Paula Richman (Ed): Ramayana Stories in Modern South India

நான் மிகவும் ரசித்துப் படித்த புத்தகங்களில் ஒன்று.

ரிச்மன் ராமாயண மறு வாசிப்புகளை – நாட்டுப் பாடல்கள், நவீன சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், சினிமா (காஞ்சன சீதா) என்று பலதரப்பட்ட மறு வாசிப்புகளைத் தொகுத்திருக்கிறார்.

மறுவாசிப்புகளில் மீண்டும் மீண்டும் சில கருக்கள் தெரிகின்றன; அக்னிப்ரவேசம், சீதையை ராமன் காட்டுக்கு அனுப்புவது, சம்புகன். கர தூஷணர், சுபாஹு-மாரீசன் மாதிரி பாத்திரங்களை வைத்து நான் எழுதினால்தான் உண்டு போலிருக்கிறது.

தெலுகு இலக்கியம் பற்றி அதிகம் தெரியவில்லை என்று சமீபத்தில் குறைப்பட்டுக் கொண்டிருந்தேன். இந்தப் புத்தகத்தில் சலம் எழுதிய சிறுகதை ஒன்று – அக்னிப்ரவேசம் என்றதும் சீதை உனக்கு ராவணனே மேல் என்று ராவணனின் சடலத்தோடு உடன்கட்டை ஏறிவிடுகிறாள்! வோல்கா லலிதகுமாரியின் சிறுகதையில் வால்மீகி ஆசிரமத்தில் இருக்கும் சீதையும் ஊனப்பட்ட சூர்ப்பனகையும் தோழிகள் ஆகிறார்கள். காவனசர்மா என்பவர் எழுதிய சிறுகதையில் சூர்ப்பனகை சீதையிடம் ஆண்களின் ஆதிக்கத்தைப் பற்றி உணர்த்துகிறாள். தவிர நாட்டுப் பாடல்களின் மொழிபெயர்ப்புகள். ஒன்றில் நேரத்துக்கு படுக்கைக்கு வரவில்லை என்று ராமன் குறைப்பட, சீதை மாமனார் மாமியாருக்கு சேவை செய்துகொண்டிருக்கிறாள். தாமதமாக வரும் சீதையை ராமன் படுக்கை அறைக்கு உள்ளே அனுமதிப்பதில்லை, கௌசல்யா வந்து சமாதானப்படுத்த வேண்டி இருக்கிறது. இன்னொன்றில் பட்டாபிஷேகத்தின்போது 14 வருஷம் தூங்காத லக்ஷ்மணன் தனக்கு தூங்க நேரமாகிவிட்டது என்று நினைவுபடுத்த வரும் நித்ராதேவியைப் பார்த்து சிரிக்கிறான். ராமன் சீதை உட்பட எல்லாருக்கும் லக்ஷ்மணன் தங்களைப் பார்த்து இளக்காரமாக நகைக்கிறான் என்று குத்துகிறது.

மாப்ளா ராமாயணம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேரளத்தின் மாப்ளா முஸ்லிம்களின் நாட்டுப்பாடல்கள் போல பாடப்பட்டதாம். இன்று மறைந்துவிட்டது. பிராந்தன் (ஆம், பிராந்தன்தான்) ஹாசன்குட்டி என்பவர் ஒரு காலத்தில் இதைப் பாடித் திரிந்து கொண்டிருந்தபோது அதைக் கேட்ட டி.ஹெச். குன்ஹிராமன் நம்பியார் (T.H. Kunhiraman Nambiar) என்ற சிறுவன் மிகவும் ஆர்வமாக கிட்டத்தட்ட 700 வரிகளை மனப்பாடம் செய்திருக்கிறார். அறுபதுகளில் எம்.என். கரசேரி (M.N. Karassery) என்பவர் அதை ஆவணப்படுத்தி இருக்கிறார். இது ஹாசன்குட்டி ஆரம்பித்ததா இல்லை அதற்கு முன்பே பல காலமாக இருந்ததா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. ரிச்மன் இங்கே ஒரு நூறு நூற்றைம்பது வரிகளைக் கொடுத்திருக்கிறார். சூர்ப்பனகையை ராமன் ஷரியா விதிப்படி உன்னை ஏற்பதற்கில்லை என்று சொல்லும் இடத்தில் நான் வாய் விட்டுச் சிரித்துவிட்டேன்.

மலையாளத்திலிருந்து தொக்குக்கப்பட்ட பிற மறுவாசிப்புகள்: குமரன் ஆசானின் கவிதை, மற்றும் லலிதா லெனின், கே. சச்சிதானந்தன் ஆகியோரின் கவிதைகள்; கே.பி. ஸ்ரீதேவி (K.B. Sridevi) என்பவர் எழுதிய சிறுகதை புதுமைப்பித்தனின்சாபவிமோசனம்” சிறுகதையை எதிரொலிக்கிறது. (1990-இல் எழுதப்பட்டிருக்கிறது) என்.எஸ். மாதவன் என்பவர் அகல்யை கதையை நவீன காலகட்டத்தில் திருப்பி எழுதி இருக்கிறார்.

கன்னடத்தில் குவெம்புவின் சூத்திர தபஸ்வி நாடகத்திலிருந்து சில பகுதிகள். சம்புகனை ராமன் கொல்வதில்லை, புகார் செய்த பிராமணனுக்குத்தான் ஆபத்து! சித்திர ராமாயணா என்ற நாடகத்திலிருந்து சில பகுதிகள் (தொன்மையான கதையை ஹெச்.எஸ். வெங்கடேச மூர்த்தி நாடகம் ஆக்கி இருக்கிறார். சூர்ப்பனகையின் சூழ்ச்சியால் ராவணனின் படத்தை சீதை வரைகிறாள், படம் உயிர் பெற்றுவிடுகிறது. சீதையைத் தழுவ விரும்பும் ராவணனுக்கு சீதை சொல்லும் யோசனை – என் மகனாகப் பிற! சந்தேகக்கார ராமன் ராவணனோடு போரிடும்போது, நான் வரைந்த படம், என் “மகன்” என்று சீதை ராவணனை காப்பாற்றப் பார்க்கிறாள்.) சில நாட்டுப் பாடல்களின் மொழிபெயர்ப்புகள்.

தமிழிலிருந்து குமுதினியின் “அந்தப்புர தபால்“, புதுமைப்பித்தனின்சாப விமோசனம்“, அம்பையின் “அடவி” சிறுகதையிலிருந்து ஒரு பகுதி, பாரதியாரின்குதிரைக்கொம்பு” என்ற ஒரு வேடிக்கைக் கதை, சிவசேகரம் என்ற இலங்கை எழுத்தாளரின் ஒரு கவிதை. அசோகமித்ரனின்உத்தர ராமாயணம்” யார் கண்ணிலும் படுவதே இல்லை என்பது எனக்கு பெரிய குறையாக இருக்கிறது.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்குறிப்பு: இந்த புத்தகத்தை படித்துவிட்டு ஆப்ரே மேனன் எழுதிய ராமாயணத்தையும் (1954) படித்தேன். கொடுமை! கிண்டல் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டு என்னத்தையோ எழுதி இருக்கிறார். பாலா ரிச்மன் போன்ற முழு வெள்ளைக்காரிக்கு ராமாயணம் பிடிபடும்போது மேனன் போன்ற அரை இந்தியர் அரை வெள்ளைக்காரருக்கு பிடிபடவில்லையே என்று நினைத்துக் கொண்டேன். மேனன் எழுதிய புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறதாம். இப்படி தடை செய்யப்பட்டிருப்பதால்தான் இதன் பேர் இன்னும் நினைவில் இருக்கிறது என்று தோன்றுகிறது. இதை எல்லாம் ஃப்ரீயாக விட்டுவிடவேண்டும் என்ற புரிதல் என்றுதான் இந்திய அரசுக்கு வருமோ தெரியவில்லை.


தொகுக்கப்பட்ட பக்கம்: ராமாயணம்

தொடர்புடைய சுட்டிகள்:
குமுதினியின் “அந்தப்புர தபால்”
ஏ.கே. ராமானுஜனின் “300 Ramayanas
நார்லா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய “சீதா ஜோசியம்
புதுமைப்பித்தனின் “சாபவிமோசனம்

பாலா ரிச்மன் தொகுத்த “தென்னிந்தியாவில் இன்றைய ராமாயணக் கதைகள்”

Paula Richman’s “Ramayana Stories in Modern South India”


ரிச்மன் ராமாயண மறு வாசிப்புகளை – நாட்டுப் பாடல்கள், நவீன சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், சினிமா (காஞ்சன சீதா) என்று பலதரப்பட்ட மறு வாசிப்புகளைத் தொகுத்திருக்கிறார். நான் மிகவும் ரசித்துப் படித்த புத்தகங்களில் ஒன்று.

மறுவாசிப்புக்கும் சில தீம்கள் இருக்கின்றன; சீதையின் அக்னிப்ரவேசம், சீதையை ராமன் காட்டுக்கு அனுப்புவது, சூர்ப்பனகை, சம்புகன். கர தூஷணர், சுபாஹு-மாரீசன் மாதிரி பாத்திரங்களை வைத்து நான் எழுதினால்தான் உண்டு போலிருக்கிறது.

தெலுகு இலக்கியம் பற்றி அதிகம் தெரியவில்லை என்று சமீபத்தில் குறைப்பட்டுக் கொண்டிருந்தேன். இந்தப் புத்தகத்தில் சலம் எழுதிய சிறுகதை ஒன்று – அக்னிப்ரவேசம் என்றதும் சீதை உனக்கு ராவணனே மேல் என்று ராவணனின் சடலத்தோடு உடன்கட்டை ஏறிவிடுகிறாள்! வோல்கா லலிதகுமாரியின் சிறுகதையில் வால்மீகி ஆசிரமத்தில் இருக்கும் சீதையும் ஊனப்பட்ட சூர்ப்பனகையும் தோழிகள் ஆகிறார்கள். காவனசர்மா என்பவர் எழுதிய சிறுகதையில் சூர்ப்பனகை சீதையிடம் ஆண்களின் ஆதிக்கத்தைப் பற்றி உணர்த்துகிறாள். தவிர நாட்டுப் பாடல்களின் மொழிபெயர்ப்புகள். ஒன்றில் நேரத்துக்கு படுக்கைக்கு வரவில்லை என்று ராமன் குறைப்பட, சீதை மாமனார் மாமியாருக்கு சேவை செய்துகொண்டிருக்கிறாள். தாமதமாக வரும் சீதையை படுக்கை அறைக்கு உள்ளே அனுமதிப்பதில்லை, கௌசல்யா வந்து சமாதானப்படுத்த வேண்டி இருக்கிறது. இன்னொன்றில் பட்டாபிஷேகத்தின்போது 14 வருஷம் தூங்காத லக்ஷ்மணன் தனக்கு தூங்க நேரமாகிவிட்டது என்று நினைவுபடுத்த வரும் நித்ராதேவியைப் பார்த்து சிரிக்கிறான். ராமன் சீதை உட்பட எல்லாருக்கும் லக்ஷ்மணன் தங்களைப் பார்த்து இளக்காரமாக நகைக்கிறான் என்று குத்துகிறது.

மாப்ளா ராமாயணம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேரளத்தின் மாப்ளா முஸ்லிம்களின் நாட்டுப்பாடல்கள் போல பாடப்பட்டதாம். இன்று மறைந்துவிட்டது. பிராந்தன் (ஆம், பிராந்தன்தான்) ஹாசன்குட்டி என்பவர் ஒரு காலத்தில் இதைப் பாடித் திரிந்து கொண்டிருந்தபோது அதைக் கேட்ட டி.ஹெச். குன்ஹிராமன் நம்பியார் (T.H. Kunhiraman Nambiar) என்ற சிறுவன் மிகவும் ஆர்வமாக கிட்டத்தட்ட 700 வரிகளை மனப்பாடம் செய்திருக்கிறார். அறுபதுகளில் எம்.என். கரசேரி (M.N. Karassery) என்பவர் அதை ஆவணப்படுத்தி இருக்கிறார். இது ஹாசன்குட்டி ஆரம்பித்ததா இல்லை அதற்கு முன்பே பல காலமாக இருந்ததா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. ரிச்மன் இங்கே ஒரு நூறு நூற்றைம்பது வரிகளைக் கொடுத்திருக்கிறார். சூர்ப்பனகையை ராமன் ஷரியா விதிப்படி உன்னை ஏற்பதற்கில்லை என்று சொல்லும் இடத்தில் நான் வாய் விட்டுச் சிரித்துவிட்டேன்.

மலையாளத்திலிருந்து தொக்குக்கப்பட்ட பிற மறுவாசிப்புகள்: குமரன் ஆசானின் கவிதை, மற்றும் லலிதா லெனின், கே. சச்சிதானந்தன் ஆகியோரின் கவிதைகள்; கே.பி. ஸ்ரீதேவி (K.B. Sridevi) என்பவர் எழுதிய சிறுகதை புதுமைப்பித்தனின்சாபவிமோசனம்” சிறுகதையை எதிரொலிக்கிறது. (1990-இல் எழுதப்பட்டிருக்கிறது) என்.எஸ். மாதவன் என்பவர் அகல்யை கதையை நவீன காலகட்டத்தில் திருப்பி எழுதி இருக்கிறார்.

கன்னடத்தில் குவெம்புவின் சூத்திர தபஸ்வி நாடகத்திலிருந்து சில பகுதிகள். சம்புகனை ராமன் கொள்வதில்லை, புகார் செய்த பிராமணனுக்குத்தான் ஆபத்து! சித்திர ராமாயணா என்ற நாடகத்திலிருந்து சில பகுதிகள் (தொன்மையான கதையை ஹெச்.எஸ். வெங்கடேச மூர்த்தி நாடகம் ஆக்கி இருக்கிறார். சூர்ப்பனகையின் சூழ்ச்சியால் ராவணனின் படத்தை சீதை வரைகிறாள், படம் உயிர் பெற்றுவிடுகிறது. சீதையைத் தழுவ விரும்பும் ராவணனுக்கு சீதை சொல்லும் யோசனை – என் மகனாகப் பிற! சந்தேகக்கார ராமன் ராவணனோடு போரிடும்போது, நான் வரைந்த படம், என் “மகன்” என்று சீதை ராவணனை காப்பாற்றப் பார்க்கிறாள்.) சில நாட்டுப் பாடல்களின் மொழிபெயர்ப்புகள்.

தமிழிலிருந்து குமுதினியின் “அந்தப்புர தபால்“, புதுமைப்பித்தனின்சாப விமோசனம்“, அம்பையின் “அடவி” சிறுகதையிலிருந்து ஒரு பகுதி, பாரதியாரின்குதிரைக்கொம்பு” என்ற ஒரு வேடிக்கைக் கதை, சிவசேகரம் என்ற இலங்கை எழுத்தாளரின் ஒரு கவிதை. அசோகமித்ரனின்உத்தர ராமாயணம்” யார் கண்ணிலும் படுவதே இல்லை என்பது எனக்கு பெரிய குறையாக இருக்கிறது.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்குறிப்பு: இந்த புத்தகத்தை படித்துவிட்டு ஆப்ரே மேனன் எழுதிய ராமாயணத்தையும் (1954) படித்தேன். கொடுமை! கிண்டல் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டு என்னத்தையோ எழுதி இருக்கிறார். பாலா ரிச்மன் போன்ற முழு வெள்ளைக்காரிக்கு ராமாயணம் பிடிபடும்போது மேனன் போன்ற அரை இந்தியர் அரை வெள்ளைக்காரருக்கு பிடிபடவில்லையே என்று நினைத்துக் கொண்டேன். மேனன் எழுதிய புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறதாம். இப்படி தடை செய்யப்பட்டிருப்பதால்தான் இதன் பேர் இன்னும் நினைவில் இருக்கிறது என்று தோன்றுகிறது. இதை எல்லாம் ஃப்ரீயாக விட்டுவிடவேண்டும் என்ற புரிதல் என்றுதான் இந்திய அரசுக்கு வருமோ தெரியவில்லை.


தொகுக்கப்பட்ட பக்கம்: இதிகாசங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
குமுதினியின் “அந்தப்புர தபால்”
ஏ.கே. ராமானுஜனின் “300 Ramayanas
நார்லா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய “சீதா ஜோசியம்
புதுமைப்பித்தனின் “சாபவிமோசனம்

தமிழ்ச் சிறுகதை – ஜெயமோகன் பட்டியல் பாகம் 1

படிக்க வேண்டிய தமிழ் சிறுகதைகள் என்று ஜெயமோகன் ஒரு பட்டியல் போட்டிருக்கிறார். பெரிய லிஸ்ட். 250 சிறுகதைகள் தேறும். 75 எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். என்னுடைய reference-களில் ஒன்று இந்தப் பதிவு.

புதுமைப்பித்தனின் 12 சிறுகதைகள். அசோகமித்ரனுக்கும் 12. தி.ஜா., அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கோணங்கிக்கு தலா 8. சுஜாதாவுக்கு 7. பிச்சமூர்த்தி, லா.ச.ரா., ஆ. மாதவன், முத்துலிங்கம், வண்ணதாசன், கந்தர்வன், யுவன் சந்திரசேகர், ஜெயமோகன் ஆகியோருக்கு தலா 6. இந்த 17 பேருக்கும் ஏறக்குறைய பாதி கதைகள்.

பார்த்தவுடன் வழக்கம் போல என்ன இதில் படித்திருக்கிறோம் என்ன படிக்கவில்லை என்று கணக்கு ஆரம்பித்துவிட்டது. எனக்கு ஒரு எரிச்சலூட்டும், ஆனால் தீராத பிரச்சினை உண்டு. கதையை பற்றி இரண்டு வரி சொன்னால் தெரியும்; ஆனால் கதையின் தலைப்பு ஞாபகமே வராது.

250+ சிறுகதைகளை அவர் குறிப்பிட்டிருக்கிறார். நான் பகுதி பகுதியாகத்தான் இவற்றைப் பற்றி எழுத முடியும். முதல் பகுதியில் அவர் சொல்லி இருக்கும் புதுமைப்பித்தன் சிறுகதைகளைப் பற்றி சிறு குறிப்புகள். தமிழின் முதன்மையான எழுத்தாளர் யார் என்றால் நான் புதுமைப்பித்தனைத்தான் ஒரு கணம் கூட யோசிக்காமல் கை காட்டுவேன். அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். அவர் ஹெமிங்க்வே, மார்க்வெஸ், ஃபாக்னர், ஷா மாதிரி பிரபலமாக வேண்டும். தரமான மொழிபெயர்ப்பு, உலக அளவில் மார்க்கெடிங் வேண்டுமே! என்றாவது நான் பணக்காரன் ஆனால் இதுதான் முதல் வேலை…

கதை பேரைக் க்ளிக்க முடிந்தால் அழியாச்சுடர்கள் தளத்தில் கதையைப் படிக்கலாம். அன்றிரவு, வேதாளம் சொன்ன கதை, பால்வண்ணம் பிள்ளை ஆகியவை தவிர மிச்ச எல்லாம் அங்கே கிடைக்கிறது.

  1. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்: இந்தக் கதையில் அவர் என்னதான் சொல்ல வருகிறார், கடவுள் எதற்கு வந்தார், இங்கே வந்து என்ன சாதித்தார், moral of the story என்ன, ஓ. ஹென்றி ட்விஸ்ட் எங்கே, சிறுகதைக்கு இருக்க வேண்டிய உச்சம் எங்கே, இது என்ன genre என்றெல்லாம் கேட்டால் பதில் கிடையாது. அட் லீஸ்ட் என்னிடம் கிடையாது. மேதைகளுக்கு விதிகள் இல்லை, அவர்கள் விதிகளை உருவாக்குபவர்கள். இதையெல்லாம் அனுபவிக்கனும், ஆராயக்கூடாது! கதை பூராவும் ஓடிக் கொண்டிருக்கும் மெல்லிய நகைச்சுவை, (பிள்ளை சிவ பெருமானிடம் சொல்கிறார் – என் பத்திரிகைக்கு ஒரு ஆயுள் சந்தா வாங்கிக்கங்களேன்! சிவ பெருமானின் கவுண்டர் – யார் ஆயுள்?) சரளமான நடை, கந்தசாமிப் பிள்ளையின் பெண்ணின் சித்தரிப்பு எல்லாம் சேர்ந்து இந்த கதையை உன்னதமான ஒன்றாக்குகிறது. எனக்கு ஒரே ஒரு குறைதான் உண்டு – நடராஜனையும் பார்வதியையும் தெரியாத அயல் நாட்டினர் இந்தக் கதையை முழுமையாக ரசிக்க முடிக்க முடியாது, எந்த மொழிபெயர்ப்பும் இதன் கலாசார ஆழத்தை இந்தியாவுக்கு வெளியே கொண்டு போக முடியாது என்பது மட்டும்தான்.
  2. கயிற்றரவு: மனித இனத்தின் பெரும் தத்துவக் கேள்வியை – நான் யார்? – கேட்கிறது இந்தக் கதை. ஆனால் எனக்கு பிரமாதமாக ரசிக்கவில்லை.
  3. செல்லம்மாள்: இறந்துகொண்டிருக்கும் மனைவி என்று சுருக்கமாக கதையை சொல்லிவிடலாம். அதற்கு மேல் கதையை விவரிக்க ஒரு ஜெயமோகன்தான் வர வேண்டும். “குத்துவிளக்கை அவித்து வைத்த குருட்டுக் காமம்” என்ற வரி இன்னும் பேசப்படுவது.
  4. சிற்பியின் நரகம்: நாலைந்து முறை படித்தும் எனக்கு இந்தக் கதை இன்னும் சரியாக பிடிபடவில்லை. கலை அழகு மிகுந்த சிற்பம் கடவுளாக மாறிவிட்டதில் சிற்பிக்கு ஏற்பட்ட இழப்பு என்று நினைக்கிறேன்.
  5. கபாடபுரம்: மிக நல்ல fantasy. இன்று கூட அந்த மாதிரி ஒரு சிறுகதையை யாரும் தமிழில் எழுதவில்லை.
  6. ஒரு நாள் கழிந்தது: நான் முதன்முதலில் படித்த புதுமைப்பித்தன் சிறுகதை இதுதான். பள்ளிப்பருவத்தில் துணைப்பாடமாக இருந்தது. இதை எல்லாம் விவரிக்கக் கூடாது, படித்துக் கொள்ளுங்கள்!
  7. அன்றிரவு: நினைவு வரவில்லை, இப்போது பார்த்து புஸ்தகத்தையும் காணோம். யாரப்பா இரவல் வாங்கியது?ஜடாயு நினைவுபடுத்தினார், பிறகு பாஸ்கர் தந்த சுட்டியிலும் போய்ப் பார்த்தேன். எனக்கு இந்தக் கதை சுமார்தான். என்ன சொல்கிறார் என்று சரியாகப் புரியவில்லை. அலகிலா விளையாட்டு என்கிறாரா? எனக்கு இந்த லீலா வினோதம் எல்லாம் புரிவதில்லை. புரிந்தால் நான் ஏன் இந்த வாழ்க்கை வாழ்கிறேன்? நான் மனக்குகை ஓவியங்கள் என்ற கதையில் வரும் மனிதன் கட்சி. 🙂
  8. சாமியாரும் குழந்தையும் சீடையும்: இதில் என்ன இருக்கிறது என்று ஜெயமோகன் இதைப் புகழ்கிறார்? அவரே கோனார் நோட்ஸ் எழுதினால்தான் புரியும்…
  9. காலனும் கிழவியும்: கதையின் நகைச்சுவை இதை உச்சத்துக்குக் கொண்டுபோகிறது. ஆனால் என் anthology-யில் இடம் பெறாது.
  10. சாப விமோசனம்: இதுவும் அயல்நாட்டினர் புரிந்து கொள்வது கஷ்டம் என்ற ஒரு குறையைத் தவிர வேறு எதுவும் இல்லாதது. பெண்ணியம், ஆணாதிக்கம் என்று பக்கம் பக்கமாக எழுதுபவர்களை விட இந்த ஒரு கதை ஏற்படுத்தும் தாக்கம் பெரிது. படித்தவர்களுக்கு கதையை விவரிக்க வேண்டியதில்லை, படிக்காத அதிர்ஷ்டக்காரர்களுக்கு நல்ல வாசிப்பு அனுபவம் காத்திருக்கிறது.
  11. வேதாளம் சொன்ன கதை: என்ன சார் இதையெல்லாம் லிஸ்டில் சேர்க்கிறீர்களே?
  12. பால்வண்ணம் பிள்ளை: அவ்வளவு பிரபலம் ஆகாத, ஆனால் உலகத் தரம் வாய்ந்த சிறுகதை. அசூயைக்கு ஒரு கதை என்று தி.ஜா.வின் பாயசத்தைப் பற்றி சொல்லி இருந்தேன். வீம்புக்கு ஒரு கதை என்று இதை சொல்லலாம்.

அடுத்த முறை அவரைப் பார்த்தால் சண்டை போட வேண்டும் 🙂 – எப்படி மனித இயந்திரம், பொன்னகரம், சுப்பையா பிள்ளையின் காதல்கள் மாதிரி கதைகளை விடலாம்? இந்த லிஸ்டை அவர் இங்கே வருவதற்கு முன்பே பார்த்திருந்தால் அவர் இங்கே வந்திருந்தபோது கேட்டிருக்கலாம். எனக்கு நம்பர் ஒன் மனித இயந்திரம்தான். கணக்குப் பிள்ளை பணத்தை திருடிக்கொண்டு ஓடி விட நினைக்கிறார். அதற்கு மேல் நான் சொல்வதாக இல்லை. பொன்னகரத்தில் வரும் “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்” என்ற வரி மறக்க முடியாதது. பக்கம் பக்கமாக பேசினாலும் பதியாத கருத்தை ஆறு வார்த்தைகளில், ஒரே ஒரு வரியில் கற்பு எவ்வளவு செயற்கையான கருத்து என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விட்டார்!

எஸ்.ரா. க.க. பிள்ளை, செல்லம்மாள் மற்றும் காஞ்சனை ஆகியவற்றை தன் தேர்வுகள் என்று சொல்கிறார். காஞ்சனை படிக்கக் கூடிய கதைதான்; அவர் எழுதிய ஒரே பேய்க்கதையோ? ஆனால் காஞ்சனையை நான் சிறந்த சிறுகதை என்று சொல்லமாட்டேன்.

சுஜாதா மனித எந்திரம் கதையைத்தான் நிறைய மாணிக்கங்களில் தலை சிறந்ததாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

என்னுடைய anthology-யில் க.க. பிள்ளை, செல்லம்மாள், ஒரு நாள் கழிந்தது, சாப விமோசனம், பால்வண்ணம் பிள்ளை சிறுகதைகள் இடம் பெறும். மேலே சொன்ன சு. பிள்ளையின் காதல்கள், பொன்னகரம், மனித எந்திரம் ஆகியவை இடம் பெறும். எனக்கு புதிய கூண்டு என்ற கதை ஒரு tour de force. கல்யாணி இன்னொரு ரத்தினம். கல்யாணிக்கு கணவனை ஏமாற்றி இன்னொருவனுடன் உறவு கொள்ளும் தைரியம் இருக்கிறது.

சாதாரணமாக பேசப்படாத, ஆனால் எனக்குப் பிடித்த இரண்டு கதைகள்: ஞானக் குகை, பிரம்ம ராக்ஷஸ். ஞானக் குகை கதை சென்னை லைப்ரரி தளத்தில் முழுமையாக இல்லை. கொஞ்சம் மூளை சரியில்லாத இளைஞனுக்கு பராசக்தியின் தரிசனம் கிடைக்கிறது. அவன் பராசக்தி தனது மனைவி என்று நினைக்கிறான். பிரம்ம ராக்ஷஸ் கதையில் நன்னய பட்டன் உடல் இல்லாத உயிர். மீண்டும் உடலைப் பெற முயற்சிக்கிறான். ஆனால் கணவனை விட்டுவிட்டு அவனுடன் ஓடும் தைரியம் இல்லை. உணர்ச்சிகரமான துன்பக்கேணியில் இலங்கையில் கூலி வேலைக்கு போகும் பெண்ணின் துயரம். மிச்சத்தை தேடித்தான் பார்க்க வேண்டும். (கூடிய விரைவில் anthology-யை பதிக்க வேண்டும்.)

நண்பர் பாஸ்கர் சென்னை லைப்ரரி தளத்தில் புதுமைப்பித்தனின் எல்லாக் கதைகளும் இருக்கின்றன என்ற தகவலைக் கொடுத்திருக்கிறார். மகாமசானம் என்ற சிறுகதையையும் குறிப்பிட்டிருக்கிறார். எனக்கு மகாமசானத்தை விட செல்லம்மாள் சிறுகதை பிடிக்கும். ஓரளவு ஒத்த தீம் உள்ள கதைகள். சுந்தர ராமசாமி மகாமசானம் கதையை தனக்கு எழுதுவதற்குத் தூண்டுதலாக அமைந்தது என்று சொல்லி இருக்கிறார்.

புதுமைப்பித்தனுக்கு பெண் குழந்தை இருந்திருக்க வேண்டும். அவர் கதைகளில் வரும் பெண் குழந்தைகளை தூக்கி வைத்துக் கொஞ்ச வேண்டும் போல இருக்கிறது. க.க. பிள்ளை, ஒ.நா. கழிந்தது ஆகியவற்றில் வரும் பெண் குழந்தைகளின் சித்தரிப்பைப் பாருங்கள்!

தொடர்புடைய பதிவுகள்
ஜெயமோகனின் சிறுகதை தேர்வுகள்
புதுமைப்பித்தனின் எல்லாக் கதைகளும்

ஏன் படிக்கிறேன்?

(மீள்பதிவு)

இந்தப் பதிவு 2010 செப்டம்பரில் முதல் முறையாக எழுதப்பட்டது. இந்தத் தளத்தின் முதல் பதிவு இதுதான். எழுதியபோது அப்போது வந்துகொண்டிருந்த யூத்ஃபுல் விகடனில் நல்ல பதிவாக குறிப்பிட்டிருந்தார்கள். பாஸ்கர், கிரி இரண்டு பேரும் தங்கள் காரணங்களை எழுதினார்கள். ஜெயமோகன் இதைப் பற்றிய என் கடிதத்தைப் பிரசுரித்திருந்தார்.

இன்று மீண்டும் படிக்கும்போது கொஞ்சம் சோகமாக இருக்கிறது. ஏனென்றால் இத்தனை வருஷங்கள் கடந்தும் எனக்கு வேறு காரணங்கள் இல்லை, இந்தப் பதிவு அப்படியே பொருந்துகிறது. தேக்க நிலையோ என்று தோன்றுகிறது.

இன்றும் அதே வேண்டுகோள்தான். இந்தப் பதிவைப் படிப்பவர்கள் தாங்கள் ஏன் படிக்கிறார்கள் – குறிப்பாக புனைவுகளை ஏன் படிக்கிறார்கள் – என்று சொல்லுங்களேன்!

எனக்கு கொஞ்ச நாளாகவே இந்த கேள்வி இருக்கிறது. எதற்காக படிக்கிறோம், குறிப்பாக புனைகதைகளை எதற்காக படிக்கிறோம்?

கதை கேட்பதும் படிப்பதும் பார்ப்பதும் நம் ரத்தத்திலேயே ஊறி வந்திருக்கிறது என்று தோன்றுகிறது. அம்மாவும் பாட்டியும் தூங்க வைக்க சொன்ன கதைகளும், காலட்சேபமும், தெருக்கூத்தும், சினிமாவும், படித்த புத்தகங்களும், தன்னை எம்ஜிஆராகவும் ஜெய்ஷங்கராகவும் நினைத்து கண்ட பகல் கனவுகளும் கதைதானே! அதில் ஒரு சந்தோஷம், நிறைவு! அந்த சந்தோஷத்தை என்னால் லாஜிகலாக விளக்க முடியவில்லை. ஆனால் எப்போது அந்த நிறைவு கிடைக்கிறது, அந்த நிறைவுக்கு என்ன அறிகுறி என்றாவது சொல்ல முடியுமா என்று பார்க்கலாம்.

அறிகுறி என்றால் இன்னும் எத்தனை பக்கம் இருக்கிறது என்று செக் செய்கிறேனா இல்லையா என்பதுதான். இன்று ஒரு கதையை கேட்கும்/பார்க்கும்/படிக்கும்போது அந்த கதையை நம்முடைய மன அலமாரியில் எங்கே பொருத்தலாம், சிறந்த புத்தக வரிசையிலா, டைம் பாஸ் வரிசையிலா, இல்லை குப்பையா என்று மனதில் எண்ணங்கள் ஓடுவது தெளிவாகத் தெரிகிறது. ஒரு புத்தகத்தை படிக்கும்போது இன்னும் எத்தனை பக்கம் இருக்கிறது என்று புரட்டி கடைசி பக்கத்தின் எண்ணைப பார்த்தால் எண்ண ஓட்டங்கள் மறையவில்லை என்று நிச்சயமாக சொல்லலாம். இப்படி எத்தனை பக்கம் இன்னும் இருக்கிறது என்று பார்ப்பது எனக்கு அனேகமாக எல்லா துப்பறியும் கதைகளிலும் நடக்கும், சில சமயம் க்ளைமாக்சை முதலில் படித்துவிடுவேன். 🙂 அப்படி எந்த எண்ண ஓட்டமும் இல்லாமல் படிப்பதிலோ, பார்ப்பதிலோ மனம் முழுமையாக ஆழ்ந்தால் படிப்பது சிறந்த புத்தகம், பார்ப்பது சிறந்த சினிமா. அப்படி முழுமையாக மனம் ஆழ்வது என்பது மேலும் மேலும் அபூர்வமாகிக் கொண்டிருக்கிறது. ஹாரி பாட்டர் புத்தகங்கள் படிக்கும்போது அப்படி நடந்தது. ஏழாவது உலகம், விஷ்ணுபுரம், பொய்த்தேவு மாதிரி புத்தகங்கள் படிக்கும்போது வேறு எண்ணம் வரவில்லை. ஆனால் இதய நாதம் மாதிரி ஒரு புத்தகம் படிக்கும்போது எண்ண ஓட்டங்கள் மறைவதில்லை. இப்போதெல்லாம் முக்கால்வாசி புத்தகங்களில் கடைசி பக்க எண்ணை பார்ப்பது நிகழ்கிறது.

மிச்ச கால்வாசி புத்தகங்களுக்காகத்தான் படிக்கிறேன். அந்த கால்வாசி புத்தகங்களின் குணாதிசயங்கள் என்ன என்று யோசித்துப் பார்த்தால்:

  • மனிதனின் உச்சங்களை, அதீத உணர்ச்சிகளை உண்மையாக காட்டும்போது

அந்த நிலையை – அன்பு, பாசம், நட்பு, நேர்மை, உண்மை என்ற உயர்ந்த நிலையாகட்டும், இல்லை குரூரம், சுயநலம், வெட்டி பந்தா, கயமைத்தனம், போலித்தனம் மாதிரி தாழ்ந்த நிலையாகட்டும் – அதை உண்மையாக சித்தரிக்கும்போது பெரும் மன எழுச்சியோ, இல்லை சீ, மனிதன் இவ்வளவுதானா என்ற வெறுப்போ எழுகிறது. அந்த அன்பும் பாசமும் குரூரமும் சுயநலமும் நம்முள்ளும் இருக்கிறது என்ற உண்மையும் தெரிகிறது. To Kill a Mockingbird படிக்கும்போது என் குழந்தைகளுக்கும் எனக்கும் அட்டிகசுக்கும் ஸ்கவுட்டுக்கும் உள்ள உறவு இருக்க வேண்டும் என்று தோன்றியது. (படித்து பத்து வருஷத்துக்கு பிறகுதான் என் முதல் பெண் பிறந்தாள்.) அப்போதெல்லாம் நண்பர்கள் யார் கர்ப்பமானாலும் அவர்களுக்கு இந்த புத்தகத்தை வாங்கி பரிசளிப்பேன். உதாரணமாக மோக முள், பின் தொடரும் நிழலின் குரல், Les Miserables போன்ற புத்தகங்களை படிக்கும்போது இப்படி உணர்ந்தேன்.

  • சிந்திக்க வைக்கும்போது

புனைகதைகளுக்கு சிந்திக்க வைக்கும் ஆற்றல் அதிகம். கற்பு, பெண்ணியம் என்று பக்கம் பக்கமாக எழுதலாம். “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்!” என்ற ஒரு வரி கற்பு என்ற கருத்தில் இருக்கும் செயற்கைத்தன்மையை காட்டிவிடுகிறது. சீதையின் அக்னி பிரவேசத்தைப் பற்றி கேட்ட அகலிகை மீண்டும் கல்லானாள் என்ற நாலு பக்க கதை ஆயிரம் ஆயிரம் வருஷமாக வழிப்படப்படும் ராமனின் முரண்பாட்டை காட்டிவிடுகிறது. Atlas Shrugged-இல் ஃபிரான்சிஸ்கோ டன்கொனியா money is the root of all evil என்ற கருத்தைப் பற்றி ஆற்றும் ஒரு மூன்று பக்க “சொற்பொழிவு” பணக்காரன் என்றால் கெட்டவன் என்றே கேட்டு வளர்ந்த என்னை வேறு விதத்தில் சிந்திக்க வைத்தது. All Quite on the Western Front நாவல் போர் என்றால் கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், பங்களாதேஷ் கொண்டாள் மாதிரி ஹீரோக்களுக்கான, வீரம் செறிந்த ஒரு நிகழ்வு என்று நினைத்திருந்த எனக்கு போரின் dehumanization பற்றி புரிய வைத்தது.
ஆனால் இவற்றுக்கு ஒரு குறை உண்டு. பொன்னகரம் கதை கற்பைப் பற்றி பெரிதாக கவலைப்படாத ஒரு சமூகத்திடம் என்ன பாதிப்பை ஏற்படுத்த முடியும்? அவர்களுக்கு நளாயினி கதையோ, சீதையின் கதையோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். (அப்படித்தான் இந்திய பழங்குடி சமூகங்களிடம் நடந்திருக்க வேண்டும் என்பது என் தியரி.) உங்களுக்கு போதிக்கப்பட்ட, நீங்கள் கற்ற சிந்தனைகளை தாண்டும் கதைகள் உங்களிடம் பாதிப்பை ஏற்படுத்தலாம். எல்லாரிடமும் ஏற்படுத்த முடியாது என்று நினைக்கிறேன்.
சில science fiction கதைகள் இந்த குறைபாட்டை தாண்டுகின்றன. அவற்றில் மனித இனத்தின் அடிப்படை கொஞ்சம் மாற்றப்படுகிறது. உதாரணமாக உர்சுலா லீ க்வினின் sexuality பற்றிய விஞ்ஞானக் கதைகள் – ஒரு கதையில் மனித இனத்துக்கும் ஒரு mating season உண்டு. அப்போது கிடைக்கும் stimuli-ஐ வைத்து நீங்கள் ஆணாகவோ பெண்ணாகவோ மாறலாம். சீசன் முடிந்த பிறகு நீங்கள் “பழைய நிலைக்கு” திரும்பிவிடுவீர்கள். இப்படி ஒன்று நடந்தால் மனித சமூகம் – குடும்பம், உறவுகள், காதல், கத்தரிக்காய் – எல்லாம் என்ன ஆகும்?

  • ஒரு புதிய உலகம் என் கண்ணால் முன்னால் விரியும்போது

மகாபாரதம், விஷ்ணுபுரம், ஹாரி பாட்டர், Lord  of  the  Rings, மோக முள், Atlas  Shrugged, One Hundred Years of Solitude, To Kill a Mockingbird மாதிரி புத்தகங்களை குறிப்பிடலாம். அந்த உலகத்தின் எழுதப்படாத விதிகள், அவர்கள் மனநிலை புரியும்போது, அதை ஒரு சித்திரமாக எழுத்தாளன் தீட்டும்போது, அதில் முழுமையாக ஆழ்ந்துவிடுகிறேன்.
ஒரு உதாரணம் சொல்கிறேன் – செயின்ட் எக்ஸுப்பரி ஒரு புத்தகத்தில் சஹாரா பாலைவனத்திலிருந்து வந்த ஒரு tribal தலைவன் நீர்வீழ்ச்சி ஒன்றை பார்க்கும் அனுபவத்தை எழுதுகிறார் – அந்த தலைவன் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருந்தானாம் – “I can’t understand this!” பாலைவனம், தண்ணீர் தட்டுப்பாடு என்பதை இதை விட அழகாக சொல்ல முடியாது. ஒரு வாக்கியத்தில் அந்த tribe-க்கு தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்று தெரிந்துவிடுகிறது.
நுண்விவரங்கள் நிரம்பி இருந்தால் மீண்டும் மீண்டும் படிக்கவும் தோன்றுகிறது, ஒவ்வொரு முறை படிக்கும்போது மிஸ் செய்துவிட்ட நுண்விவரங்கள் தெரிகின்றன. ஹாரி பாட்டரில் கதையை விட, அதில் மாஜிகல் வாழ்க்கை முறையை காட்டும் விஷயங்கள் – நகரும் புகைப்படங்கள்+ஓவியங்கள், க்விட்டிச் விளையாட்டு, Marauder’s map, மாஜிக் செய்தித்தாள்கள், மாஜிக் tabloids – எல்லாம் சுவாரசியத்தை கூட்டுகின்றன.
இதில் ஒரு sub-category உண்டு. ஒரு தருணத்தை புகைப்படம் மாதிரி அருமையாக capture செய்யும் கதைகள். அசோகமித்ரன் இதில் நிபுணர். காலமும் ஐந்து குழந்தைகளும், புலிக்கலைஞன், கார் ஓட்டக் கற்றுக் கொள்ளும் அந்த ஒரு நொடி பற்றிய ஒரு கதை என்று நிறைய சொல்லலாம்.

  • முடிச்சுகள் பர்ஃபெக்டாக அவிழும்போது

இது ஒரு கலை. பொன்னியின் செல்வன் மிக சிறந்த உதாரணம். பல ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள், சில அகதா கிறிஸ்டி நாவல்களை சொல்லலாம்.

  • வாய் விட்டு சிரிக்கும்போது

வாய்விட்டு சிரிப்பது அபூர்வமாகிக் கொண்டே போகிறது. சாகியின் Open Window நினைவு வருகிறது. ஒரு காலத்தில் வுட்ஹவுஸ் எழுத்துகளைப் படித்துவிட்டு ரயிலிலும் பஸ் ஸ்டாண்டிலும் சிரித்துவிட்டு பிறகு எல்லாரும் என்னை விநோதமாகப் பார்ப்பதை உணர்ந்து தலை குனிந்து படித்திருக்கிறேன். இப்போது வுட்ஹவுசைப் படித்தால் புன்முறுவல் வருவதே அபூர்வமாக இருக்கிறது.

  • சிறு வயதில் இருந்த ஒரு காரணம் இப்போது இல்லை. பகல் கனவு!

பகல் கனவு சந்தோஷம் தர காரணம் சிம்பிள். It strokes the ego. செயற்கரிய செயல் செய்வதாக fantasize செய்யும்போது ஒரு அற்ப பெருமை. ஆனால் பகல் கனவு என்பதெல்லாம் சின்ன வயதிலேயே போய்விட்டது. அதாவது சின்ன வயதில் இருந்த ஒரு காரணம் காலி.

உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். படிப்பதற்கு இன்னொரு prosaic காரணமும் இருக்கிறது. நிறைவு/சந்தோஷம் மட்டுமில்லை, பழக்கமும் மிக முக்கியமான காரணம் மனதும் கையும் பல சமயங்களில் அனிச்சையாக புத்தகத்தை நாடுகின்றன. சின்ன வயதில் வேர்க்கடலை சுற்றி வந்த பேப்பரை எல்லாம் கூட படிப்பேன். அப்போது எல்லா புத்தகங்களையும் படித்துவிடவேண்டும் என்ற ஒரு வெறி இருந்தது. பதின்ம வயதில் கணிசமான நேரத்தை என்ன புத்தகம் படிக்க வேண்டும் என்று லிஸ்ட் போடுவதில் செலவழித்தேன். முதல் முறையாக எங்கள் கிராம நூலகத்தில் இருந்த எல்லா புத்தகங்களையும் கூட படிக்க முடியாது என்று ஒன்பது, பத்து வயதில் உணர்ந்தபோது ரொம்ப துக்கமாக இருந்தது. அப்போது ஆரம்பித்த பழக்கம் – சிலருக்கு சிகரெட் மாதிரி எனக்கு இது ஒரு addiction-தானோ என்று சில சமயம் தோன்றுகிறது.

எனக்கு இருக்கும் காரணங்கள் உங்களுக்கு இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நீங்கள் ஏன் படிக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன காரணங்கள், என்னுடைய காரணிகளில் ஏதாவது உங்களுக்கும் பொருந்துமா என்று எழுதுங்களேன்!

தொகுக்கப்பட்ட பக்கம்: வாசிப்பு அனுபவங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
யூத்ஃபுல் விகடனில் “ஏன் படிக்கிறேன்” பதிவு குட் ப்ளாக் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது
ஏன் படிக்கிறேன்? – பாஸ்கர், பாஸ்கரின் பதிவு பற்றி நான்