சந்திரபாபு: கண்ணீரும் புன்னகையும்

சந்திரபாபு வசீகரமான ஆளுமை. ஆனால் ஒரு நடிகராக அவர் என்னை பெரிதாக கவர்ந்ததில்லை. அவரது வீழ்ச்சியில் இருக்கும் கவர்ச்சிதான் அவர் இன்றும் பேசப்படுவதின் காரணமோ என்று சில சமய்ம் தோன்றுகிறது.

பாபு மிகைநடிப்பு பாணியை பின்பற்றியவர். இல்லாத கொனஷ்டை எல்லாம் செய்தார். நடிப்பு என்பதை விட அதை எப்படி ஸ்டைலாக செய்ய முடியும் என்பதில்தான் அவரது முனைப்பு இருந்தது. அவர் எழுதிய கதைகளும் (பாவமன்னிப்பு, தட்டுங்கள் திறக்கப்படும்…) அதி-மெலோட்ராமா கதைகள்தான். எனக்குத் தெரிந்து அப்படி மிகைநடிப்பும் கொனஷ்டையும் செயற்கையாகத் தெரியாத ஒரே நடிகர் எம்.ஆர். ராதாதான். இன்று பாபுவின் நடிப்பு பாணி காலாவதி ஆகிவிட்டது, அபூர்வமாகவே ரசிக்க முடிகிறது. (சபாஷ் மீனா, மணமகன் தேவை என்ற வெகு சில திரைப்படங்கள்தான் நினைவு வருகிறது)

ஆனால் அவரது வாழ்க்கை! சோற்றுக்கே திண்டாட்டம், வேலை கிடைக்காமல் தற்கொலை முயற்சி என்ற நிலையில் ஆரம்பித்து சில ஆண்டுகளாவது சூப்பர்ஸ்டாராக இருந்தார். சபாஷ் மீனாவில் நடிக்க சிவாஜியை விட ஒரு ரூபாய் அதிக சம்பளம் வேண்டுமென்று பிடிவாதம் பிடித்து வாங்கிக் கொண்டாராம். சகோதரி திரைப்படம் மகாசோகம், நகைச்சுவை வேண்டுமென்று இவரைக் கேட்க அன்று ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டாராம். கவலை இல்லாத மனிதன் திரைப்படத்தை எடுத்த கண்ணதாசனை கவலையே உருவான தயாரிப்பாளர் என்ற நிலைக்கு தள்ளிவிட்டாராம். (பிற்காலத்தில் எம்ஜிஆர் இதை இவருக்கு திருப்பி செய்ததை பிராரப்த கர்மம் என்றுதான் சொல்ல வேண்டும்.) எம்ஜிஆரை வைத்து மாடி வீட்டு ஏழை திரைப்படம் எடுக்க முயற்சியில் பெரிய அடி, மணந்த பெண் வேறொருவனைக் காதலித்தாள் என்று தெரிந்ததும் அவனோடு சேர்த்து வைத்தது இன்னொரு அடி, சொந்தப் படம் எடுத்து பணம் எல்லாம் போனது இன்னொரு அடி, மீண்டும் சோற்றுக்கே திண்டாட்டம் என்ற நிலையில் முடிந்திருக்கிறார். குடிதான் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். கடைசி காலத்தில் தேங்காய் சீனிவாசன், பாலாஜி, எம்எஸ்வி எல்லாரும் உதவி இருக்கிறார்கள்.

முகிலின் கண்ணீரும் புன்னகையும் புத்தகம் இந்த நிகழ்ச்சிகளைத்தான் விவரிக்கிறது. அதுவும் எம்.ஜி. சக்ரபாணியுடன் போட்ட சண்டை, கடைசி காலத்தில் எம்ஜிஆரை சகட்டுமேனிக்கு தாக்கி எழுதியது எல்லாம் விவரமாக இருக்கிறது. தமிழ் திரைப்படங்களில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். மற்றவர்களுக்கு அலுப்பு தட்டலாம்.

என் கண்ணில் பாபு அவரது பாடல்களால் மட்டும்தான் நினைவு கூரப்படுவார்.

Manorama
குன்றில் குமார் என்பவர் எழுதிய ஆச்சி மனோரமா (2016) என்ற புத்தகத்தைப் பற்றி தனியாக எதுவும் எழுதுவதற்கில்லை. மனோரமாவின் வாழ்க்கையை ஏறக்குறைய துணுக்குகளாகவே எழுதி இருக்கிறார், தீவிர தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு மட்டும்தான்.

தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்