சுஜாதா: நில் கவனி தாக்கு

sujathaநில் கவனி தாக்கு சுஜாதாவின் ஆரம்ப கால முயற்சிகளில் ஒன்று. விறுவிறுவென்று போகும் கதை. ஜேம்ஸ் பாண்ட் பாணியில் எழுத வேண்டும், அந்தக் காலகட்டத்தின் யூத்துக்கு அப்பீல் ஆக வேண்டும் என்று முனைந்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். கடைசி ட்விஸ்ட் இந்தக் கதையை நினைவு கொள்ள வைக்கிறது.

விறுவிறுப்பாக செல்லும் சாகசக் கதை. இன்றும் படிக்கலாம். ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் கதைகளுக்கு ஒரு படி மேலாகத்தான் மதிப்பிடுகிறேன்.

Version 1.0.0

நாயகன் இளைஞன், உளவுத்துறை அதிகாரி. அவரது திறமையான உயர் அதிகாரி நடேசன். விஞ்ஞானி ராமச்சந்திரனை விமான நிலையத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்து வரும் பணி. ரேணு என்ற அழகியைப் பார்த்து ஜொள்ளு விடுவதில் கோட்டை விட்டுவிடுகிறார். ராமச்சந்திரன் கடத்தப்படுகிறார். காபரே பார்த்து, ரேணுவை பயமுறுத்தி, ரேணுவின் மனத்தை மாற்றி அவள் உதவியைப் பெற்று, ராமச்சந்திரனை மீட்கிறார். ஆனால் பார்த்தால் நடேசனே துரோகி, அவர்தான் கடத்தலை ஏற்பாடு செய்திருக்கிறார். நடேசனை கைதாகிறார், ஆனால் தப்பியும் விடுகிறார். அங்கே ஒரு ட்விஸ்டோடு கதை முடிகிறது.

குறுநாவலை மீண்டும் படித்தபோது எங்கெல்லாம் அவர் அன்றைய எழுதப்படாத விதிகளுக்குக் கட்டுப்பட்டு எழுதி இருக்கிறார், எங்கெல்லாம் மீற முயன்றிருக்கிறார் என்பதைத்தான் புன்னகையோடு படித்துக் கொண்டிருந்தேன். ஜேம்ஸ் பாண்ட் பாணி என்று தீர்மானித்தாயிற்று, அதனால் சாகசக் கதையாகவே இருந்தாலும் நாயகி அவசியம்; நாயகியோடு சில தடவல்கள் இன்னும் அவசியம். காபரே நடனம் ஒன்றை புகுத்தி இருக்கிறார், நிச்சயம் எழுபதுகளின் ஆரம்பத்தில் கிளுகிளுப்பாக உணர்ந்திருப்பார்கள். இவற்றை எல்லாம் அதிகம் உறுத்தாமல் கதைப்போக்கில் புகுத்தி இருப்பதில்தான் அவரது சாமர்த்தியம் தெரிகிறது.

நிச்சயமாக சுஜாதா ரசிகர்கள் படிக்க வேண்டும். மற்றவர்களும் படிக்கலாம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்