தி. ஜானகிராமன் சிறுகதைகள்

தி.ஜா. சிறுகதைகளின் மாஸ்டர். அவரது சிறுகதைகள் எனக்கு செகாவைத்தான் நினைவுபடுத்துகின்றன. இத்தனைக்கும் செகாவின் சிறந்த சிறுகதைகள் வெறுமே கோடு போட்டுத்தான் காட்டுகின்றன, பலவற்றை நாம்தான் நிரப்பிக் கொள்ள வேண்டும். தி.ஜா. விவரித்துவிடுவார். என்னதான் ஒற்றுமை என்று யோசித்துப் பார்த்தால் இருவர் எழுத்தும் மிகச் சுலபமாக, முயற்சியே செய்யாமல், கதாசிரியனின் எந்த வித தலையீடும் இல்லாமல் மனிதர்களைக் காட்டிவிடுவதுதான். தலையீடு என்பது சரியான வார்த்தை இல்லை, அதனால் இப்படி சொல்கிறேன். புதுமைப்பித்தனின் நான் உனக்கு காட்டுகிறேன் என்ற தொனி இல்லை. ஜெயமோகனின் உணர்ச்சி கொந்தளிப்புகள் இல்லை. அசோகமித்திரனின் பார் நான் இல்லவே இல்லை என்ற முனைப்பும் இல்லை.

அவரது கொட்டுமேளம் சிறுகதைத் தொகுப்பைப் பற்றி எப்போதோ எழுதி இருந்தேன். இந்த முறை கண்ணில் அவ்வப்போது பட்ட அவரது சிறுகதைகள் பற்றி:

வேதாந்தியும் உப்பிலியும் சிறுகதையில் பிய்த்து உதறுகிறார். மனிதர்களின் களங்கங்களை வெளிச்சம் போட்டு காட்டுவதில் அவருக்கு இணை அவர்தான்.

அவலும் உமியும்: பாயசம் மற்றும் கடன் தீர்ந்தது சிறுகதைகளை நினைவுபடுத்தியது. வாடகைக்கு குடியிருக்கும் குடும்பத்துக் குழந்தை புஷ்டியாக இருப்பதைக் கண்டு வீட்டு சொந்தக்காரர் காயாப்பிள்ளைக்கு கொஞ்சம் எரிகிறது – இல்லை இல்லை அசிகை.

முள்முடி போன்ற சிறுகதைகள் எங்கே போகும் என்று முதல் பாராவை படிக்கும்போதே தெரிந்துவிடுகிறது. ஆனால் அவரது தொழில் திறமை வெளிப்படுகிறது.

திண்ணை வீரர் அவரது ஆரம்ப கால சிறுகதையாக இருக்க வேண்டும். ‘எழுந்து வந்தேன்னா’ என்பது சின்ன முடிச்சாக இருக்கிறது, சிறு புன்னகைதான் வருகிறது.

பூட்டுக்கள் சிறுகதையிலும் சின்ன முடிச்சுதான், சிறு புன்னகைதான் வருகிறது.

கங்காஸ்னானம் கடன் தீர்ந்தது சிறுகதையை நினைவுபடுத்தியது. படிக்கலாம்.

thi_janakiramanகமலம்: கதை செயற்கையாக இருக்கிறது. வீட்டு சமையல்காரனை மகனாகப் பாவிக்கும் எஜமானியம்மா சும்மா டமாஸுக்கு அவனை வைத்துக் கொண்டிருப்பதாக ஒரு புரளியைக் கிளப்பி விடுகிறாளாம்.

தோடு: ஏழைப்பெண் பட்டுவின் ஆசைப்படியே அவள் பணக்கார, அழகான முத்துராமுவை மணக்கிறாள். ஆனால் குடும்பத்தின் குறைகள் மெதுமெதுவாக அவளுக்குத் தெரிய வருகின்றன.

மேரியின் ஆட்டுக்குட்டியை குறிப்பிட ஒரே காரணம்தான். உறவு கொண்ட பெண் கர்ப்பம் என்று தெரிந்ததும் பொய்ச் சத்தியம் செய்ய பெண்ணின் விரல்களைப் பிடித்துக் கொள்கிறான். அந்த விரல்களின் விவரிப்புதான்.

பஞ்சத்து ஆண்டி நல்ல விவரிப்பு, ஆனால் இது போன்ற பஞ்சங்களை நான் கேள்விப்பட்டதோடு சரி. அதனால்தானோ என்னவோ என் மனதைத் தொடவில்லை. பலரும் சிலாகிக்கும் மிருகம் சிறுகதையும் (வண்ணநிலவன்) இதே போலத்தான் என் மனதைத் தொடவில்லை.

விசைவாத்தின் முத்தாய்ப்பு சின்ன புன்முறுவலை வரவழைக்கிறது, ஆனால் பெரிதாக நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய சிறுகதை அல்ல.

பெட்டி வண்டி போன்றவை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை அல்ல.

அடுத்த வீடு 50 மைல்: தி.ஜா.வின் ஆஸ்திரேலியப் பயணக் குறிப்புகள். அவர் சென்ற காலத்தில் அதிசயமாக இருந்த barbecue, ஹோட்டல் அறைகளில் தானே காஃபி போட்டுக் கொள்ளும் வசதி என்பதெல்லாம் இப்போது நமக்குப் பழகிவிட்டன.

தன் சொந்த ஊரான கீழ்விடவியல் (1969) பற்றி அவர் எழுதிய கட்டுரையில் தலித்கள் – அவர் ஹரிஜன் என்றுதான் குறிப்பிடுகிறார் – நிலை மாறிவிட்டது என்று எழுதி இருந்தார், இன்று நிலவரம் அன்றை விட மோசமாக இருக்குமோ என்று தோன்றுகிறது, தமிழகத்தில் ஜாதி உணர்வு அதிகமாகிக் கொண்டே போவது போல உணர்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம்

————————-