பாட்டி திக்பிரமை பிடித்தவள் போல உத்திரத்தையே வெறித்துக் கொண்டு கிடப்பாள்; அல்லது முகத்தைக் கைகளால் மறைத்தபடி விசும்பி விசும்பி அழுது கொண்டிருப்பாள். மார்வாடி வைத்தியசாலையில் 11 வருட சிகிச்சைக்குப் பின் அவளது மனநிலையில் சிறிது தெளிவு ஏற்பட்டது. அப்படியும் கங்கு பெஹன் பழைய கங்கு பெஹன் அல்ல என்றுதான் சொல்வார்கள். ஆனால் இப்படிச் சொல்பவர்களுக்கு அந்தப் பழைய கங்கு பெஹனைப் பற்றியும் அதிகம் தெரிந்திருக்கவில்லைதான்.

இளவயதில் கங்கு பெஹன் பார்க்க மிக அழகாக இருப்பாள். மூக்கைத் தவிர அவள் முழுக்க முழுக்க நர்கீஸ் ஜாடைதான். செக்கச் சிவந்த மேனி, விம்மித் ததும்பும் மார்பகம், அழகிய கண்கள், சிறிய கனமான அதரங்கள், “பஃப்” வைத்த ஜாக்கெட் அணிந்து முத்துக்கள் பதித்த “பட்வா”வைத் தோளில் மாட்டிக் கொண்டு, பக்கவாட்டில் ஒயிலாக நிற்கும் அவளது அந்தக் காலத்து கலர் ஃபோட்டோவை இப்போது பார்த்தாலும் மனம் பதறாமல் இருக்காது. உலகத்தையே பரிகசித்தபடி மமதை கொண்டு மினுங்கியது அவளது இளமை! காயமே இது பொய்யடா என்று கூறியவன் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டு, பின் அதே கையோடு அவனைக் கட்டித் தழுவிக் கொள்ளவும் தோன்றும்.

சிகிச்சைக்குப் பின், சிறிது உற்சாகமாகக் காணப்பட்டாலும், வதங்கிய மனத்தின் ஆற்றாமையும் குரூரமும் முகத்தில் லேசாக எப்போதும் படர்ந்திருக்கும். தன் வயதை ஒத்தவர்களிடம் அதிகம் பேசமாட்டாள். குழந்தைகளிடமும், இளம் வயதினரிடமும் மட்டும்தான் ஏதோ பேசினாள். மாலையில் சிறுசிறு வீட்டு வேலைகள் செய்வாள். அக்கம்பக்கத்துக் குழந்தைகளுக்குப் பாட்டு சொல்லித் தருவாள். ரேடியோவில் சுரையாவின் பாட்டு போட்டால் கேட்பாள். கூடவே அவளும் பாடுவாள் (சுரையா பாடிய சோச்சா தா க்யா, க்யா ஹோ கயா, ஓ தூர் ஜானேவாலே இந்த இரண்டு பாடல்களும் அவளுக்கு மிகவும் பிடிக்கும்).

அக்ரஹாரத்து மற்ற விதவைகளைப் போல் சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைப்பது, காய் நறுக்கித் தருவது, பாத்திரம் தேய்ப்பது, ஹவேலிக்குச் சென்று பூத்தொடுப்பது என்றில்லாமல் ஒரு சமயம் பாட்டி ஆவேசம் வந்தவள் போல் புத்தகம் படிப்பதில் இறங்கினாள். சிறு வயதில் அவள் குஜராத்தியில் 5 புத்தகங்களும், இங்கிலீஷில் 2 புத்தகங்களும் படித்திருந்தாள். குஜராத்தி மண்டல் லைப்ரரியிலிருந்து கோபால்பாய் மூலம் புத்தகங்களை எடுத்து வரச் சொல்லிப் படிக்க ஆரம்பித்தாள். நாட்டுப் பாடல்கள், கட்டுரைகள், நாவல்கள், சமய நூல்கள், சிறுகதைகள், சமையல் கலை என்று ஏராளமான புத்தகங்கள். தன் காரியங்களை முடித்துவிட்டு, மதியத்திலிருந்து இரவு வரை படித்துக் கொண்டே இருப்பாள். தடிதடியான புத்தகங்களை ஓயாமல் வருடக்கணக்கில் படித்தாள். அப்புறம் திடீரென்று ஒரு நாள் அதையும் நிறுத்திவிட்டாள். பிறகு முன்னறையில் ஒரு ஓரமாகச் சுவரில் தலையைச் சாய்த்து கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். பாட்டி அந்த நாட்களில் என்ன நினைத்தாளோ, என்ன யோசித்தாளோ!

இப்படியாக பாட்டிக்கு வருடங்கள் ஸ்தம்பித்து நின்றன என்றாலும் கோபால் மாமா காலேஜ் முடித்து வேலைக்குப் போய் கல்யாணம் செய்து கொண்டு ஒரு குழந்தையையும் பெற்றுக்கொண்டார். கோபால் மாமாவின் பெற்றோர்களும் கோலோகம் போய்ச் சேர்ந்தார்கள். தன் எழுபதாவது வயதுக்குப் பிறகு பாட்டிக்கு திடீரென்று ஒரு நாள் மனம் திரும்பியது. கட்டிடத்திலிருந்த எல்லோரிடமும் வலியச் சென்று கலகலப்பாகப் பேசத் தொடங்கினாள் பாட்டி. ஒரு நாள் காலை குளித்து முடித்து வெள்ளைவெளேரென்ற புடவையைக் கட்டிக் கொண்டு கைத்தடியை ஊன்றி ஊன்றி கட்டிடத்தில் இருந்த ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவர்களது க்ஷேமலாபங்களை விசாரித்தாள். தூங்கி வழிந்த, குளிக்காத குழந்தைகளின் தலைகளை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தாள். சில குழந்தைகளுக்கு முத்தம் கூடத் தந்தாள். முற்றத்தில் இருந்தபடி கதவருகே நின்ற குடும்பத் தலைவிகளிடம் பொதுவாகவும் தனியாகக் குறிப்பிட்டும் பீடிகையோடு உருக்கமாகப் பேசினாள் பாட்டி: “மகளே! பல காலமாக நான் உன்னோடெல்லாம் பேசிப் பழகாமல் இருந்து விட்டேன். என் நிலைமை அப்படி. வாஸ்தவம்தான். நான் உங்களை எல்லாம் விட மூத்தவள்தான். ஆனால் மூத்தவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்பதில்லையே! என்ன, நான் சொல்வது உண்மையா, பொய்யா? நீயே சொல். மனத்தைச் சின்னது பண்ணிக் கொள்ளாதே. பெரிய நாள் சிறிய நாள் வந்தால் மறந்துவிடாதீர்கள் இந்தக் கிழவியை. உன் அத்தையும் நானும் சிறு வயதில் ஒன்றாக விளையாடியவர்கள், தெரிந்து கொள். உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் கேள். சங்கோஜப்படாதே. என்னாலானதை அவசியம் செய்வேன். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதேயடியம்மா! கடைசியில் மனிதர்களுக்கு என்னதான் வேண்டும் சொல், அன்பைத் தவிர? உலகில் உண்மையான அன்புதான் எல்லாவற்றையும்விடப் பெரிது. எனக்கு என்ன இருக்கிறது இனி, சொல். நான் போக வேண்டியவள். நீங்கள் எல்லோரும்தான் இருக்க வேண்டியவர்கள். சந்தோஷமாக இருங்கள். நான் பட்ட பாடுதான் தெரியுமே உங்களுக்கு! நூறு நூறு மனித நாய்கள் குதறிக் கிழித்த உடம்பு இது. இந்தச் சீரழிந்த உடம்பைச் சாய்த்துவிட இன்னும் மனம் வரவில்லை அந்தக் குருட்டு பகவானுக்கு. நான் உயிரோடு இருக்கும் வரை உங்களுக்கெல்லாம் பெரியவள் நான் ஒருத்தி இங்கே உட்கார்ந்திருக்கிறேன் என்பதை நினைவில் வைத்திருங்கள். நீங்கள் எல்லோரும் என் குழந்தைகள். என் பாழும் வயிற்றில் பிறக்காத அதிர்ஷ்டசாலிக் குழந்தைகள். நன்றாக இருங்கள். சரி. சமையல்கட்டை ஒழித்துவிட்டு மதியத்திற்குப் பின் மாடிக்கு வா. பேசிக் கொண்டிருக்கலாம்.”

இவ்வாறு அன்று தன் நல்லெண்ண விஜயத்தை நான்கு கட்டிடங்களில் முடித்துக் கொண்டு திரும்பினாள் பாட்டி. பாட்டியின் பேச்சைக் கேட்டு 25ஆம் எண் கட்டிடத்து 24 குடித்தனக்காரர்களும் அதிசயித்து நின்றார்கள். பாட்டியுடைய பேச்சின் ‘மெய்ப்பொருள் காணும் அறிவு’ பலருக்கு இருந்தாலும், சிலருக்குப் பாட்டிக்குச் சுத்தமாக மரை கழன்றுவிட்டது என்று தோன்றாமலும் இல்லை.

பாட்டி விடுத்த வேண்டுகோளை கட்டிடத்தில் இருந்த பெண்கள் மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மதியத்திற்குப் பின் கோபால் மாமா வீட்டு முற்றத்தில் படிக்கட்டை ஒட்டிப் பெண்கள் கூடி அமர ஆரம்பித்தார்கள். பெரும்பாலும் குமரிப் பெண்கள், இளம் பெண்கள், நடுத்தர வயதுப் பெண்கள்தான். (த்ரம்பக் பாயின் மகள், மாதுரி மட்டும்தான் எல்லோரையும் விடச் சிறியவள். சனிக்கிழமைகளில் மட்டும் வருவாள். அவளுக்கு வயது 13. கொழுகொழுவென்று இருப்பாள்.) கிழவிகள் யாரும் வரவில்லை. நீண்ட மூக்கில் கண்ணாடி சரிந்திருக்க, கங்குப் பாட்டி சுவரில் சாய்ந்து நடுநாயகமாக வீற்றிருப்பாள். பல வருடங்களாகப் பேசாமலிருந்த பாட்டி இப்போது பேசுபேசு என்று பேசினாள். தான் படித்த புத்தகங்களிலிருந்து கதை சொன்னாள், பாட்டு பாடினாள், விடுகதை போட்டாள். மருதாணி இட்டு விட்டாள். ஜடை பின்னி விட்டாள். விதவிதமாகக் கொண்டை போட்டுவிட்டாள். எம்பிராய்டரி போட, ஸ்வெட்டர் பின்ன, ரங்கோலி போட, கண்ணாடியில் மயில் படம் வரைய, ஊறுகாய்கள் போட, பிஸ்கட், கேக் செய்ய என்று பலவற்றையும் கற்றுத் தந்தாள். பாட்டிக்குத் தெரியாத விஷயமே இல்லை என்று எல்லோருமே நினைத்தார்கள். பாட்டியும் புதுப் பெண்ணின் உற்சாகத்துடன் அக்ரஹாரத்துப் பெண்கள் எல்லோரையும் ஒரே வாரத்தில் அரவணைத்துக் கொண்டாள். பாட்டி படித்தவள் என்பதால் எதைப் பற்றீயும் பேசினாள். ஆசார குஜராத்திப் பெண்கள் – குறிப்பாக விதவைகள் – பேசக் கூசும் விஷயங்களை அவள் தயக்கமோ விகற்பமோ இல்லாமல் பேசினாள். பாலியல் உறுப்புகள், உணர்வுகள், உறவுகள் பற்றி எல்லாம் கூட அவள் கூச்சமில்லாமலும் துடுக்காகவும் பேசினாள். பாட்டியின் இந்தப் பக்கத்தைக் கண்டு கட்டிடத்துப் பெண்கள் முதலில் திடுக்கிட்டுத்தான் போனார்கள். ஆனால் பாட்டியின் குழந்தை மனமும் கூர்மையான நகைச்சுவை உணர்வும் புரியப் புரிய அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. கேட்பவர்கள் நாணி நெளிந்தாலும், உள்ளூர ரசித்துக் குதூகலிக்கும்படி இருந்தது அவள் பேச்சு. இன்னும் தாங்கள் பேச முடியாததைப் பாட்டி பேசுகிறாள் என்று பலருக்கு மகிழ்ச்சியாகக் கூட இருந்தது.

பாட்டிக்கு அக்ரஹாரத்து ஆண்கள் மேல் அவ்வளவு மதிப்பு கிடையாது. எல்லோரையும் ‘டா’ போட்டுத்தான் பேசுவாள். முதுகுக்குப் பின்னால் மட்டுமரியாதை இல்லாமல் ‘ராண்ட்நா’ என்றும் அழைப்பாள். குஜராத்தியில் ‘ராண்ட்நா’ என்பதைத் தமிழில் தோராயமாக ‘தேவடியா மகனே’ அல்லது ‘அவிசாரி மகனே’ என்று மொழிபெயர்க்கலாம். பாடை கட்டும் ரஜனி மாமாவை பாட்டிக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அவரை முகத்துக்கு நேராகவே ‘ராண்ட்நா’ என்று அழைப்பாள். தேனொழுகும் வாத்சல்யத்துடன் அவள் அந்தச் சொல்லை உச்சரிக்கும்போது தொல்காப்பியம் வரையறுக்கும் பொருள் மயக்கம் ஏற்பட்டுவிடும். இதேபோல் பாட்டி ஏராளமான குஜராத்தி வசைச் சொற்களை அச்சுவெல்லம் போல அழகாகப் பயன்படுத்துவாள். “உன் ஆசன வாயில் தீயை வைக்க” என்று அவள் சொல்லும்போது நம் நெஞ்சைத் தென்றல்தான் வருடியதோ என்று இருக்கும். (சபைக்கு வந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் பாட்டி ஒரு பட்டப் பெயர் சூட்டினாள். ‘சின்ன டேக்ஸா’, ‘பெரிய டேக்ஸா’, ‘வெள்ளைப் பன்னி’, ‘குண்டு ராணி’, ‘ஒட்டடைக் கொம்பு’, ‘தவளை’, ‘யார்ட்லி’, ‘டபுள் ரொட்டி’, ‘ஸ்டைல் மாமி’, ‘லலிதாஜி’, ‘சந்திரபாபு’ என்று ஒவ்வொருத்திக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. பாட்டி தனக்கும் ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டாள் -‘விடியாமூஞ்சி’. இது தவிர பாலியல் உறுப்புகளுக்கும் கூடப் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. ஆண்குறியை ‘வஸ்து’ என்றும் பெண்குறியை ‘கபிலவஸ்து’ என்றும், புட்டத்தை ‘டேக்ஸா’ என்றும் அழைத்தார்கள். முதலில் கூச்சப்பட்டவர்கள் கூட நாளடைவில் இந்தச் சங்கேத வார்த்தைகளின் நுண்பயன் கருதி அவற்றை ஏற்றுக் கொண்டார்கள். ஒவ்வொரு நாளும் “இன்று உன் வீட்டில் என்ன சமையல்” என்றுதான் ஆரம்பிப்பார்கள். பிறகு பேச்சு ரேஷன் கார்டு, பால் கார்டு, பஞ்சாப் கோதுமை, பூஜை, மாமியார், நாத்தனார், வெய்யில் கொடுமை, சல்மான் கானின் வெற்று மேலுடம்பு, தண்ணீர்ப் பிரச்சினை, உடைகள் என்று எங்கெல்லாமோ போகும். எப்படியும் ஒவ்வொரு நாளும் வஸ்துவையும் கபிலவஸ்துவையும் பற்றிச் சொல்லி யாரையாவது சீண்டிக் கொண்டிருப்பாள் பாட்டி. பாட்டியிடம் அகப்படுபவர்கள் முதலில் சங்கோஜப்பட்டாலும் பிறகு அவர்களாகவே முன்வந்து அதைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். குறிப்பாக இளம் பெண்கள் லஜ்ஜை குறைந்து உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள். பாட்டியும் தனக்கு மெத்தப் படித்த மேதாவி என்ற பிம்பம் இருந்ததால் தாறுமாறாகப் பேசி எல்லோரையும் துணுக்குறச் செய்தாள். (சபை நடவடிக்கைகள் சிறுசிறு அனுபந்தங்களாகக் கீழே தரப்பட்டுள்ளன.) வெடுக் வெடுக்கென்று பாட்டி பேசுவது பார்க்கவும் கேட்கவும் மிக அழகாக இருக்கும். அக்ரஹாரத்துப் பெண்கள் பாட்டியின் உண்மையான அன்பிலும் பச்சைபச்சையான பேச்சிலும் நெகிழ்ந்து கிளுகிளுத்துப் போனார்கள்.

அக்ரஹாரத்துப் பெண்கள் மற்றும் பாட்டியின் இந்தப் பரிபாடிகளில் இன்று வரை மாற்றம் இல்லை. என்ன, கடந்த சில மாதங்களாகப் பாட்டியின் உடல்நிலைதான் கொஞ்சம் படுத்துகிறது.

***

“ஏண்டி லலிதாஜி, கல்யாணமாகி ஆறு மாதமாகிறது, இன்னும் கட்டுக் குலையாமல் அப்படியே இருக்கிறாய். வஸ்து கபிலவஸ்துவுக்கு வருவதில்லையா? அல்லது நீதான் கபிலவஸ்துவின் கதவுகளை மூடி வைத்துவிட்டாயா?”

“எனக்குதான் இஷ்டமில்லை பாட்டி, வஸ்துவைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது.”

“ஆறு மாதமாகிறது. இன்னும் என்னடி பயம்? தைரியமாக இரு. தேவையானால் டாக்டரிடம் போ. பயம் பயம் என்று கோட்டை விட்டுவிடாதே. (குஜராத்தி) ஆண்களுக்கு இரண்டு விஷயம்தான் முக்கியம். ஒன்று சப்பாத்திகள், மற்றது கபிலவஸ்து. ஞாபகம் வைத்துக் கொண்டு சமர்த்தாய் இரு.”

***

“பாட்டி, நீங்கள் விரதப் புத்தகமெல்லாம் படித்திருக்கிறீர்களா?”

“ஓ! படித்திருக்கிறேனே சந்திரபாபு! என்ன வேண்டும் சொல்.”

“ஏதாவது ஒரு நல்ல விரதமாகச் சொல்லுங்கள்.”

“ஏன்?”

“வீட்டில் ஒரே பிரச்சினை.”

“என்ன, வஸ்துவால் நிற்க முடியவில்லையா?”

“தூ… எந்த நேரத்தில் என்ன பேசுகிறீர்கள்!”

“இல்லைடி, அதற்கெல்லாம் கூட விரதம் இருக்கிறது தெரியுமோ?”

இடையில் வெள்ளைப் பன்னி “நிஜமாகவா பாட்டி! எனக்குச் சொல்லுங்கள், எனக்கு சொல்லுங்கள்” என்றாள். பாட்டி “ச்சீ நாயே! இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை, அதற்குள் அதெல்லாம் எதற்கு உனக்கு?” என்று அவள் முதுகில் அறைந்தாள். “எனக்குச் சொல்லு பாட்டி, எனக்குத்தான் கல்யாணமாகிவிட்டதே என்று காதை நீட்டினாள் தவளை. பாட்டி தவளையின் காதில் ஏதோ கிசு கிசுத்தாள். உடனே, “ஐய்யே! ச்சீ, இதெல்லாம் கூட ஒரு விரதமா” என்று அலறினாள் தவளை. “இல்லையா பின்னே!” என்ற பாட்டி சந்திரபாபுவிடம் திரும்பி “உன் வீட்டில் என்ன பிரச்சினை?” என்று கேட்டாள்.

“எவ்வளவு பணம் வந்தாலும் பத்த மாட்டேனென்கிறது. வீட்டில் ‘பர்கத்தே’ இல்லை.”

“அடியே, இதற்கெல்லாம் விரதம் கிடையாது. அப்படியே இருந்தாலும் நீ அந்த விரதம் இருப்பதைவிட *சிதம்பரத்தையே” இருக்கச் சொல்லி விடலாம். உன் பிரச்சினைதான் இந்த நாட்டுக்கும்.”

சந்திரபாபு பேசாமல் இருந்துவிட்டாள். ஆனால் சபை கலையத் தொடங்கியபோது பாட்டி சந்திரபாபுவுக்கு இரண்டு மூன்று விரதங்களைப் பற்றிக் கூறினாள். கூடவே இதையும் சொன்னாள். “இதோ பார், விரதங்களால் பெண்களுக்குத்தான் பாதிப்பு. உலகில் உள்ள எல்லா விரதங்களையும் பெண்கள்தான் செய்ய வேண்டியிருக்கிறது. ஆண்களுக்கு ஒரு விரதமும் கிடையாது. நாய்கள் தின்றுவிட்டு ஊர் சுற்றத்தான் லாயக்கு. எனவே யோசித்துச் செய்.”

***

“என் மாமியார் உன்னைக் கண்டபடி திட்டுகிறாள். உனக்கும் அவளுக்கும் என்ன பிரச்சினை பாட்டி?”

“என்ன சொன்னாள்?”

“வண்டைவண்டையாகப் பேசும் துக்கிரி முண்டை, அவள் உடம்பும் அழுக்கு, மனசும் அழுக்கு என்கிறாள்.”

“அவள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். என் உடம்பு அழுக்கு படிந்த உடம்புதான். இந்தியாவிலிருக்கும் எல்லா ஜாதி நாய்களும் என்னை துவம்சம் செய்திருக்கிறார்கள். ஏன், வெள்ளைக்காரன் கூட என் மேல் படுத்திருக்கிறான். இதைத்தான் சொல்கிறாள். மற்றபடி என் மனசைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்? இதைச் சொல்வதற்காக அதையும் சேர்த்துச் சொல்கிறாள்… நாள் கணக்கில் அம்மணக்குண்டியாகவே படுக்க வைத்து என் உறுப்பிலும் ஆசனவாயிலும் மாறி மாறிக் குறிகள் நுழைந்து கொண்டே இருக்கும். மடி, ஆசாரம் பார்த்த இந்த வைஷ்ணவ முண்டையின் வாயில் கதறக் கதற ரம்மும் பிரியாணியும் திணித்துத் திணித்து… இந்தக் கஷ்டமெல்லாம் அக்ரஹாரத்தில் பாதுகாப்பாக உடம்பெல்லாம் புடவையைச் சுற்றிக் கொண்டு புருஷனுக்குக் கூட அளவாய்த் திறந்து காட்டிய உன் மாமியாருக்கு எங்கேடி புரியும் சொல். அவள் கிடக்கிறாள், விடு.”

“அழாதே பாட்டி.”

”நான் எங்கேடி அழுகிறேன்? அழ வேண்டியதெல்லாம் எப்போதோ அழுது முடித்துவிட்டேன்.”

***

“பாட்டி ஆத்மா அழியாது என்கிறார்களே, ஆத்மா என்றால் என்ன?”

“யார் சொன்னது குண்டு ராணிக்கு இதைப் பற்றியெல்லாம்?”

“நேற்று பாகவதம் சொன்ன பெரியவர் சொன்னார்.”

“என்ன சொன்னார்?”

“உடல் அழிந்தாலும் ஆத்மா அழியாது என்றார்.”

“அப்படியா சொன்னார்? உன்னைப் பார்த்தா சொன்னார்?”

“இல்லை, பொதுவாகச் சொன்னார்.”

“ஓ, அதுதான் நீ தவறாகப் புரிந்துகொண்டுவிட்டாய். பெண்களுக்கு ஆத்மா கிடையாது, தெரியுமா உனக்கு?”

“என்ன பாட்டி இப்படிச் சொல்கிறாய்! எனக்கு ஆத்மா இல்லையா?””

“வருத்தப்படாதே. எனக்கும்தான் ஆத்மா இல்லை. இங்கேயிருக்கும் யாருக்கும் ஆத்மா இல்லை. பெண்களுக்கே ஆத்மா கிடையாது.”

“பின்னே அவர் சொன்னாரே, ‘நம் எல்லோருடைய உடல்களும் அழிந்துவிடும், ஆனால் ஆத்மாக்கள் மட்டும் அழியவே அழியாது’ என்று ?”

“அவர் ஆண்களுக்காகத்தான் சொல்லியிருப்பார். நமக்காக அல்ல. ஆத்மா இருப்பவர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும், அது அழிகிறதா இல்லையா என்று. நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நமக்குதான் ஆத்மாவே இல்லையே!”

“அப்படியானால், ஆத்மா இல்லாமல் நாமெல்லாம் எப்படி மறுபிறவி எடுக்க முடியும்?”

“இது யார் சொன்னது?”

“அவரேதான்.”

“நீ மறுபிறவி எடுக்க விரும்புகிறாயா?”

“ஆமாம். ஆனால் எனக்குதான் ஆத்மா இல்லை என்று சொல்லிவிட்டாயே!”

“ஒரு வகையில் அதுவும் நல்லதுதான். ஒருவேளை உனக்கு ஆத்மா இருந்து, நீ மறுபிறவி எடுக்கும் வாய்ப்பிருந்தாலும் கூட, என் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன், நீ அதிகம் போனால் ஹரியானாவில் கறவைப் பசுவாகத்தான் மறுபிறவி எடுக்க முடியும். உனக்கு இந்தப் பிறவியே போதும். பார், எவ்வளவு அழகாக இருக்கிறாய் ஜம்மென்று! ஆத்மா கீத்மா என்று கவலைப்படாதே. வாழ்வதற்கு நல்ல உடம்பு ஒன்று போதும். சரி, விடு. இந்தப் பிறவியில் நீ என்ன ஆகப்போகிறாய்?”

“டாக்டராக, ஆனால் எனக்கு சயின்ஸே வரவில்லை.”

“எல்லாம் வரும், கவனமாகப் படி. மனது வைத்தால் எதையும் சாதிக்கலாம்.”

“மனது வைத்தால் ஆத்மாவைப் பெற முடியுமா?”

“அடியே, உனக்கென்ன பைத்தியமா பிடித்துவிட்டது! மனது வைத்தால் சாகக் கூட சாகலாம். ஆனால் ஆத்மாவை மட்டும் அடைய முடியாது. கடவுள் பெண்களுக்கு ஆத்மா தேவையில்லை என்று எப்பவோ முடிவுசெய்துவிட்டார். ஆத்மா இல்லாவிட்டால் ஒன்றும் பாதகம் இல்லை. சந்தோஷமாக இரு.”

பாட்டி சொன்னதை நம்பியும் நம்பாமலும் நிராசையுடன் போனாள் குண்டு ராணி. டபுள் ரொட்டி, பாட்டியிடம் “என்ன ஒரே போடாய்ப் போட்டுவிட்டாய் பாட்டி?” என்றாள். “பின்னே என்ன, எல்லாச் சாமியார்ப் பயல்களும் காலங்காலமாக ‘உடல் அழியக் கூடியது உடல் அழியக் கூடியது’ என்று சொல்லிச் சொல்லியே உடலைக் கேவலப்படுத்திவிட்டார்கள். இப்படிச் செய்தால் உடம்பை சந்தோஷமாகவும் சௌக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எவளுக்காவது தோன்றுமா? உடம்பு சந்தோஷமாக இருந்தால்தானேடி மனம் சந்தோஷமாக இருக்கும், தன்னம்பிக்கை வரும்? உடம்பைச் சிறுமைப்படுத்துவதால் ஒரு முன்னேற்றமும் ஏற்படாது – லௌகீகத்திலும் சரி, ஆன்மீகத்திலும் சரி. சோம்பேறித் தடியர்கள்தான் உருவாவார்கள். 13 வயதுக் குழந்தை உடல் அழியும், ஆத்மா வேண்டும், மறுபிறவி வேண்டும் என்று பினாத்துகிறாள். என்ன கேடுகாலம் இது!” என்றாள் பாட்டி.

***

“பாட்டி உலர்ந்த மாங்காய் ஊறுகாய் போடுவதற்கு மிளகாய் எவ்வளவு பாகம்?”

“அது உன் டேக்ஸாவின் எரி-எதிர்ப்புத்திறனைப் பொறுத்தது.”

(இப்படிக் கூறினாலும் பாட்டி சபை முடிவில் மிளகாயின் சரியான அளவைச் சரியானபடி கூறிவிடுவாள்.)

***

“கபிலவஸ்துவில் சந்தோஷமும் இல்லை, திருப்தியும் இல்லை. பின் இந்தக் கபிலவஸ்துவால் பெண்களுக்கு என்ன லாபம்?”

“இது மிக நல்ல கேள்வி” என்று டி.வி.யில் பேட்டி காணப்படுபவர் சொல்வது போல் அமரிக்கையாக ஆரம்பிப்பாள் பாட்டி. “ஒட்டடைக் கொம்பே, கபிலவஸ்துவில் சந்தோஷம் விளையாததற்கு முக்கியக் காரணம் வஸ்துதாரிகளின் அறியாமைதான். கபிலவஸ்துவின் நுட்பங்கள் தெரியாமல் போன மச்சான் திரும்பி வந்தான் என்கிற மாதிரி இருந்தால் என்ன பயன்? உலகில் உள்ள பெரும்பான்மையான கபிலவஸ்து சாஸ்திர நிபுணர்களின் கருத்துப்படி பொதுவாக கபிலவஸ்துவில் பிரச்சினைகள் இருக்க நியாயமே இல்லை. எங்கோ லட்சத்தில் ஒரு கேஸ், இரண்டு கேஸ்களில் இயற்கையான நீர் வறட்சி இருக்கலாம். அதற்கும் சிகிச்சை உண்டு. மற்றபடி பெரும்பாலான கபிலவஸ்துகளில் இதமும் பதமும் குறைவதற்கு வஸ்துதாரிகளின் அவசரப் புத்திதான் காரணம். கபிலவஸ்துவின் அந்தப்புரத்துக்குள் வருவதற்கான சரியான பத்ததிகளை நீதான் உன் புருஷனுக்குச் சொல்லித்தர வேண்டும்.”

“கடவுளே, இதையெல்லாமா பேச முடியும்?”

“பேசித்தான் தீர வேண்டும். உங்கள் காலம் எவ்வளவோ பரவாயில்லைடி. எங்கள் காலத்தில் வஸ்துவையே கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் குழந்தைகள் மட்டும் பெற்றுக் கொண்டே இருப்போம்.”

***

“என் அத்தையின் தொல்லை தாங்கலை பாட்டி.”

“சரியான பஜாரியாச்சே அவள், என்ன செய்தாள்?”

“சிடுசிடு என்று எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறாள். வேலை மேல் வேலை கொடுத்துக்கொண்டே இருக்கிறாள். நேற்று 12 கிலோ கோதுமையைக் கொடுத்து சாயங்காலத்திற்குள் பொறுக்கி வைக்கச் சொல்லிவிட்டாள். இடுப்பு உடைந்துவிட்டது.”

“கல்யாணமாகி வந்த புதிதிலிருந்தே எனக்கு அவளைப் பற்றிப் தெரியும்டி. அவள் சிரித்து யாருமே பார்த்ததில்லை. அப்படியே எப்போதாவது அவள் சிரித்தால் சிவகாசி காலண்டர் பூனை சிரிப்பு போல் இருக்கும்.”

“பூனை சிரிக்குமா பாட்டி?”

“அசடே, பூனை எங்கேயாவது சிரிக்குமா? அப்படி வரைந்திருப்பார்கள். சரி, இதற்கு உன் புருஷன் என்ன சொல்கிறான்? சரியான உப்பில்லாத மடையனாச்சே அவன்!”

“அவருக்கு ஒன்றுமே தெரியாது. இவளால் எங்களுக்குள்ளும் பிணக்கு. அவர் தினமும் வேண்டும் என்கிறார். ஆனால் என்னால் முடியவில்லை பாட்டி.”

“அடப் பாவமே. சின்னஞ்சிறுசுகள். இப்போது இல்லாமல் எப்போது சந்தோஷமாக இருப்பது?”

“என் மார் ரொம்பக் குலுங்குகிறதாம், தேவடியாள் மாதிரி. அதனால் மேக்ஸி போடக் கூடாது என்று சொல்லிவிட்டாள்.”

“அதெல்லாம் ஒன்றும் இல்லேடி, உன் மாருக்கென்ன, செப்புக் குடமாட்டம் அளவாகத்தானே இருக்கிறது. நீ அழாதே. உன் மாமியாருக்குப் பொறாமை, அதான். அவளுக்கு எந்தக் காலத்திலும் மாரே இருந்ததில்லை. சப்பாத்திக் கல் மாதிரி தட்டையாகத்தான் இருக்கும். நான் சொல்வதைக் கேள். மூன்று நாளைக்கு டீயில் பேதி மருந்தைக் கலந்து கொடுத்துவிடு. 40, 50 தடவை கொல்லைக்குப் போய்ச் சுருண்டு படுத்தால்தான் அவள் கொட்டம் அடங்கும்.”

“ஆனால் அது பாவமில்லையா?”

“பாவம் புண்ணியமெல்லாம் பார்த்தால் உன் காரியம் நடக்குமா? என்னைக் கேட்டால் உன் மாமியாரை விஷம் வைத்துக்கூடக் கொன்றுவிடலாம். நீ அழாதே போ. உன்னை மாதிரி சமர்த்து மருமகள் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே அந்த முண்டைக்கு.”

***

“வாடி, காலேஜ் டூரெல்லாம் எப்படியிருந்தது?”

“ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாட்டி. ஒரு வாரம் பயங்கர சந்தோஷமாக இருந்தது.”

“ஊட்டியெல்லாம் நன்றாகச் சுற்றிப் பார்த்தாயா?”

“ஊட்டி என்ன, உலகத்தையே பார்த்துவிட்டு வந்திருக்கிறேன் பாட்டி.”

“என்னடி சொல்கிறாய்”

“பெண்களுக்கு இனி வஸ்துவே தேவையில்லை என்று நிரூபித்துக் காட்டிவிட்டாள் அவள்.”

“யாரவள்?”

“அகிலாண்டேஸ்வரி. என் கூடப் படிக்கிறவள்.”

“என்னடி செய்தீர்கள்?”

“எல்லாமே. அதையெல்லாம் வாயால் சொல்ல முடியாது. அனுபவித்துப் பார்க்க வேண்டும்.”

“அடியே, சுத்தபத்தமாக இருந்துகொள்ளுங்களடி.”

“எனக்கு ஒரு பயமும் கிடையாது. யார் தயவும் வேண்டாம் இனி எனக்கு. அகிலா ஒருத்தி போதும்.”

“உன் அம்மாக்காரி சும்மா விடுவாளாக்கும். நிலத்துக்கேத்த உழவனைக் கூட்டி வந்துவிட மாட்டாளா?”

“அதெல்லாம் என்னிடம் நடக்காது. பார்த்துக் கொண்டே இரு. அது சரி பாட்டி, இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?”

“அடி நாசமாய்ப் போனவளே, நானே ஒரு ஆத்திர அவசரத்துக்கு என் டேக்ஸாவைச் சொரிந்து விடக் கையைக் கூட மடக்க முடியாமல் கிடக்கிறேன். என்னிடமா வந்து கேட்கிறாய்? நான் சொன்னால் உடனே சட்டம் போட்டுவிடுவார்களாக்கும்! சனியனே!”

“அகிலா கூட உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள் பாட்டி.”

“கிண்டலா செய்கிறாய்! அடியே! உன் டேக்ஸாவில் ஒரு உதை விட்டேனென்றால் தெரியும் சங்கதி.”

***

“கங்குப் பாட்டி, உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?”

“சில சமயம் நம்புவேன்; சில சமயம் மாட்டேன்.”

“தீர்மானமாக இல்லையாக்கும்.”

“உலகில் எதுவும் தீர்மானமானதில்லைடி. பயம் ஏற்படும்போதோ என்னை நானே சகித்துக்கொள்ள முடியாதபோதோ கடவுளை நம்புவேன். மற்றபடி நம்ப மாட்டேன்.”

“ஏன் அப்படி?”

“அது அப்படித்தான். நீ மேலே சொல்லு.”

“நம்ம புஷ்டி மார்க்கத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“புஷ்டி மார்க்கம் காலாவதியாகிவிட்டது.”

“என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? நேற்றுக்கூட அந்த பாகவதர் சொன்னாரே… புஷ்டி மார்க்கம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறதென்று?”

“மகளே, உடுப்பி ஓட்டல் சரக்கு மாஸ்டர்கள் போல தொந்தியும் தொப்பையுமாக இருக்கிற இந்த பாகவதர்களுக்கு ஒரு இழவும் தெரியாது. அவர்கள் ஒவ்வொரு ஊரிலும் பணக்காரர்கள் வீட்டு கார்களில் ஏறி மிதந்து கொண்டே இருப்பார்கள். உனக்கும் எனக்கும்தான் தெரியும். இந்த அக்ரஹாரத்தைத் தாண்டிப் போனால் புஷ்டி மார்க்கம் இல்லை, சென்ட்ரல் ஸ்டேஷன்தான் இருக்கிறது என்று.”

“இவ்வளவு வயதான நீங்களே இப்படி அபசாரமாகப் பேசலாமா?”

“அபசாரம் ஒன்றும் இல்லையடி; வாஸ்தவத்தைத்தான் சொல்கிறேன். வல்லபாச்சாரியார் முக்தியடைந்த காலத்திலிருந்தே புஷ்டி மார்க்கத்தைப் பற்றி ஏகப்பட்ட கம்ப்யிளெயின்டுகள் உண்டு.”

“அப்படியானால் நம் போன்ற வைஷ்ணவர்களின் கதி? நாம் வேறு எந்த மார்க்கத்தைத்தான் பின்பற்ற முடியும்?”

“இந்து மதத்தில் இரண்டு முக்கிய தாரைகள் உண்டு. ஒன்று நீயே கடவுள் என்று சொல்வது; மற்றது கடவுள் வேறு, நீ வேறு என்று சொல்வது. இரண்டாவதில் சில உட்பிரிவுகளும் உண்டு. கடவுளைத் தேடி நீ போ என்று, கடவுள் உன்னைத் தேடி வருவார் என்று, நீ பாதி வழியில் போய் நின்றுகொள், மீதிப் பாதி வழியைக் கடவுள் கடந்து வந்து உன்னை ஆட்கொள்வார் என்று. நீ இந்த வம்பிலெல்லாம் மாட்டிக்கொள்ளாதே. நீ நல்லவளாக இருப்பதற்கு இதெல்லாம் அவசியமில்லை. கடவுள் இல்லாமலேயே நாம் நல்லவர்களாகவும் இருக்க முடியும், துஷ்டர்களாகவும் இருக்க முடியும்.”

“நீங்கள் எந்தக் கடவுளை நினைத்துக் கொள்வீர்கள் – அதாவது நம்புகிற சில சமயங்களில்?”

“நானா, நான் பாலகிருஷ்ணனைத்தான் நினைத்துக்கொள்வேன். ஆனால் அது பழக்க தோஷம்டி, அதைப் பெரிதுபடுத்தாதே. பொதுவாகக் கடவுளை நம்பாமல் இருப்பதில்தான் அனுகூலங்கள் அதிகம்.”

“இப்படி விவஸ்தை கெட்டதனமாக பேசுவதற்காகவா அவ்வளவு புத்தகங்களையும் படித்தீர்கள்?”

“புஸ்தகம் படித்தவர்கள் எல்லாம் விவஸ்தை உள்ளவர்கள் என்று யார் உனக்குச் சொன்னது?”

“விளையாடாதீர்கள் கங்குப் பாட்டி. நான் தூய எண்ணத்தோடு கேட்கிறேன். அவ்வப்போது என்றில்லாமல் எப்போதுமே நான் கடவுளை நம்ப விரும்புகிறேன்.”

“நீ அழுக்கான எண்ணத்தோடு கேட்டாலும் தப்பில்லை. உனக்கு என்ன பிரச்சினை இப்போது? கும்பிடுவதற்குக் கடவுள் வேண்டுமா அல்லது பின்பற்றுவதற்கு மார்க்கம் வேண்டுமா?”

“இரண்டும்தான் வேண்டும்.”

“அதற்கு நீ ஏதாவது ஒரு மடத்தில்தான் போய்ச் சேர வேண்டும். உண்மையைச் சொல்கிறேன் தாயே, மார்க்கங்களின் காலம் முடிந்து விட்டது. கூட்டத்தோடு கோவிந்தா போடுவதுதான் முடியும் இப்போது. இளம் பெண் நீ, மார்க்கம் கீர்க்கம் என்று ஏன் அலட்டிக் கொள்கிறாய்? உனக்கு இஷ்டப்பட்ட எல்லாக் கடவுள்களையம் கும்பிடு அல்லது அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கும்பிடு. உன்னை மாதிரி இருப்பவர்களுக்காகத்தான் இந்து மதத்தை ஒரு சூப்பர் மார்க்கெட் மாதிரி அமைத்திருக்கிறார்கள். உனக்குப் பிடித்த ஐட்டத்தை நீ எடுத்துக்கொள்ளலாம்.”

“இப்படி எல்லாம் பேச உங்களுக்கு பயமாயில்லையா பாட்டி?”

“மனத்தில் பட்டதைச் சொல்வதற்குப் பயப்படுவானேன்?”

***

“பாட்டி, வஸ்துவை டேக்ஸாவில் போட வேண்டுமாம்.”

“உன் புருஷன்தானே, அந்த அக்கிரமி செய்தாலும் செய்வான். சரி, விடு. அப்படியும்தான் ஒரு நாள் இருக்கட்டுமே!”

“பாட்டி, என்ன நீ சுத்த கூறுகெட்டவளாக இருப்பாய் போலிருக்கிறதே!”

“அடியே, வீணாகப் பதறாதே. உலகத்தில் எதுவுமே புனிதமானது இல்லை. நிச்சயமாக உன் டேக்ஸா புனிதமானதே இல்லை. இந்து மதம் என்ன சொல்கிறது? உடல் தூய்மையற்றது; அழியக்கூடியது என்று. அழியக்கூடிய உடலிலிருந்து இப்படி ஒரு சந்தோஷம் கிடைக்கிறது என்றால் கிடைக்கட்டுமே!”

“நீ சரியான வக்கிரம் பிடித்தவள். உன்னிடம் வந்தேன் பார்!”

வெளிப்படுத்திவிடுகிற வக்கிரத்தைவிட, தேக்கி வைத்திருக்கிற வக்கிரம்தான் அபாயமானது. தவிர, வக்கிரம் எதில்தான் இல்லை? பார்க்கப்போனால் எல்லாமே வக்கிரம்தான். என் பேச்சைக் கேள். உனக்கு நிச்சயமாக விருப்பம் இல்லையென்றால் தீர்மானமாக மறுத்து விடு. ஆனால், நீ அரை மனத்துடன் இருந்தால் பரீட்சித்துப்பார். அதனால் உனக்குச் சில அனுகூலங்களும் ஏற்படலாம்.”

“கிழவி, நீ நாசமாய்த்தான் போவாய்.”

***

“நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்.”

“பெரிய டேக்ஸாவுக்கு அப்படி என்ன சோகம்?”

“ஒன்றும் சரியில்லை. மனம் விட்டுப்போய்விட்டது. யாரையும் பிடிக்கவில்லை. எல்லோரையும் போட்டு மொத்த வேண்டும் போல இருக்கிறது.”

“உன் வயது என்னடி?”

“47”

“இந்த வயதில் அப்படித்தான் இருக்கும். உன் உடம்புக்குள் மாறுதல் நடக்கிறது.”

“என்ன மாறுதலோ போ பாட்டி, நான் சாகத்தான் போகிறேன்.”

“அப்படிச் சொல்லாதேடி. அது எளிதில்லை. தற்கொலை செய்து கொள்வதற்கு நிறைய கோழைத்தனம் வேண்டும். நீதான் தைரியசாலியாயிற்றே! நீ சாகமாட்டாய். பேரன் பேத்தி எடுத்தபின் எமன் வந்து வெற்றிலை பாக்கு வைத்து உன்னை அழைத்துப் போவான். தவிர தற்கொலை செய்து கொள்வதென்றால் 30 வயதுக்குள் செய்து கொண்டுவிட வேண்டும். அதற்குப் பின் செய்து பயன் இல்லை. ஒரே குழப்பம் ஆகிவிடும்.”

***

“முன்பு மாதிரி வஸ்துவுக்குக் கபிலவஸ்துவுக்குள் நுழைய முடியவில்லை பாட்டி.”

“ஏன், என்ன ஆச்சு?”

“ஒரு நிமிடத்துக்குள் வழுக்கிவிடுகிறது.”

“அடப் பாவமே, பழைய ஜபர்தஸ்து போய்விட்டதாக்கும். நாப்பத்தைந்து வயதுக்குள்ளாகவா? உன் புருஷன் பாஸ்கட் பால் ப்ளேயராட்டம் நெடுநெடுவென்று லட்சணமாக இருப்பானே, அவனுக்கா இப்படி? சரி சரி, அதற்காக வேறு வஸ்துவைத் தேடி நீ போய்விடாதே. உன் புருஷன் அப்பாவி.”

“ஆமாம் பாட்டி, பர்மாபஜாரில் வஸ்து மாதிரி மிஷினெல்லாம் கூடக் கிடைக்கிறதாமே!”

“பர்மா பஜாரில் நிஜ வஸ்துவே கிடைக்கும். நான் சொல்வதைக் கேள். மிஷின் கிஷின் எல்லாம் சரிப்பட்டுவராது. விலையும் ஜாஸ்தி. அப்புறம் உன் மாமியாருக்குத் தெரிந்தால் உன் டேக்ஸாவைக் கிழித்து விடுவாள். உசிதமானது – மாதத்திற்கு ஒரு முறை கபிலவஸ்துவுக்குள் வஸ்து வரட்டும். மற்ற சமயத்தில் கைப்பக்குவமாக ஏதாவது செய்து கொள்ளுங்கள்.”

“பாட்டி, உனக்கு அபார மூளை.”

“ஏண்டியம்மா திடீரென்று என் மூளையைப் பாராட்டுகிறாய்?”

“நான் நினைத்ததை நீ அப்படியே சொல்லிவிட்டாய்.”

“அப்படியா! எவ்வளவு சமத்துடி நீ! ச்சீ நாயே, உன் டேக்ஸாவில் தீயை வைக்க… இவள் நினைத்தாளாம், நான் சொல்லி விட்டேனாம்!”

***

“உனக்கு உன் சின்ன வயது ஞாபகம் இருக்கிறதா பாட்டி?”

“இப்போது அதைப் பற்றி என்ன?”

“நீ சின்ன வயதில் ரொம்ப அழகாக இருப்பாயாமே?”

“அப்படியா! யாரடீ சொன்னது? சின்ன வயதில் ஒட்டகம்கூடத்தான் அழகாக இருக்கும்?”

“இப்போது திடீரென்று நீ சின்னப் பெண்ணாக மாறிவிட்டால் எப்படி இருக்கும்?”

“நான் சின்னப் பெண்ணாக மாற வேண்டும் என்றால், நீ உன் அம்மா வயிற்றுக்குள்ளும், உன் அம்மா உன் பாட்டி வயிற்றுக்குள்ளும் போயாக வேண்டும். பைத்தியம் போல் உளறாதே.”

“உன் கடந்த காலத்தை நீ நினைத்துக் கொள்ளவே மாட்டாயா?”

“கடந்த காலம் கடந்துவிட்டது. நானோ நீயோ அதை நினைத்து என்ன ஆகப்போகிறது?”

“உன் இளமைக் காலத்தை நீ நேசிக்கவே இல்லையா? வருத்தமோ சந்தோஷமோ எதுவுமே இல்லையா உனக்கு?”

“மனிதர்கள் எந்தக் காலத்தையும் நேசிக்கக் கூடாதடீ. சொல்லப் போனால், காலம் என்ற ஒன்று கிடையவே கிடையாது தெரியுமா? கடவுளைப் போ” காலமும் மனிதனின் கற்பனைதான்.”

“காலம் கற்பனை என்றால், நேற்று, இன்று, நாளை எல்லாம் ஒன்றுமில்லையா?”

“வெறுமைக்குள் குடைந்த குகைபோல்தான் இந்தக் கணக்கெல்லாம். நீ விரும்பினால் குகையையும் பார்க்கலாம். குகையின் கூரையையும் பார்க்கலாம். விரும்பாவிட்டால் எதுவுமே இல்லை.”

மறுநாள் காலை ரஜனி மாமா, பாட்டியைப் பார்க்கக் கிளம்பினார். பாட்டி முன்னறையில் உட்கார்ந்து டீயை சாஸரிலிருந்து சத்தத்துடன் உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருந்தாள். ரஜனி மாமா செருப்பைக் கழட்டிக்கொண்டே, “பாட்டிம்மா, நேற்றும் டிக்கெட்டைக் கான்சல் செய்துவிட்டாயா? உனக்கு முன் நான் டிக்கெட் வாங்கிவிடுவேன் போலிருக்கிறது” என்றார்.

உள்ளே வந்து ரஜனியை தலைநிமிர்த்திப் பார்த்த பாட்டி, “அடேய் ராண்ட்நா, காலங்காலையில் வந்து என்ன அமங்கலப் பேச்சு பேசுகிறாய்! கிழவி நான் இருக்கும்போது நீங்கள் எல்லாம் ஏனடா சாக வேண்டும்? விவஸ்தை கெட்ட நாய்.”

பாட்டியை நெருங்கியதும் ரஜனி மாமா தலை குனிந்து வணங்கி அப்படியே அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். “பாட்டிம்மா, ஞாபகம் வைத்துக் கொள். உனக்குப் பாடை என் கையால்தான்.”

“சந்தோஷமாக மகனே, நீ கட்டிய பாடையில்தான் நான் ஏறுவேன். இந்தக் கிழவியின் மனம் அப்போதுதான் குளிரும்.”

ரஜனி மாமா சட்டென்று குரலில் கரிசனம் தோய, “என்ன ஆயிற்று பாட்டிம்மா? நாங்கள் எல்லாம் ரொம்பவும் பயந்துவிட்டோம்” என்று கூறியபடி பாட்டியின் தலையை வருடினார்.

“எனக்கு என்னடா? ஒன்றுமில்லை. கேஸ் டிரபிள்தான். நேற்று கீழ் வீட்டு மந்தாகினி சொன்னாள், ‘பாட்டி, உளுந்து வடை செய்திருக்கிறேன். அப்படியே ரத்னா கேப் வடையாட்டம் இருக்கிறது. நீங்கள் இரண்டு சாப்பிட்டுப் பாருங்கள்’ என்று. இந்தக் கிழட்டு முண்டையும் ஆசையில் தின்றுவிட்டேன்.”

“என்ன! இரண்டு, இரண்டு வடையா? மூளை கீளை பிசகி விட்டதா உனக்கு? குடல் என்ன இரும்பில் செய்திருக்கிறதா? பொரித்த உளுந்து வடை இரண்டைக் குதிரையால் கூடட ஜீரணிக்க முடியாது. நாக்கை கணட்ரோல் செய் முதலில். அது உனக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது.”

“செய்கிறேன், செய்கிறேன். கிடக்கட்டும். உன் பெட்டைக் கழுதை என்ன செய்கிறாள்?”

“வேறு என்ன செய்வாள், சமையல்தான்.”

“உங்களுக்கு என்னப்பா, எஜமானன் எஜமானி இரண்டே பேர்; வக்கணையாய்ச் சமைத்து சமைத்து சாப்பிடலாம். ஜாலிதான் போ!”

“என்ன்ன்ன ஜாலி” என்று ரஜனி மாமா ஆரம்பித்தபோது, கோபால் மாமா பேப்பரும் கையுமாக உள்ளே நுழைந்தார். ரஜனியைப் பார்த்ததும் “என்னடா, நீ எப்பொழுது வந்தாய்?” என்றார்.

“இப்பொழுதுதான். பாட்டிக்குத் தேவலை போலிருக்கிறது. நான் இன்று ஆந்திரா டூர் போகிறேன். வரப் பத்து நாட்களாகும்.”

கோபால் மாமா, நாற்காலியில் உட்கார்ந்துகொண்டே குரல் கொடுத்தார். “சுரேகா, ரஜனிக்கு டீ கீ கொடுத்தாயா?”

“என்னடா உன் முதலாளி காந்தி ஜெயந்திக்கு ஒரு லட்சம் செலவு செய்து அன்னதானம் செய்கிறானாமே!”

“இரண்டாம் நம்பர் பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வார்? திங்கவும் முடியாது; கழியவும் முடியாது. இப்படித்தான் தீர்த்தாக வேண்டும்.” என்றார் ரஜனி மாமா.

டீ குடித்துவிட்டு, பாட்டியின் கையை ஆதரவாகப் பற்றிச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, பிறகு “பாட்டி, நான் போய் வருகிறேன். உடம்பைப் பார்த்துக் கொள்” என்று கூறி மீண்டும் தலை குனிந்து பாட்டியை வணங்கினார். பாட்டி “நல்லா இரு அப்பனே” என்று ஆசீர்வாதம் செய்தாள்.

பாட்டி வைத்தியர் கொடுத்த சூர்ணத்தைப் போட்டுக் கொண்டு, ஒன்றும் சாப்பிடாமல் மதியம் வரை படுத்திருந்தாள். பிற்பகலில் சபை கூடவில்லை. இதற்கு முன்பு 27 தடவை பாட்டிக்கு சீரியசானபோதும் இப்படித்தான். மறுநாள் ஓய்வு. மாலை நான்கு மணிக்குப் பள்ளிக்கூடம் விட்டு வந்த குண்டு ராணி என்ற மாதுரி வந்து எழுப்பினாள். எழுந்து உட்கார்ந்த பாட்டி அவளை அணைத்துக் கொண்டாள்.

“பாட்டி, உனக்கு நேற்று ரொம்ப சீரியசாகிவிட்டதாமே?”

“அதெல்லாம் இல்லேடி. நான் நன்றாகத்தானே இருக்கிறேன். பார்.”

“இந்தத் தடவை நீ பிழைக்க மாட்டாய் என்று சொன்னார்கள்.”

“ஆமாம். நான் செத்துப் போயிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.”

“நீ நிஜமாகவே சொல்கிறாயா பாட்டி? சாவதற்குப் பயமாயில்லையா உனக்கு?”

“எனக்கு என்னடி பயம்? நான் எவ்வளவோ சாவுகளைப் பார்த்தவள். நீ சின்னப் பிள்ளை. உனக்கு ஒன்றும் தெரியாது.”

“பயமில்லையென்றால், உனக்கு சாவதற்கு மனமில்லை என்றுதான் அர்த்தம்.”

“சாவதற்கு மனம் மட்டும் இருந்தால் போதுமா? சாவும் வர வேண்டும்.”

“மனம் வைத்தால் நாம் சாகக் கூட சாகலாம் என்று நீதானே பாட்டி ஒரு முறை சொன்னாய்!”

“நானா? நானா சொன்னேன்? எப்போது சொன்னேன்?”

“இல்லை நீ சொல்லியிருக்கிறாய். எனக்கென்னமோ நீ பயப்படுகிறாய் என்றுதான் தோன்றுகிறது.”

“இல்லைடீ கண்ணே. எனக்கு பயமே இல்லை. சாவது நம் கையில் இல்லை.”

“நீ மனது வைத்தால் சாகமுடியாதா? உனக்கு இன்னும் கொஞ்ச நாள் இருக்க வேண்டும் என்ற ஆசைதான்.”

பாட்டி திடீரென்று மௌனமானாள். ஓரிரு கணங்கள் கழிந்த பின் பதில் பேசினாள்.

“நான் இருந்து என்ன பண்ணப் போகிறேன் சொல். சாவு வராதா, வராதா என்று சதா என் ஆத்மா துடித்துக் கொண்டே இருக்கிறது.”

“உனக்கு ஆத்மா இருக்கிறதா? பெண்களுக்கு ஆத்மா கிடையாது என்று நீதானே சொன்னாய்.”

“நான் எங்கே சொன்னேன்?”

“நீ சொன்னாய்.”

“அப்படியா சொன்னேன்?”

“ஆமாம்”

பாட்டி மீண்டும் சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். பின் மீண்டும் பேசினாள். “நான் செத்தால் உனக்கு வருத்தமாக இருக்குமா?”

“எனக்கு யார் செத்தாலும் வருத்தமாக இருக்கும்.”

“நான் செத்தால் நீ எப்படி அழுவாய்?”

“முதலில் நீ செத்துக் காண்பி.”

“நான் செத்துப் போன பின் நீ அழுவதை எப்படிப் பார்க்க முடியும்?”

இப்போது மாதுரி மௌனமாகிவிட்டாள். சிறிது கழித்து பாட்டியே மீண்டும் பேசினாள்.

“நான் செத்தால் நீ கத்தித்தான் அழ வேண்டும். விசும்பிவிசும்பி அழக்கூடாது.”

“ஏன் அப்படி?”

“அது அப்படித்தான். குழந்தைகள் விசும்பி அழக் கூடாது. கத்தித்தான் அழ வேண்டும்.”

“பாட்டி, நான் சொன்னதைத் தப்பாக எடுத்துக்கொண்டு விட்டாயா? நீ சாகக்கூடாது. பாட்டி, நீ இன்னும் கொஞ்ச நாள் இரு.”

“ச்சீ என்ன பேச்சடி, இது? நீ சொல்வதை நான் ஏன் தப்பாக எடுத்துக் கொள்ளப் போகிறேன்? எவ்வளவு சமர்த்தாகப் பேசுகிறாய்? சரி, சரி, போய் உடை மாற்றிக்கொண்டு டீ கீ குடித்துவிட்டுப் படி, நாளைக்கு மறுபடி வா” என்றாள் பாட்டி.

அன்று இரவு பாட்டிக்குத் தூக்கம் வரவில்லை. பல முறை புரண்டு புரண்டு படுத்தாள். வெகு நேரம் விழித்திருந்தாள். காலை 5 மணி ஆனதும் வழக்கப் போல எழுந்து பாயைச் சுருட்டி எடுத்து வைத்துவிட்டு, குளித்துவிட்டு வந்து சுவரோரமாக உட்கார்ந்து வடக்கில் தலை வைத்துக் கீழே சாய்ந்தாள். கண்களை மூடிக் கொண்டு சிறிது நேரம் அப்படியே கிடந்தாள். திடீரென்று விக்கல் போல் ஒரு சத்தம் வெளிப்பட்டு அதோடு பாட்டியின் உயிரும் நீங்கிற்று.

கங்குப் பாட்டி இறந்து போன செய்தி கேட்டு அக்ரஹாரமே திரண்டது. ஒரு அமர்க்களமில்லை, ஒரு ஆர்ப்பாட்டமில்லை. கிழவி ரிக் ஷாவிலேறி பீச்சுக்குப் போவது போல் சட்டென்று சாய்ந்து செத்துப் போய்விட்டாளே என்று வியந்து போனார்கள் எல்லோரும். ரஜனிகாந்த் மாமா ஊரில் இல்லாததால் பாட்டியின் பாடையை வேறு யாரோதான் கட்டினார்கள். 25ஆம் எண் கட்டிடத்திலிருந்து பாட்டியின் உடல் வெளியே கொண்டு வரப்பட்டபோது பெண்கள் அடங்கிய குரலில் தேம்பிக்கொண்டு நின்றார்கள். சலசலப்பு கலந்த அமைதியோடு பாட்டியின் சவ ஊர்வலம் கிளம்பியது.

ஊரிலிருந்து திரும்பி வந்த ரஜனி மாமா நேரே கோபால் மாமா வீட்டுக்கு ஓடினார். முன்னறையில் இருந்த பாட்டியின் படத்தைப் பார்த்துவிட்டுத் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். “கடைசியில் கிழவி நீ என்னை ஏமாற்றிவிட்டாய். இனி நான் யாரை இஷ்டப்படித் திட்ட முடியும்? இல்லை என்னையும்தான் இனி யார் உன்னைப் போல பாசத்துடன் ராண்ட்நா என்று அழைக்கப் போகிறார்கள்?” என்று புலம்பினார். ஒரு மூலையில் கோபால் மாமாவின் மனைவி சுரேகா முக்காட்டால் முகத்தை மூடிக்கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தாள். அவள் சிரிக்கிறாளா, அழுகிறாளா என்பது தெரியவில்லை.

தொகுக்கப்பட்ட பக்கம்: திலீப்குமார் பக்கம், எழுத்துக்கள்

திலீப்குமார் எழுதிய ‘ரமாவும் உமாவும்’

dilip_kumar கொஞ்சமே எழுதி இருந்தாலும் திலீப்குமார் தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். பல வருஷங்களுக்குப் பிறகு அவரது தொகுப்பு வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டு நூலகங்களில் கிடைக்கிறதோ என்னவோ சான் ஃப்ரான்சிஸ்கோ நூலகத்தில் கிடைத்தது!

நான்கு சிறுகதைகள். எந்தச் சிறுகதையும் நான் தமிழ்ச் சிறுகதை anthology என்று ஒன்று தொகுத்தால் அதில் இடம் பெறாதுதான். ஆனால் நல்ல சிறுகதைகள், தொகுப்பைப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

ரமாவும் உமாவும் சிறுகதையில் இரண்டு நாற்பது வயது குஜராத்திப் பெண்கள் ஒரு குஜராத் பெண்கள் சுற்றுலாவில் சந்திக்கிறார்கள். இருவருக்கும் ஒரு அறை கொடுக்கப்பட்டிருக்கிறது, அங்கே உறவு கொள்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் வெறுமை – here we go around the prickly pear at 4’o clock in the morning வெறுமையை வெளிக் கொணர்கிறார்.

ஒரு எலிய கதை கச்சிதமாக எழுதப்பட்ட கதை. பொறியில் மாட்டிய எலிக்கும் கடவுளுக்கும் சம்பாஷணை. நன்றாக முடித்திருந்தார்.

ஆசையும் தோசையும் அவரது புகழ் பெற்ற கடிதம் சிறுகதையின் prequel. இங்கே மிட்டு மாமா தன் நண்பர் கன்ஷ்யாம் முன்னால் அவமானப்படுத்தப்படுகிறார்.

எனக்குப் பிடித்தது ‘ஒரு குமாஸ்தாவின் கதை‘ கோவையில் ஒர் முஸ்லிம் கீழ்மத்திய வர்க்கக் குடும்பம். சாதாரணக் குடும்பம். அவர்கள் வாழ்க்கையில் ஒரு நாள். குடும்பத் தலைவன் கலவரத்தில் கொல்லப்படுவதோடு முடிகிறது. மிகக் கச்சிதமாக எழுதப்பட்ட கதை.

எனக்கு குறையாகத் தெரிந்தது – playing to the gallery என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். திலீப்குமார் இந்தக் கதைகளில் அதை நிறையவே நடத்துகிறார். அதுவும் ரமாவும் உமாவும் சிறுகதையில் கதைசொல்லி தன் பாத்திரங்களோடு பேசுவதெல்லாம் புன்னகைக்க வைத்தாலும், அதெல்லாம் வெறும் playing to the gallery-தான். ஒரு எலிய கதையில் தன்னைத்தானே கிண்டல் செய்து கொள்வார் – ‘ஜெயமோகன் நான் வருஷத்துக்கு அரைக்கதைதான் எழுதறேன்பார்.’ அந்த நேரத்தில் அது புன்னகைக்க வைத்தாலும் கதைக்கும் இதற்கும் என்ன தொடர்பு? கதையை பலவீனப்படுத்துகிறது…

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திலீப்குமார் பக்கம்

திலீப்குமார் பற்றி வெங்கட் சாமிநாதன்

dilip_kumarதிலீப்குமார் கொஞ்சமே எழுதி இருந்தாலும் என் மனதுக்குப் பிடித்த எழுத்தாளர். ஒரு பத்து வருஷமாவது சென்னையில் அவரது புத்தகக் கடை எனக்கு ஒவ்வொரு முறை இந்தியா செல்லும்போதும் தரிசிக்க வேண்டிய புண்ணிய ஸ்தலமாக இருந்தது. அவரைப் பற்றி வெங்கட் சாமிநாதன் எழுதிய இந்த அறிமுகம் கண்ணில் பட்டது. தமிழ் விக்கிமூலத்தில் எழுத்துப் பிழைகள் கண்ணை உறுத்தியதால் முடிந்த வரை பிழை திருத்தி இங்கே பதித்திருக்கிறேன். விக்கிமூலக் குழுவினருக்கு நன்றி!


மொழிகளின் எல்லைகளைக் கடந்து – திலீப்குமார்

வெங்கட் சாமிநாதன்

இன்றைய தமிழ் இலக்கியத்தில் எழுபதுகளில், தெரியவந்த முக்கியமான பெயர்களில் ஒன்று, திலீப்குமார். அவரது தாய் மொழி குஜராத்தி என்பதும் விசேஷம் கொள்ளும் விவரம். இது ஏதும் அவரை தனியாக முன்னிறுத்தி பார்வைக்கு வைக்கும் காரியத்தைச் செய்வதாக அல்ல. இன்றைய தமிழ் இலக்கியத்தில், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சௌராஷ்டிரம், போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள எழுத்தாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். இவர்களில் சிலர் எழுத்துக்கள் மைல்கற்கள், க்ளாஸிக்ஸ் என்று சொல்லத் தக்கவை. இது இன்றைய விசேஷம் அல்ல. தமிழ் இலக்கியத்தின் தொன்றுதொட்டே, வரலாற்றின் தொடக்கம் தொட்டே காணப்படும் அம்சமாகும். சங்க காலப் புலவர்கள் பலரின் பெயர்கள் தமிழ் பெயர்களாக இல்லை. (உதாரணமாக, தாமோதரனார், கேசவனார், உருத்திரனார், ப்ரஹ்மசாரி, கண்ணனார், நாகனார், தேவனார்…) அப்பெயர்கள், கதாசப்தசதி தரும் பெயர்களைப் போலவே இருக்கின்றன. மேலும், பாடு பொருள், பாடல்கள் இயற்றப்பட்டுள்ள விதி முறைகள், பெயர் தரப்படாது, அவன், அவள், தோழி என்றே குறிக்கப்பட்டு வரும் மூன்றே பாத்திரங்கள், அவர்களது காதல் ஏக்கங்கள், காத்திருத்தல்கள், தூது எல்லாம் பிராகிருத மொழியில் உள்ள காதா சப்த சதியிலும், சங்க கால அகப் பாடல்களிலும் காணப்படும் பொது அம்சங்களாயிருப்பது நமக்கு இன்னும் திகைப்பூட்டுகிறது. ஒரு வேளை இரண்டிலும் பொதுவாகக் காணப்படும் புலவர் பெயர்கள் ஒருவரையே குறிக்குமோ என்னவோ. ஆனால் இந்த இழையைப் பற்றிக்கொண்டு மேற்செல்வது சங்கடமான காரியம் .

நிகழ் காலத்தில் கூட தமிழ் நாட்டில் இருக்கும் கன்னடம், தெலுங்கு பேசும் எழுத்தாளர்கள் இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு கணிசமாக பங்களித்துள்ளனர். இவற்றில் சில மிக முக்கியமான சிறப்பான படைப்புகளாகவும் விளங்குகின்றன. சௌராஷ்டிரர்களும்தான். ஆனால் அவர்கள் விஜயநகர அரசர்கள் காலத்தில், பின் நாயக்கர்கள் ஆட்சி செய்த காலத்தில் தெற்கு நோக்கி வந்து இங்கேயே தங்கி விட்டவர்கள். அது பல நூற்றாண்டுகளுக்கும் முன்னராதலால், அவர்கள் தாம் எங்கிருந்து வந்தோம் என்ற நினைப்போ, தாம் இப்போது எழுதிக்கொண்டிருப்பது ஒரு அந்நிய மொழியில் என்ற நினைப்போ அறவே அற்றவர்கள். அவர்கள் வீடுகளில் தம் தாய்மொழியில்தான் பேசுகிறார்கள் என்றபோதிலும் அது மிகவாக சிதைந்த ஒன்று தான். தமிழ் மொழி பேசுகிறவர்களானபோதிலும், டி.பி. கைலாசமும், மாஸ்தி வெங்கடேச ஐயங்காரும் கர்நாடகத்தில் வாழ்ந்ததால் கன்னடத்திலும், கேரளாவில் வாழ்ந்ததால் உள்ளூர் பரமேஸ்வர ஐயர் மலையாளத்திலும் எழுதுவது போலத்தான் இவர்கள் தமிழில் எழுதுவதும் இயல்பு. கடந்த பல நூற்றாண்டுகளாக, தென்னிந்திய மாநிலங்களிடையே இம்மாதிரியான இடம் பெயர்தலும் கொடுக்கல் வாங்கலும் தொடர்ந்த வருவதனால், இது ஏதும் விசேஷமாக, புதுமையான ஒன்றாக கருதப்படுவதில்லை. வாழ்க்கையின் கதியில் மாற்றங்களில் இது இயல்பான நிகழ்வாகவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஒரு வேடிக்கையாக இன்றைய நிகழ்வைச் சொல்லவேண்டும். இன்று தமிழில் வார்த்தைகளை அடுக்கி கவிதை எழுதுவதான பிரமையில் இருக்கும் செய்யுட்காரர்களில் பெரும்பாலோர், இன்றைய மலையாள கவிதைகளில் புழங்கும் சொற்களை தம் செய்யுட்களில் இடையிடையே கோர்த்து கேட்போரை தம் வார்த்தை ஜாலங்களால் மயக்கும் வித்தைகளில் ஈடுபட்டிருக்கும் தருணத்தில், ஒரு மலையாளம் பேசும் கவிஞர், சுகுமாரன், அந்த மலையாளக் கவிதைகளில் காணும் சொற்கூட்டங்களை பிரக்ஞை பூர்வமாகவே ஒதுக்கிவிடுகிறார். அவரது சாதாரண தமிழ். அந்த சாதாரண தமிழ், ஏதோ செயற்கையான அலங்காரங்களில் உயிர்ப்பின்றி மயங்கிக் கிடக்கும் சமூகத்தின் கூட்டு மனவியாதிக்கு ஒரு மாற்றாக வந்து சேர்கிறது. இது போன்ற ஒரு விசேஷமாகத்தான் திலீப்குமாரின் பெயரை குறிப்பிட்டுச் சொன்னேன்.

திலீப் குமார் தமிழில் பேசி எழுதும் ஒரு குஜராத்தி என்று சொல்வது அவருடைய எழுத்துக்களைப் பற்றியோ அவரது தனித்த ஆளுமை பற்றியோ எல்லவற்றையும் சொல்லிவிடுவதாகாது. அவருடைய ஆளுமையிலும், உணர்வுகளிலும், தமிழ் நாட்டின் பொதுஜன கலாச்சாரத்திலிருந்து அவரை அந்நியப்படுத்தும் கூறுகளும் உண்டு. அதே சமயம் அவர் பிறந்து வளர்ந்த ஏழை சமுதாயத்தோடு அவர் தன்னை இனங்காட்டிக் கொள்ளும் கூறுகளும் உண்டு. அவர் எழுத்துக்கள் விவரிக்கும் அடித்தள மத்திய தள ஏழை மக்களையே எடுத்துக் கொள்ளலாம். இந்த கூட்டத்தில் சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழும் பொறுக்கி வர்க்கமும் அடங்கும். இவர்களைப் பற்றிய திலீப் குமாரின் எழுத்துக்கள், இதே மக்கள் கூட்டத்தைப் பற்றி எழுதும் தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களின், மற்ற வெகு ஜன பிரபல எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு மாறுபட்டது. முற்போக்குகள் ஏழை மக்களைப் பற்றி எழுதுவது, தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் சித்தாந்தத்தின் பிரசாரத்திற்காகத் தான். அவர்கள் அந்த சித்தாந்தத்ததைத் தழுவியதும் கூட, ஒரு சௌகரியத்திற்காகவே அல்லாது, அதை அவர்கள் உறுதியோடு நம்புவதன் காரணத்தால் அல்ல. அவர்கள் எழுத்துக்களைப் பார்த்தால், அந்த ஏழை மக்களின் ஏழ்மை தொடர்வதில் தான் அவர்கள் எழுத்து வாழ்க்கையின் ஜீவிதம் அடங்கியிருப்பது போலும், மக்களது ஏழ்மை நீங்கத் தொடங்கினால், பின் எதை எழுதுவது என்ற சங்கடத்தில் ழ்ந்து விடுவார்கள் என்றும் தோன்றும். வேறு எவருக்காக இவர்கள் தம் கண்ணீரை உகுப்பார்கள், எந்த பொருளாதார அரசியல் அமைப்பை இந்த ஏழ்மைக்கு காரணமாக கண்டனம் செய்ய முடியும்? அவர்கள் ஏழ்மையில் தொடர்வதே இவர்கள் எழுத்து வாழ்க்கைக்கு சோறு போடும்.

முற்போக்குகள் அல்லாத வெகுஜன பிராபல்ய எழுத்தாளர்களுக்கோ, இது அவர்களது கதைகளுக்கு வெறும் காட்சி மாற்றம். ஏதோ ஒரு பின்னணி வேண்டும் அவர்களது காதல் கதைகளுக்கு. ராஜ்கபூர்ஆவாரா‘வாகி காதல் பண்ணுவது போல. இதில் வெகு சுவாரஸ்யமான விஷயம், இந்த இரண்டு வகை எழுத்தாளர்களுக்கும், அவர்கள் எந்த மக்களைப் பற்றி எழுதுகிறார்களோ அவர்களைப் பற்றி இவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதுதான். ஆனால், திலீப் குமார் அவர் எழுதும் மக்களிடையே பிறந்தவர், அவர்களை தம் சிறுவயதிலிருந்தே நன்கு அறிந்தவர். அவர்கள் ஏழைகளாகவும், சமூகத்தில் பின் தங்கியவர்களாகவும் இருப்பது தற்செயலான விஷயம்தான். வேடிக்கையாக, குஜராத்தி என்றால் தமிழர்கள் மனதில் எழும் பிம்பம் கொள்ளைப் பணக்காரனான வியாபாரி ஆகும். அதுவும் உண்மைதான். ஆனால், திலீப்குமார் சிறு பையனாக வாழ்ந்த வாழ்க்கை, எந்த ஏழைத் தமிழனதும் போலத்தான். அவர் பள்ளி சென்று படித்தது, மத்திய பள்ளிக் கல்வி வரைதான். அதற்குள் அவர் தந்தை காலமாகிவிட்டார். விதவையாகிவிட்ட அவரது இளம் வயதுத் தாய், பரம்பரை குடும்ப சாரத்தில் தோய்ந்தவர். சமூகம் என்ன சொல்லுமோ என்ற பயத்தில் எல்லா வெளி உலக சம்பந்தங்களையும் துண்டித்துக் கொண்டவர். அவ்வளவையும் மீறி தன் மகனை வளர்த்து ஆளாக்கினார். அந்த சிறு வயதிலேயே திலீப் என்னென்னவோ எடுபிடி வேளைகள் எல்லாம் செய்து தானும் சம்பாதிக்க ஆரம்பித்து, சுயமாக தன்னைப் படிப்பித்துக் கொண்டார். இம்மாதிரியான நிலையில் வளரும் பையன், சுற்றி ஆக்கிரமித்துக் கொண்டுள்ள பாமரத்தனமும் கூச்சலும் நிறைந்த தரமற்ற வெகுஜன கலாச்சாரத்துக்கு இரையாகாமல் தன் நுண்ணிய உணர்வுகளை காத்துக்கொண்டது எப்படி என்பது ஆச்சரியப்படவேண்டிய அதிசய விந்தை தான். ஸ்டாலினின் அவ்வளவு நீண்ட கால யதேச்சாதிகாரத்தையும் மீறி போரிஸ் பாஸ்டர்நாக் போன்ற கவிஞர்களும், பீட்டர் கபீட்ஸா போன்ற பௌதீக விஞ்ஞானிகளும் எப்படி உயிர் வாழ்ந்தார்கள், தம்மைக் காத்துக் கொண்டார்கள்! தமிழ் வெகுஜன கலாச்சாரத்தின் அசுர பாமரத்தனம் அப்படி ஒன்றும் குறைந்த யதேச்சாதிகாரம் இல்லை.

திலீப்குமாரும் எழுதுகிறார். எப்போதாவது எழுத வேண்டும் என்று தோன்றுகிறதே, அதனால் எழுதுகிறார். தான் எழுத்தாளராக வேண்டும் என்ற தூண்டுதலால் அல்ல. அவர் எழுதத் தொடங்கிய இது வரையான 15 வருடங்களில் அவர் எழுதிய சிறுகதைகள் கொஞ்சமே. அதுவும் அவர் எழுத்துக்கள் வெகு சிலரையே சேரும் சிறுபத்திரிகைகளில்தான் பிரசுரமாயின. அவர் தான் அறிந்த பழகிய மக்களைப் பற்றி, அன்றாடும் வாழ்க்கையில் உறவாடும் மனிதர்களைப் பற்றி – மத்திய தர, அல்லது ஏழை தமிழ், குஜராத்தி மக்கள் – எழுதுகிறார். ஆனால் அவர் அவர்களை நமக்கு அறிமுகப்படுத்தும் பாங்கு, அவர் வெளிப்படுத்தும் உலகம் அவரதே. அவர்களை, அசட்டு உணர்வுகளின்றி, சித்தாந்தப் பூச்சுக்களின்றி, அவர்களது ஏழ்மை, இயலாத்தன்மையை கவர்ச்சிகரமாக்காமல், பழகிய மனிதர்களாகவேதான் அவர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இந்த தந்திரங்கள் ஏதும் செய்திருந்தால், அதைத் திரும்பத் திரும்பச் செய்திருந்தால், அவர் பிரபலமாகியிருப்பார். வெற்றியடைந்த எழுத்தாளராகியிருப்பார். அவர் அப்படி ஏதும் செய்யவில்லை.

மூங்கில் குருத்து‘ என்ற தலைப்பை கொண்ட அவரது முதல் சிறுகதைத் தொகுப்பில், அத்தலைப்புக் கதையில் ஒர் கடைச் சிப்பந்தியின் ஒரு நாள் அவஸ்தையைச் சொல்கிறது. அவன் இறந்த தந்தையின் சிராத்த தினம் மறுநாள். அவனது தந்தைக்கு மிகவும் பிரியமானது மூங்கில் குருத்து. அது என்னவோ வெளியூரிலிருக்கும் கல்யாணமான அக்கா தந்தது வீட்டில் இருக்கிறது சிரார்த்தத்திற்கு என்று. ஆனால் சிராத்தத்திற்கு வேண்டிய அரிசி இன்னும் மற்ற பொருட்கள் எல்லாமே இனித்தான் வாங்கியாக வேண்டும். அதற்கு கடை முதலாளியிடம் ஒரு ரூபாய் அட்வான்ஸாகக் கேட்க, அவர் முதல் நாள் இரவு கடையை மூடுவதற்கு முன் வாடிக்கைக்காரர்களிடமிருந்து வரவேண்டிய பாக்கியை வசூல் செய்து அதிலிருந்து ஒரு ரூபாய் எடுத்துக்கொள் என்று சொல்லிவிட்டார். அந்த நாள் முழுதும் அந்த பாக்கியை வசூல் செய்ய அலைவதிலேயே கழிகிறது. அலைந்ததுதான் மிச்சமே ஒழிய ஒரு பைசா கூட வசூல் ஆகவில்லை. வெறுங்கையோடு வீடு திரும்பியவனுக்கு அம்மாவிடம் திட்டு கிடைக்கிறது. ஆக, மறுநாள் அந்த வருட சிரார்த்தம் நடக்கப் போவதில்லை. அந்த வீட்டில் மூங்கில் குருத்து வருஷத்தில் ஒரு நாள்தான் சமைத்தாகிறது. அதுவும் அப்பாவுக்குப் பிடிக்கும் என்பதால் அவர் நினைவில் அவர் சிரார்த்த தினத்தன்றுதான் சமைக்கப்படும். அது இருந்தும் பயனில்லாது போய்விட்டது. அதை இனி தூக்கி எறியத்தான் வேண்டும்.

இன்னொரு கதை. ஒரு முற்போக்கு எழுத்தாளர். அவரது கதைகளில் காணும் மனிதாபிமானம், சுரண்டப்படும் வர்க்கத்தின் மீது அனுதாபம், முற்போக்கு கருத்துக்கள் ஆகியவற்றிற்காக அறியப்படுபவர். அவருக்கும் கஷ்டகாலம். என்னென்னவோ நிறைய கெட்ட பழக்கங்கள். கையில் பணமிருப்பதில்லை. கையால் அடிக்கடி தன் பணத்தேவைக்காக அறிந்தவர் அறியாதவர் எல்லோரிடமும் கையேந்திக் கடன் வாங்குவார். அவருடைய கதைகளைப் படித்து ரசிக்கும் ஒரு புதிய வாசகரின் பரிச்சயம் கிடைக்கவே அவரிடமும் தன் அப்போதைய கஞ்சா தேவைக்காகக் கடன் கேட்கிறார். ரசிகர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி வசமாகத் திட்டு வாங்கிக் கட்டிக்கொள்கிறார், மனிதாபிமானக் கதைகள் எழுதும் தன் அபிமான கதாசிரியரிடம்.

திலீப்குமார் யாரைம் குற்றம் சாட்டுவதில்லை. யாரையும் ஐயோ பாவம்! என்று இரக்கத்திற்கு உரியவராக்குவதில்லை. தீய வழிகளில் செல்கிறவர்களைக் கூட கீழ்நோக்கிப் பார்ப்பதில்லை. அப்படி ஏதும் சொல்வது அவர்கள் மனம் நோகச் செய்யும் என்று பயப்படுவதாகத் தோன்றுகிறது. அதைத் தான் பார்க்காதது போல இருந்து விடுகிறார். ஓவ்வொருவருக்கும் அவரவர் குறைபாடுகள், பலவீனங்கள் உண்டு. அவை வறுமையின் காரணமாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இந்த குறைபாடுகள் எப்போதும் இருக்கப் போவதில்லை. அவை பின்னால் நீங்கிவிடக்கூடும். ஆகவே அதை வைத்துக்கொண்டு கூச்சல் போடவேண்டாம், கோஷங்கள் இட வேண்டாம், அதை வைத்துக் கொண்டு தன் பிழைப்பை நடத்தவேண்டாம். எல்லாவற்றிலும் மோசமாக அவற்றைக் கதை பண்ணி கவர்ச்சியாக்க வேண்டாம். அவற்றோடுதான் வாழவேண்டும். கடைசியில் அடிப்படையான சக மனித உணர்வுகள் மேலெழும். கண்ணாடி என்ற கதையில் தம்பதிகள் ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்கின்றனர். ரகளை நடக்கிறது. கடைசியில் சமாதானம் ஆகி பிரிய தம்பதிகளாகவும் இணைகின்றனர். இந்த சங்கிலித் தொடர் மாறுவதில்லை.

திலீப்குமார் போன்ற எழுத்தாளர்கள் அபூர்வ ஜீவன்கள். தமிழ் எழுத்தைப் பொறுத்த மட்டிலாவது. தற்கால தமிழ் இலக்கியத்திற்கு இவர்கள் வளம் சேர்ப்பவர்கள்.

ஆங்கிலம்: ‘Crossing the Language Barriers‘- Patriot, New Delhi, ஆகஸ்ட் 13, 1989


தொகுக்கப்பட்ட பக்கம்: திலீப்குமார் பக்கம்

இணையத்தில் திலீப்குமார் சிறுகதைகள்: மூங்கில் குருத்து, கண்ணாடி, கடிதம், தீர்வு, கானல், தடம், அக்ரஹாரத்தில் பூனை

திலீப் குமாரின் ‘தீர்வு’ – பிடித்த சிறுகதை

கொஞ்சமே எழுதினாலும் சிறப்பாக எழுதுபவர் திலீப் குமார். எனக்குப் பிடித்த சிறுகதை இது. அதிகம் பேசப்படும் கடிதம், மூங்கில் குருத்து ஆகியவற்றை விட எனக்கு இன்னமும் பிடித்த சிறுகதை. ஜெயமோகனின் சிறந்த தமிழ் சிறுகதைகள் பட்டியலில் இடம் பிடிக்கிறது. ஆபிதீன் பதித்திருக்கிறார். அவருக்கு நன்றி!

எல்லாவற்றையும் விட பிடித்த திலீப் குமார் சிறுகதை கடவு. அந்த சிறுகதையைப் பற்றி யாரும் எதுவும் சொல்லி நான் பார்த்ததே இல்லை, அது எனக்கு மட்டும்தான் பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன். 🙂 நண்பர் கோபி இந்தச் சிறுகதையைப் பற்றியும் மற்றும் கடவு தொகுதியில் உள்ள பல சிறுகதைகளையும் பற்றி இங்கே விலாவாரியாக எழுதி இருக்கிறார்.


தொகுக்கப்பட்ட பக்கம்: திலீப் குமார் பக்கம்