விஷ்ணுபுரம் – வரலாறு

முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம்)

“வரலாறு என்பதே காவியம் உருவாக்குவதுதானே” – கோபிலபட்டர்

நம்மை ஆண்டு கொண்டிருக்கும் கழக ஆட்சியாளர்களின் துதிபாடிகள் அவர்களைப் பற்றி மிகையாகப் புகழ்கிறார்கள். சில நூற்றாண்டுகள் கழித்து நம் எதிர்கால சந்ததியினர் இந்தத் துதிகளைப் படித்து இவர்களை தமிழினம் காத்த தாரகை என்றும், செம்மொழி காத்த வீரன் என்றும் நினைத்தால்? நினைத்தாலே சிரிப்பாக இல்லை? சரி, இதே லாஜிக்கின்படி நாம் நம்மை ஆண்ட மன்னர்களைப் பற்றியும் புராணங்களைப் பற்றியும் யோசித்தால்? ஆழமான அதிர்ச்சி ஏற்படுகிறது. (நன்றி : நாஞ்சில் நாடன்). [ “இல்ல, அப்படி இல்ல.. நாம லெமூரியாவுல..” ]

இந்தியா புராணங்களின் விளை நிலம். எத்தனை கோடி கடவுள்கள் நம்மிடையே உண்டோ அத்தனை கோடி புராணங்கள், தொன்மங்கள் (Myths) உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவை திரைக்காவியங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்து நம் மனதை கொள்ளை கொண்டன. பின்னர், அவற்றில் நடித்தவர்கள் அரசியல்வாதிகளாக வந்து நம் கஜானாவை கொள்ளை கொண்டார்கள். புராணங்கள் கடவுளால் அருளப்பட்டவை, அவை ஆராய்ச்சிக்கு உரிவை அல்ல, அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் என்று ஒரு தரப்பு. புராணம் எல்லாம் வெறும் கட்டுக்கதை, பிராமண தந்திரம், இவற்றையெல்லாம் அழித்தால்தான் நமக்கு விடிவு என்று இன்னோரு தரப்பு. இவைகளுக்குள் ஓயாத சண்டை, அதுவே ஒரு தனி காவியம். இந்த இரண்டிற்கும் மாற்றாக, நம் வரலாறை தொன்மங்களைக் கொண்டு ஆராயலாம் என்றார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். டி.டி. கோசம்பி மார்க்ஸிய முரணியக்கத்தை அடிப்படையாக வைத்து தொன்மங்களை ஆராய்ந்து இந்திய வரலாறை பற்றி எழுதிய நூல்கள் முக்கியமானவை. (youtube-இல் ஒரு டாக்குமெண்டரி இருந்தது, தற்போது காணவில்லை.) ஆனால் மார்க்ஸிய முரணியக்கத்தின் வரலாற்றுப் பார்வை முழுமையான பார்வை அல்ல, அதனால் சமூக பொருளியல் கட்டுமானத்தை விளக்கமுடியுமே தவிர, காந்தி போன்ற தனிமனிதரின் சிந்தனைகள் சமூகத்தின் கூட்டுமனத்தின் மேல் செலுத்திய ஆதிக்கம், அதன் மூலம் சமூகம் அடைந்த மாற்றம் போன்றவற்றை விளக்க முடியாது என்கிறார்கள் அறிஞர்கள். எது எப்படியோ, ஐதீகங்களை ஆராயவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

வரலாற்று ஆய்வாளர்களுக்கு இனையாக இலக்கியவாதிகளும் இந்தத் கருவில் கதைகள், நாவல்கள் படைத்துள்ளார்கள். நவீனத் தமிழ் இலக்கியத்தில் புதுமைப்பித்தன் எழுதிய கபாடபுரம் அதில் முதல் முயற்சி. அதர்மம் அதிகரிக்கும்போது, ஈசன் சினங்கொள்வான், நெற்றிக்கண்ணைத் திறப்பான், உலகம் அழிந்து மீண்டும் பிறக்கும் என்ற தொன்மத்தை மையப்படுத்தி எழுதியது கபாடபுரம். அக்கதையில் இயற்கையே கடவுளாக, ஒரு எரிமலையை பிறைசூடியாக உருவகிக்கிறார். கடல் கொண்ட பழந்தமிழகத்தின் வரலாறு மட்டுமல்லாது தத்துவத் தளத்தையும் தொடுகிறது கபாடபுரம். விஷ்ணுபுரம், புதுமைப்பித்தன் எழுதிய கபாடபுரத்தின் நீட்சி என்கிறார் ஜெயமோகன். உண்மைதான். கபாடபுரம் தொட்டுக் காட்டும் புள்ளிகளை இனைத்து விஷ்ணுபுரமென மிக விரிவான சித்திரமொன்றை வரைந்திருக்கிறார். கபாடபுரத்திற்கும் (1945) விஷ்ணுபுரத்திற்கும் (1997) ஐம்பதாண்டு காலம் இடைவெளி உள்ளது. எனக்குத் தெரிந்து, வேறு யாரும் இந்தக் கருவில் நாவல் எழுதவில்லை. யதார்த்தவாத கதை சொல்லும் முறை ஓங்கியிருந்த காலம் என்பதால் வேறு யாரும் முயற்சி செய்யவில்லை என்று நினைக்கிறேன்.

யுகத்துக்கு ஒரு முறை விஷ்ணு புரண்டு படுப்பார் என்ற தொன்மத்தை வைத்து எழுதப்பட்டது இந்நாவல். நாவலில் யுகம் எப்போது துவங்கியது என்று தெளிவாகச் சொல்லவில்லை. ஆனால் முடிவு பதிநான்காம் நூற்றாண்டு (கான் படையெடுப்புக்குப்பின் அதிகபட்சம் நூறாண்டுகள்) என்று வருகிறது. ஒரு யுகம் என்று இந்தக் காலத்தை ஏன் உருவகித்தார் ஆசிரியர்? ஒரு யுகம் என்பது இங்கு எதன் குறியீடு? நிலப்பிரபுத்துவத்தின் காலம் என்றால் இருபதாம் நூற்றாண்டுவரை வந்திருக்க வேண்டும். என் யூகம், இந்திய நிலமெங்கும் கீழை மதங்கள் தம் தனிப்பெரும் செல்வாக்கை இழந்த காலகட்டம். சொல்லால் நிலைநின்ற ஆட்சிபோய், வேலால் மட்டுமே நிலைநின்ற ஆட்சி மாற்றத்தின் குறியீடு, தத்துவ யுகம் முடிந்து விஞ்ஞான யுகத்தின் துவக்கம், போன்ற காரணங்கள் இருந்தாலும், “மாற்றுத்தரப்பு சிந்தனைகளோடு உரையாடிய தளம் இல்லாமலாவதன் குறியீடு; கொண்டும் கொடுத்தும் சிந்தனைகள் வளர்ந்த சூழ்நிலை அழிந்து, இந்தியச் சிந்தனைகள் தேக்கமுறுவதன் குறியீடு” என்றே எண்ணுகிறேன். நாவலின் நீட்சியாக நாம் அடுத்த யுகமாக எந்தக் காலத்தை கருதுவது ? ஆலிலையில் மீண்டும் பிறக்கும் விஷ்ணு மீண்டும் எப்போது புரண்டு படுப்பார் ? (இல்லை புரண்டு படுத்துவிட்டாரா?)

விஷ்ணுபுரம் அளவிற்கு தொன்மங்கள், புராணங்கள் உருவாகும் விதம், காலப்போக்கில் அவை அடையும் மாற்றம் போன்றவற்றை நம்பகத்தன்மையோடு சித்தரிக்கும் வேறோரு இந்திய நாவல் இல்லை. நாவலின் மிகப் பெரிய பலம் இது. பத்மாட்சி யட்சி உருவாவது போலவே, கொன்றைவனத்தம்மனும் உருவாகிறாள். (அதுவும் கொன்றைவனத்தம்மன் உருவான புராணம் பற்றி சாத்தனுக்கு அவன் தந்தை சொல்வது, கி.ரா.வின் கோபல்ல கிராமத்தில் வரும் புராணகதையின் சாயல் கொண்டது. இது போலவே நானும் சில கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். template மாறாது போல).

கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற கற்பனாவாத நாவல்களால் தமிழக வாசகர் மனதில் தமிழ் மன்னர்கள் சந்தனக்காப்பு அலங்காரங்களுடன் அமர்ந்திருக்கிறார்கள். விஷ்ணுபுரத்தில் வரும் பாண்டிய மன்னனின் சித்தரிப்பு மூலம் ஜெயமோகன் கருவறை புகுந்து சந்தனக்காப்பு விக்ரகங்களை வெளியில் தூக்கிப் போட்டு உடைக்கிறார். இது தேவையான ஒன்றுதான். இது புனைவு என்பவர்கள், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்’ படிக்க வேண்டுகிறேன். நிலப்பிரபுத்துவ அறத்தை இப்போதைய மக்களாட்சி அறத்தோடு ஒப்பிடக் கூடாதுதான், இருந்தாலும் நல்ல குரு அமையாத மன்னர்கள் கொடும் சர்வாதிகாரிகள் என்பதை மறக்க வேண்டாம். [இன்றைய ஜெயமோகன் ஃபேமஸ், 1997 ஜெயமோகன் அப்படி இல்லையே! தமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடாதவர்கள்தானே நாம்! தமிழ் வேறு பாண்டியன் வேறா? இதை எழுதியதற்கு எப்படி அடி வாங்காமல் தப்பித்தார் என்றே தெரியவில்லை 🙂 அது சரி, இது புனைவுதானே :-)]

நாவலில் நரோபா என்ற திபேத்திய பௌத்தர் விஷ்ணுபுரத்திற்கு வந்து மூல நூல்களை மொழிபெயர்க்கிறார். பின்னாளில் யோகவிரதர் நரோபாவின் நூல்களிலிருந்து விஷ்ணுபுரத்தைப் பற்றியும் தத்துவங்களையும் தெரிந்துகொள்கிறார். நரோபா கிட்டத்தட்ட ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியா வந்த சுவான்சாங்(யுவான் சுவாங்) தான். அவர் கொண்டு சென்றதின் மொழியாக்கத்திலிருந்து நாம் பலவற்றை மீட்டெடுத்தோம். வெள்ளையர்கள் எழுதிய இந்திய வரலாறு தவிர, நாம் இன்னும் நம் வரலாறை எழுதவே இல்லை என்றே நினைக்கிறேன். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களை அதன் சமகால சீன, திபேத்திய, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் காப்பியங்களோடு ஒப்பிட்டும், முக்கியமாக நம் தொன்மங்களை அவர்களின் தொன்மங்களோடு ஒப்பிட்டும் ஆராய்ந்தால் மேலும் பல திறப்புகள் கிடைக்கலாம்.

பிற்சேர்க்கை: (ஆர்வியின் எண்ணங்கள்) – இதற்கு விசு வரலாறு என்று தலைப்பு கொடுத்திருந்தாலும் அவருடைய பேசுபொருளும் தொன்மங்களே என்றே கருதுகிறேன். என்னைப் பொறுத்த வரை விஷ்ணுபுரத்துக்கும் வரலாற்றுக்கும் தொடர்பில்லை. விஷ்ணுபுரம் புனைவு. தொன்மங்கள் உருவாகும் process-ஐ விவரிக்கிறது. முதல் பகுதியில் தொன்மங்களாக இருப்பவை இரண்டாவது பகுதியில் சமகால நிகழ்ச்சிகள்; மூன்றாவது பகுதியின் தொன்மங்கள் முதல் பகுதியில் சமகால நிகழ்ச்சிகள். இதில் வரலாற்றைத் தேட வேண்டாம் என்றே கருதுகிறேன். பாத்திரங்கள், நிகழ்ச்சிகளுக்கான inspiration சுவான்சாங்கின் பயணத்திலிருந்தும், யாக்ஞவல்கியர், சார்வாகன், ஆதி சங்கரர் தொன்மங்களில் ஏன், நா.பா. எழுதிய மணிபல்லவம் புத்தகத்தில் கூட விவரிக்கப்படும் ஞான சபை வாதங்களிலிருந்தும் வந்திருக்கலாம். அது எனக்கு ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை.

ஆனால் எனக்கும் இரண்டு கேள்விகள் உண்டு. ஒன்று, விஷ்ணுபுரம் ஞான சபை போல மன்னனை விட ஒரு படி மேலாக தன்னை உணர்ந்த, காண்பித்துக் கொண்ட, மன்னனும் ஏற்றுக் கொண்ட ஹிந்து “ஆன்மீக” அமைப்புகள் இந்தியாவில் இருந்தனவா என்பது. இரண்டு ஞான சபை வாதத்தில் வெற்றி, தோல்வி என்பதை யார், எப்படி நிர்ணயித்தார்கள் என்பது. ஜெயமோகனே, அல்லது தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்.

விசு கபாடபுரத்தைப் பற்றி பேசும் வரையில் இவற்றுக்குள்ள தொடர்பு எனக்கு strike ஆகவில்லை. இப்படி தொடர்புகளை கண்டுபிடிப்பது விசுவின் பெரிய பலம்.

தொடரும்…

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: விஷ்ணுபுரம் பக்கம், விசு பதிவுகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் நாவல்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
முந்தைய பகுதிகள் (அறிவிப்பு, கதைச்சுருக்கம்)
விஷ்ணுபுரம் – ஆர்வியின் பிரமிப்பு
விஷ்ணுபுரம் பற்றி பா. ராகவன்
புதுமைப்பித்தனின் சிறுகதை – கபாடபுரம்

கல்கியின் வாரிசுகள் (சரித்திர நாவல்கள்)

இங்கே கல்கி பாணியில் (அரண்மனைச் சதி genre) சரித்திர நாவல் எழுதிய சிலரைப் பற்றி மட்டும்:

தமிழில் சரித்திர நாவல் என்றால் சாண்டில்யன்தான் என்று ஒரு காலம் இருந்தது. ஆனால் சாண்டில்யனின் மிகச் சிறந்த நாவல் கூட சிவகாமியின் சபதம் தரத்துக்கு வரவில்லை.

சாண்டில்யனுக்கு ரஃபேல் சபாடினிதான் ஆதர்சம் என்று நினைக்கிறேன். அவரது நாயகனுக்கு boss-ஆக ஒரு பெரிய ஆளுமை இருக்கும். நாயகன் எப்போதுமே வீரன். நிறைய தந்திர வேலை எல்லாம் செய்வான். தந்திர வேலை என்றால் பெரிதாக எதுவும் நினைத்துக் கொள்ளாதீர்கள். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் தாய்லாந்தில் எம்ஜிஆரின் படகை அசோகன் இன்னொரு படகில் துரத்துவார். முன்னாள் எம்ஜிஆர், பின்னால் அசோகன். எம்ஜியார், அசோகன், எம்ஜிஆர், அசோகன். திடீரென்று எம்ஜிஆர் தூய தமிழில் தாய்லாந்தை சேர்ந்த சப்பை மூக்கு படகோட்டியிடம் “இடது பக்கம் திரும்பு” என்பார். அங்கே ஒரு பெரிய படகு இருக்கும். இவர்கள் அந்தப் படகுக்குப் பின்னால் போனது தெரியாமல் அசோகன் தான் வந்த வழியிலேயே போவார். வாத்யாரைக் காணோம்! எம்ஜிஆர் தப்பிவிட்ட ஏமாற்றத்தில் அசோகன் ஒரு கையில் இன்னொரு கையால் குத்திக்கொண்டே ஆ! என்று தலையை ஒரு ஆட்டு ஆட்டிக் கொள்வார். சாண்டில்யனின் கதாநாயகன்கள் தந்திரம் எல்லாம் இந்த ரேஞ்சில்தான் இருக்கும்.

அவருடைய நாவல்களில் எனக்குப் பிடித்தவை யவனராணி, கடல்புறா, மலைவாசல், ராஜமுத்திரை, கன்னிமாடம். இவை எல்லாம் சின்ன வயதில் படிக்கத்தான் லாயக்கு. பார்த்திபன் கனவு லெவலில் இருக்கும்.

இது சாண்டில்யனின் நூற்றாண்டு. அவரைப் பற்றிய பதிவுகள் இங்கே மற்றும் இங்கே.

சாண்டில்யன் இன்றும் பல wannabe எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக இருக்கிறார். கமலப்ரியா (தீரன் சின்னமலை பற்றிய “கொங்குத் தங்கம்” என்ற நாவல்) என்பவர் அவரது பாணியை, மொழியை, கதைப் பின்னலை, ஏன் சேலை விலகி இரண்டு மொட்டுக்கள் தெரிந்தன பாணி கிளுகிளுப்பைக் கூட அப்படியே பிரதிபலிக்கிறார். ஆசிரியர் பெயர் தெரியவில்லை என்றால் ஏதோ தெரியாத சாண்டில்யன் எழுத்தோ என்று சந்தேகம் வரலாம்! சின்ன சாண்டில்யன் என்ற புனைபெயரிலேயே ஒருவர் எழுதுகிறார். (ஜெம்புலிங்க நாடாரை வைத்து ஒரு நாவல் – )

சாண்டில்யன் அளவுக்கு பிரபலம் இல்லாவிட்டாலும் ஜெகசிற்பியன் ஓரளவு பிரபலமான சரித்திரக் கதை ஆசிரியர்தான். பல சமூகக் கதைகளையும் எழுதி இருக்கிறார். நான் படித்திருப்பது திருச்சிற்றம்பலம், மற்றும் நாயகி நற்சோணை.

திருச்சிற்றம்பலம் பேப்பருக்குப் பிடித்த கேடு. வளவளவளவளவளவளவளவளவென்று எழுதி இருக்கிறார். குலோத்துங்க சோழன் சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியை இடித்ததாகவும் அந்த மூலவர் சிலையை கடலில் போட்டதாகவும், பொதுவாக வைணவர்களை கொடுமை செய்ததாகவும், குறிப்பாக ராமானுஜரின் பிரதம சிஷ்யர் கூரத்தாழ்வாரை குருடாக்கியதாகவும் ஸ்ரீரங்க வைஷ்ணவ குருபரம்பரையில் சொல்லப்படுகிறது. மூலவர் சிலை கடலில் போடப்பட்டது சமீபத்தில் தசாவதாரம் படத்தில் பார்த்திருக்கலாம். அந்த நிகழ்ச்சியை பின்புலமாக வைத்து அதில் காதல், இரண்டாம் கிளாஸ் பிள்ளைகள் தரத்தில் ஒரு சதி என்று எழுதி இருக்கிறார். சிவன் கோவிலை விரிவாக்க பெருமாள் சந்நிதி தடையாக இருக்கிறது. பெருமாள் பாற்கடலில் பள்ளி கொள்பவர், அதனால் கடலில் போடுவேன் என்கிறான் சோழன்; சிவபெருமான் சிலையை சுடுகாட்டில் வைக்க வேண்டியதுதானே?

நா. நற்சோணை ஏறக்குறைய திருச்சிற்றம்பலம் ஃபார்முலாதான். இந்த முறை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். ஒரு soft காதலி. ஒரு சாமர்த்தியமான, காதலனுக்கு எல்லா விதத்திலும் உதவி செய்யும் காதலி. வளவளதான். ஆனால் இதில் சொல்லப்படும் வரலாறு கொஞ்சம் intriguing. எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், கரிகாலன், கங்கை கொண்ட சோழன் எல்லாரையும் பற்றி வட நாட்டு ரெகார்ட் ஏதாவது இருக்கிறதா? இந்த கனக விஜயர் யார், எந்த நாட்டு மன்னர்கள்?

ஆனால் ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளன் என்ற முறையில் I am awestruck by திருச்சிற்றம்பலம். இந்த கதையை என்னால் நாலு பக்கம் கூட எழுதமுடியாது. அவரால் நானூறு பக்கம் எழுத முடிந்திருக்கிறது! இப்படி கதையை வளர்ப்பதில் எனக்கு பத்தில் ஒரு பங்கு ஆற்றல் இருந்தால் கூட போதும்!

கோவி. மணிசேகரன் எழுதிய குற்றாலக் குறிஞ்சிக்கு சாஹித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு சாப்டர் ஆரம்பத்திலும் தலைப்பு மாதிரி ஏதாவது ஒரு ராகம் பற்றி இரண்டு வரி இருக்கும். அந்த இரண்டு வரிதான் மொத்தப் புத்தகத்திலும் சுவாரசியமான ஒரே பகுதி.

அவர் எழுதியதில் மறவர் குல மாணிக்கங்கள் என்ற ஒரு புத்தகம்தான் கொஞ்சமாவது படிக்கிற மாதிரி இருந்தது. பெரிய மருது, சின்ன மருது ஆகியோரின் காலத்தை வைத்து எழுதப்பட்டது. எது ஆசிரியரின் கற்பனை, எது பேச்சு வழியாக வளர்ந்த தொன்மம், எது பதிவு செய்யப்பட வரலாறு என்றுதான் தெரியவில்லை. பெரிய மருது ராணி வேலு நாச்சியாரின் இரண்டாவது கணவரா? சின்ன மருதுவுக்கும் பெரிய மருதுவின் மனைவி மீனாட்சிக்கும் தொடர்பு இருந்தது என்று ஒரு வதந்தி இருந்ததா? காளையார் கோவில் ரதம், குப்பமுத்தாச்சாரி என்று ஒரு செவி வழிக் கதை இருக்கிறதா? லூயிஸ் என்ற வெள்ளைக்காரன் மருது சகோதரர்களுக்காக தீக்குளித்தானா? பெரிய மருதுவுக்கு ஒரு வெள்ளைக்கார பாதிரியார் அடைக்கலம் தந்தாரா? இது சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள் பகுதி 2 என்றும் வந்திருக்கிறது.

இவற்றைத் தவிர நாயகன் நாயகி, செஞ்சி அபரஞ்சி என்ற நாவல்களையும் சித்ராங்கி, ராஜதரங்கிணி, காந்தாரி, மிதக்கும் திமிங்கலங்கள் என்ற சிறுகதைத் தொகுப்புகளையும் படித்திருக்கிறேன். குப்பமுத்தாச்சாரி கதை அப்படியே “மறவர் குல மாணிக்கங்கள்” நாவலில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. ஒரு தொகுப்பில் உள்ள கதையை சில சமயம் இன்னொரு தொகுப்பில் recycle பண்ணி இருக்கிறார். செஞ்சி அபரஞ்சி அவர் லெவலுக்கு சுமாரான நாவல். நாயகன் நாயகியில் வரலாறும் இல்லை, கதையும் இல்லை. தவிர்க்கலாம்.

கோவி அலங்காரத் தமிழை விரும்புபவர். வீரர்களின் மார்பு எப்போதும் விரிந்து பரந்திருக்கும், அழகிகளின் மார்பு எப்போதும் விம்மித் ததும்பும். அந்த மாதிரி கதைகளின் காலம் போய்விட்டது. தானே அதிகமான சரித்திர சிறுகதைகளை எழுதியவன் என்ற புகழ் வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். அதற்காக ராமாயணம், பாரதம் பற்றி எழுதுபவையும் சரித்திரக் கதை என்றால் எப்படி?

அகிலன் எழுதிய கயல்விழியும் இதே டைப்தான். மூன்றாம் தர நாவல். பேப்பருக்கு பிடித்த கேடு. இதைத்தான் எம்ஜிஆர் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்று திரைப்படமாக வேறு எடுத்தார். இந்த நாவல் பிடிக்காததால், நான் சாகித்ய அகாடமி விருது பெற்ற வேங்கையின் மைந்தன், வெற்றித்திருநகர் போன்றவற்றையும் படிக்கவில்லை படிப்பதை தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன்.

நா. பார்த்தசாரதி: ராணி மங்கம்மாள், கபாடபுரம் இரண்டு படித்திருக்கிறேன். நா.பா.வின் நாவல்களில் எப்போதும் நிறைய உபதேசம் இருக்கும். ராணி மங்கம்மாளும் அப்படித்தான். நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய புத்தகம் இல்லை, ஆனால் ரொம்ப மோசமும் இல்லை. விரிவாக இங்கே படிக்கலாம். கபாடபுரம் ரம்பம். ஜெயமோகன்

தமிழில் கல்கியின் நாவலின் தளத்தில் இருந்து மேலே சென்றவை என மணிபல்லவம் [ நா.பார்த்தசாரதி] போன்ற நாவல்களை உறுதியாகச் சொல்லமுடியும்

என்கிறார். படித்துப் பார்க்க வேண்டும்.

சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம், காந்தளூர் வசந்தகுமாரன் கதை: ர. ஒ. நிறம் ஓரளவு நல்ல கதை. கல்கி பாணியில் இருக்காது. வசந்தகுமாரன் கதை பாதியிலேயே நின்றுவிட்டமாதிரி இருக்கிறது. வசந்தகுமாரன் இன்னும் காந்தளூர் இருக்கும் திசையில் கூட போக ஆரம்பிக்கவில்லை, அதற்குள் புத்தகமே முடிந்துவிட்டது.

ர.சு. நல்லபெருமாள் எழுதிய மருக்கொழுந்து மங்கை (1982) தன் பின்புலத்தால் கொஞ்சம் சுவாரசியமானது. இந்திரா காந்தி அமுல்படுத்திய நெருக்கடி நிலையை சரித்திர நாவலில் பிரதிபலிக்கிறார். இந்திராவுக்கு பதிலாக இரண்டாம் பரமேஸ்வர்வர்மனின் ராணி; சஞ்சய் காந்திக்கு பதிலாக இளவரசன் சித்திரமாயன்; துர்க்மான் கேட்டை இடித்தது போன்ற ஒரு சம்பவம்; ஜெயப்பிரகாஷ் நாராயண் போலவே ஒரு பாத்திரம் சிறைப்படுத்தப்படும்போது “வினாச காலே விபரீத புத்தி” என்று சொல்கிறார். நல்லபெருமாள் இப்படி பிரதிபலிக்க வேண்டும் என்று நினைத்துத்தான் எழுதினாராம். பல பத்திரிகைகள் பயந்து பிரசுரிக்க மறுத்தனவாம். கடைசியில் தினமணி கதிரில் வந்திருக்கிறது. சிம்மவிஷ்ணு பரம்பரை முடிவடைந்து தாயாதி பரம்பரையிலிருந்து நந்திவர்மன் ராஜா ஆனதை வைத்து எழுதப்பட்டது.

கலைஞர்: பொன்னர் சங்கர் என்ற ஒரு புத்தகம் படித்திருக்கிறேன். அதில் எவ்வளவு சரித்திரம், எவ்வளவு folklore என்று தெரியவில்லை. ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டி சிங்கம், பாயும் புலி பண்டார வன்னியன் என்ற புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். பொன்னர் சங்கர் மட்டும் வைத்துப் பார்த்தால் இவரெல்லாம் எழுதாமலே இருந்திருக்கலாம்.

கௌசிகன்: பாமினிப் பாவை என்று ஒரு நாவல் சிறு வயதில் படித்திருக்கிறேன். நாஸ்டால்ஜியா, அதனால் அதையும் இங்கே சேர்த்திருக்கிறேன். கௌசிகன் என்பது வாண்டுமாமாவின் இன்னொரு புனைபெயர்.

“கல்கி” ராஜேந்திரனின் ரவிகுலதிலகன்: விஜயாலய சோழன் முத்தரையர்களை முறியடித்து அதிகாரத்துக்கு வந்த கதை. என்னை intrigue செய்த ஒரே விஷயம் விஜயாலயனை வழக்கமான மாசுமறுவற்ற உத்தம வீரனாகக் காட்டாமல் கோபமும், பழி வாங்கும் உணர்ச்சியும் உள்ள ஒருவனாக காட்ட முயற்சித்திருக்கிறார் என்பதுதான். ஆனால் கதை படு சுமார்.

திலகவதி எழுதிய “தீக்கு கனல் தந்த தேவி“யும் இப்படி ஒரு டைம்பாஸ் குறுநாவல்தான்.

கண்ணதாசன் சினிமாவுக்கு நன்றாக பாட்டெழுதுவார் என்பது தெரியாத தமிழன் கிடையாது. அவர் சரித்திரக் கதைகளும் எழுதுவார் என்பது அவ்வளவாகத் தெரியாது. கதைகளின் தரம் அப்படி! இந்த லட்சணத்தில் அவர் எழுதிய சேரமான் காதலி என்ற புத்தகத்துக்கு சாஹித்ய அகாடமி விருது வேறு கொடுத்திருக்கிறார்கள். நான் நல்ல புத்தகத்தை சில சமயம் பாதியில் நிறுத்திவிட்டு சரியான மூட் வந்ததும் தொடர்வேன். ஆனால் தண்டமான ஒரு புத்தகத்தில் இருபது முப்பது பக்கம் படித்துவிட்டால் அதை (அசட்டுப்) பிடிவாதமாகப் படித்துவிடுவேன். என்னாலேயே இந்தப் புத்தகத்தில் ஐம்பது பக்கத்துக்கு மேல் படிக்க முடியவில்லை. சரியான போர். இதைத் தவிர ஊமையன் கோட்டை (கட்டபொம்மன் மறைவுக்குப் பிறகு ஊமைத்துரையின் தொடரும் புரட்சி), மற்றும் பாரிமலைக்கொடி என்ற கதைகளைப் படித்திருக்கிறேன். பாரிமலைக்கொடி பாரியின் கொடை, அங்கவை, சங்கவை, மூவேந்தர் படையெடுத்து பாரியை வெல்லுதல் என்ற சம்பிரதாயக் கதை. முன்னுரையில் மூவேந்தர் பாரி மீது பொறாமை கொண்டு பாரி மீது படை எடுத்தார்கள் என்று சொல்லப்படுகிறது, பொறாமை மட்டுமே போதுமான காரணம் என்று தனக்கு தோன்றவில்லை, அதனால் மேலும் கற்பனை செய்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, அதே பொறாமை என்று முடித்தது மிகவும் எரிச்சல் ஊட்டியது. மனிதனுக்கு தான் கதையில் என்ன எழுதி இருக்கிறோம் என்று கூட தெரியாதா?

ஆனால் கண்ணதாசனே பரவாயில்லை என்று நினைக்க வைத்தவர்களும் உண்டு. கவியழகன் எழுதிய “மாவீரன் புலித்தேவன்” இந்த ரகத்தைச் சேர்ந்தது.

அனுஷா வெங்கடேஷ் இந்த genre-இல் literal ஆகவே கல்கியின் வாரிசாக வர முயற்சிப்பவர். அவர் எழுதிய காஞ்சித்தாரகை சிவகாமியின் சபதம் நாவலின் தொடர்ச்சி. கதையே இல்லாமல் பக்கம் பக்கமாக எழுதிக் குவித்திருக்கிறார். தில்லையில் ஒரு கொள்ளைக்காரன் கதையை இரண்டு வரியில் எழுதிவிடலாம், இவருக்கு நானூறு பக்கம் பிடித்திருக்கிறது.

மு. மேத்தா எழுதிய சோழ நிலா அந்தக் காலத்தில் ஆனந்த விகடனின் பரிசு பெற்றது. அந்தக் காலத்தில் டைப்ரைட்டரில் கார்பன் காகிதம் வைத்து பிரதி எடுப்பார்கள். இது சாண்டில்யனின் சுமாரான நாவல் ஒன்றை எட்டாவது பிரதி எடுத்தது போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்தியது. கற்றுக்குட்டித்தனமான நாவல்.

எஸ்.எஸ். தென்னரசு திராவிட இயக்க சார்புடையவர். அவர் எழுதிய துங்கபத்திரை என்ற நாவலைப் படித்தேன். கிருஷ்ணதேவராயர்-விஸ்வநாத நாயக்கரை வைத்து படுசுமாரான நாவல் எழுதி இருக்கிறார்.

இவர்களைத் தவிர விக்ரமன், கௌதம நீலாம்பரன் (வீரத்தளபதி மருதநாயகம்), தாமரைமணாளன், வல்லிக்கண்ணன் ஆகியோர் எழுதியதையும் அங்கும் இங்குமாக படித்திருக்கிறேன். எதுவும் என்னைக் கவரவில்லை. குறிப்பாக விக்ரமன் எழுதிய “வந்தியத்தேவன் வாள்” உண்மையில் வாள் இல்லை ரம்பம். சாஹித்ய அகாடமி விருதெல்லாம் வாங்கியவராயிற்றே என்றுதான் வல்லிக்கண்ணன் எழுதிய விடிவெள்ளியைப் (பாண்டியன் கடுங்கோன்) படித்தேன். உலக மகா தண்டம். கோவிந்தராஜன் கிருஷ்ணராவ் எழுதிய விக்கிரமனின் சபதம் கற்றுக்குட்டித்தனமாக இருக்கிறது.

தமிழில் சரித்திர நாவல் என்றால் ஆ! அவள் அங்கங்கள் தங்கமாக ஜொலிக்கிறதே! என்ற நடையில் எழுத வேண்டும் என்றும் நிறைய பேர் நினைக்கிறார்கள். நகுபோலியன் என்பவர் இவர்கள் நடையை கிண்டல் செய்து எழுதிய மழநாட்டு மகுடம் கோப்பெருந்தேவி எங்கே என்ற சிறுகதை ஞாபகம் வருகிறது. அந்த சிறுகதை ஒரு தொடர்கதையின் 35-ஆவது சாப்டர் போல எழுதப்பட்டிருக்கும். ஒரு நாலு பக்கத்துக்கு குதிரை மேல் போய்க்கொண்டே கோப்பெருந்தேவி எங்கே என்று யோசிப்பார் ஹீரோ. சிரித்து சிரித்து எனக்கு வயிறு புண்ணாகிவிட்டது. இந்த கதையை யாராவது படித்திருக்கிறீர்களா?

நான் படித்த வரையில் சாண்டில்யன், சுஜாதா, நா.பா. மூன்று பேர்தான் பொருட்படுத்தக் கூடிய முறையில் எழுதி இருக்கிறார்கள். சுஜாதாவின் ரத்தம் ஒரே நிறம்தான் இவற்றில் பெஸ்ட். ஆனால் படிக்க இன்னும் இருக்கிறது. அது அடுத்த பகுதியில். அது வரையில் reference-க்காக ஜெயமோகனின் historical romances லிஸ்டை இங்கே ஒரு அனுபந்தமாகக் கொடுத்திருக்கிறேன். ஜெயமோகன் பிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்” நாவலை romance என்ற நிலையைத் தாண்டிய இலக்கியம் என்றும், சிறந்த தமிழ் நாவல்களில் ஒன்றாகவும் குறிப்பிடுகிறார். எஸ்.ரா. பொ. செல்வன், வீ. மனைவி, மா. வெல்லும், சுஜாதாவின் ர.ஒ. நிறம், பாலகுமாரனின் உடையார் ஆகியவற்றை நூறு சிறந்த தமிழ் நாவல்கள் லிஸ்டில் சேர்க்கிறார்.

தொடரும்…

அனுபந்தம் (Appendix) – ஜெயமோகனின் Historical Romances லிஸ்ட்

முதல் பட்டியல்:

  1. பொன்னியின் செல்வன் — கல்கி
  2. சிவகாமியின் சபதம் — கல்கி
  3. மன்னன் மகள் — சாண்டில்யன்
  4. யவன ராணி — சாண்டில்யன்
  5. கடல்புறா — சாண்டில்யன்
  6. வீரபாண்டியன் மனைவி — அரு. ராமநாதன்
  7. ஆலவாய் அழகன் — ஜெகசிற்பியன்
  8. திருவரங்கன் உலா — ஸ்ரீ வேணுகோபாலன்
  9. வேங்கையின் மைந்தன் — அகிலன்
  10. மணிபல்லவம் — நா. பார்த்தசாரதி

இரண்டாம் பட்டியல்:

  1. பார்த்திபன் கனவு — கல்கி
  2. ஜலதீபம் — சாண்டில்யன்
  3. கன்னிமாடம் — சாண்டில்யன்
  4. மூங்கில் கோட்டை — சாண்டில்யன்
  5. ராஜ முத்திரை — சாண்டில்யன்
  6. கயல்விழி — அகிலன்
  7. வெற்றித்திருநகர் — அகிலன்
  8. ரத்தம் ஒரே நிறம் — சுஜாதா
  9. கோபுர கலசம் — S.S. தென்னரசு
  10. ராணி மங்கம்மாள் — நா. பார்த்தசாரதி
  11. ரோமாபுரிப் பாண்டியன் — மு. கருணாநிதி
  12. தென்பாண்டி சிங்கம் — மு. கருணாநிதி
  13. பத்தினிக் கோட்டம் — ஜெகசிற்பியன்
  14. நந்திபுரத்து நாயகி — விக்ரமன்
  15. திருச்சிற்றம்பலம் — ஜெகசிற்பியன்

தொடர்புள்ள பதிவுகள்:
தமிழில் சரித்திர நாவல்கள் பகுதி 1 (கல்கி)

தமிழ்ச் சிறுகதை – ஜெயமோகன் பட்டியல் பாகம் 1

படிக்க வேண்டிய தமிழ் சிறுகதைகள் என்று ஜெயமோகன் ஒரு பட்டியல் போட்டிருக்கிறார். பெரிய லிஸ்ட். 250 சிறுகதைகள் தேறும். 75 எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். என்னுடைய reference-களில் ஒன்று இந்தப் பதிவு.

புதுமைப்பித்தனின் 12 சிறுகதைகள். அசோகமித்ரனுக்கும் 12. தி.ஜா., அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கோணங்கிக்கு தலா 8. சுஜாதாவுக்கு 7. பிச்சமூர்த்தி, லா.ச.ரா., ஆ. மாதவன், முத்துலிங்கம், வண்ணதாசன், கந்தர்வன், யுவன் சந்திரசேகர், ஜெயமோகன் ஆகியோருக்கு தலா 6. இந்த 17 பேருக்கும் ஏறக்குறைய பாதி கதைகள்.

பார்த்தவுடன் வழக்கம் போல என்ன இதில் படித்திருக்கிறோம் என்ன படிக்கவில்லை என்று கணக்கு ஆரம்பித்துவிட்டது. எனக்கு ஒரு எரிச்சலூட்டும், ஆனால் தீராத பிரச்சினை உண்டு. கதையை பற்றி இரண்டு வரி சொன்னால் தெரியும்; ஆனால் கதையின் தலைப்பு ஞாபகமே வராது.

250+ சிறுகதைகளை அவர் குறிப்பிட்டிருக்கிறார். நான் பகுதி பகுதியாகத்தான் இவற்றைப் பற்றி எழுத முடியும். முதல் பகுதியில் அவர் சொல்லி இருக்கும் புதுமைப்பித்தன் சிறுகதைகளைப் பற்றி சிறு குறிப்புகள். தமிழின் முதன்மையான எழுத்தாளர் யார் என்றால் நான் புதுமைப்பித்தனைத்தான் ஒரு கணம் கூட யோசிக்காமல் கை காட்டுவேன். அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். அவர் ஹெமிங்க்வே, மார்க்வெஸ், ஃபாக்னர், ஷா மாதிரி பிரபலமாக வேண்டும். தரமான மொழிபெயர்ப்பு, உலக அளவில் மார்க்கெடிங் வேண்டுமே! என்றாவது நான் பணக்காரன் ஆனால் இதுதான் முதல் வேலை…

கதை பேரைக் க்ளிக்க முடிந்தால் அழியாச்சுடர்கள் தளத்தில் கதையைப் படிக்கலாம். அன்றிரவு, வேதாளம் சொன்ன கதை, பால்வண்ணம் பிள்ளை ஆகியவை தவிர மிச்ச எல்லாம் அங்கே கிடைக்கிறது.

  1. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்: இந்தக் கதையில் அவர் என்னதான் சொல்ல வருகிறார், கடவுள் எதற்கு வந்தார், இங்கே வந்து என்ன சாதித்தார், moral of the story என்ன, ஓ. ஹென்றி ட்விஸ்ட் எங்கே, சிறுகதைக்கு இருக்க வேண்டிய உச்சம் எங்கே, இது என்ன genre என்றெல்லாம் கேட்டால் பதில் கிடையாது. அட் லீஸ்ட் என்னிடம் கிடையாது. மேதைகளுக்கு விதிகள் இல்லை, அவர்கள் விதிகளை உருவாக்குபவர்கள். இதையெல்லாம் அனுபவிக்கனும், ஆராயக்கூடாது! கதை பூராவும் ஓடிக் கொண்டிருக்கும் மெல்லிய நகைச்சுவை, (பிள்ளை சிவ பெருமானிடம் சொல்கிறார் – என் பத்திரிகைக்கு ஒரு ஆயுள் சந்தா வாங்கிக்கங்களேன்! சிவ பெருமானின் கவுண்டர் – யார் ஆயுள்?) சரளமான நடை, கந்தசாமிப் பிள்ளையின் பெண்ணின் சித்தரிப்பு எல்லாம் சேர்ந்து இந்த கதையை உன்னதமான ஒன்றாக்குகிறது. எனக்கு ஒரே ஒரு குறைதான் உண்டு – நடராஜனையும் பார்வதியையும் தெரியாத அயல் நாட்டினர் இந்தக் கதையை முழுமையாக ரசிக்க முடிக்க முடியாது, எந்த மொழிபெயர்ப்பும் இதன் கலாசார ஆழத்தை இந்தியாவுக்கு வெளியே கொண்டு போக முடியாது என்பது மட்டும்தான்.
  2. கயிற்றரவு: மனித இனத்தின் பெரும் தத்துவக் கேள்வியை – நான் யார்? – கேட்கிறது இந்தக் கதை. ஆனால் எனக்கு பிரமாதமாக ரசிக்கவில்லை.
  3. செல்லம்மாள்: இறந்துகொண்டிருக்கும் மனைவி என்று சுருக்கமாக கதையை சொல்லிவிடலாம். அதற்கு மேல் கதையை விவரிக்க ஒரு ஜெயமோகன்தான் வர வேண்டும். “குத்துவிளக்கை அவித்து வைத்த குருட்டுக் காமம்” என்ற வரி இன்னும் பேசப்படுவது.
  4. சிற்பியின் நரகம்: நாலைந்து முறை படித்தும் எனக்கு இந்தக் கதை இன்னும் சரியாக பிடிபடவில்லை. கலை அழகு மிகுந்த சிற்பம் கடவுளாக மாறிவிட்டதில் சிற்பிக்கு ஏற்பட்ட இழப்பு என்று நினைக்கிறேன்.
  5. கபாடபுரம்: மிக நல்ல fantasy. இன்று கூட அந்த மாதிரி ஒரு சிறுகதையை யாரும் தமிழில் எழுதவில்லை.
  6. ஒரு நாள் கழிந்தது: நான் முதன்முதலில் படித்த புதுமைப்பித்தன் சிறுகதை இதுதான். பள்ளிப்பருவத்தில் துணைப்பாடமாக இருந்தது. இதை எல்லாம் விவரிக்கக் கூடாது, படித்துக் கொள்ளுங்கள்!
  7. அன்றிரவு: நினைவு வரவில்லை, இப்போது பார்த்து புஸ்தகத்தையும் காணோம். யாரப்பா இரவல் வாங்கியது?ஜடாயு நினைவுபடுத்தினார், பிறகு பாஸ்கர் தந்த சுட்டியிலும் போய்ப் பார்த்தேன். எனக்கு இந்தக் கதை சுமார்தான். என்ன சொல்கிறார் என்று சரியாகப் புரியவில்லை. அலகிலா விளையாட்டு என்கிறாரா? எனக்கு இந்த லீலா வினோதம் எல்லாம் புரிவதில்லை. புரிந்தால் நான் ஏன் இந்த வாழ்க்கை வாழ்கிறேன்? நான் மனக்குகை ஓவியங்கள் என்ற கதையில் வரும் மனிதன் கட்சி. 🙂
  8. சாமியாரும் குழந்தையும் சீடையும்: இதில் என்ன இருக்கிறது என்று ஜெயமோகன் இதைப் புகழ்கிறார்? அவரே கோனார் நோட்ஸ் எழுதினால்தான் புரியும்…
  9. காலனும் கிழவியும்: கதையின் நகைச்சுவை இதை உச்சத்துக்குக் கொண்டுபோகிறது. ஆனால் என் anthology-யில் இடம் பெறாது.
  10. சாப விமோசனம்: இதுவும் அயல்நாட்டினர் புரிந்து கொள்வது கஷ்டம் என்ற ஒரு குறையைத் தவிர வேறு எதுவும் இல்லாதது. பெண்ணியம், ஆணாதிக்கம் என்று பக்கம் பக்கமாக எழுதுபவர்களை விட இந்த ஒரு கதை ஏற்படுத்தும் தாக்கம் பெரிது. படித்தவர்களுக்கு கதையை விவரிக்க வேண்டியதில்லை, படிக்காத அதிர்ஷ்டக்காரர்களுக்கு நல்ல வாசிப்பு அனுபவம் காத்திருக்கிறது.
  11. வேதாளம் சொன்ன கதை: என்ன சார் இதையெல்லாம் லிஸ்டில் சேர்க்கிறீர்களே?
  12. பால்வண்ணம் பிள்ளை: அவ்வளவு பிரபலம் ஆகாத, ஆனால் உலகத் தரம் வாய்ந்த சிறுகதை. அசூயைக்கு ஒரு கதை என்று தி.ஜா.வின் பாயசத்தைப் பற்றி சொல்லி இருந்தேன். வீம்புக்கு ஒரு கதை என்று இதை சொல்லலாம்.

அடுத்த முறை அவரைப் பார்த்தால் சண்டை போட வேண்டும் 🙂 – எப்படி மனித இயந்திரம், பொன்னகரம், சுப்பையா பிள்ளையின் காதல்கள் மாதிரி கதைகளை விடலாம்? இந்த லிஸ்டை அவர் இங்கே வருவதற்கு முன்பே பார்த்திருந்தால் அவர் இங்கே வந்திருந்தபோது கேட்டிருக்கலாம். எனக்கு நம்பர் ஒன் மனித இயந்திரம்தான். கணக்குப் பிள்ளை பணத்தை திருடிக்கொண்டு ஓடி விட நினைக்கிறார். அதற்கு மேல் நான் சொல்வதாக இல்லை. பொன்னகரத்தில் வரும் “கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே, இதுதானய்யா பொன்னகரம்” என்ற வரி மறக்க முடியாதது. பக்கம் பக்கமாக பேசினாலும் பதியாத கருத்தை ஆறு வார்த்தைகளில், ஒரே ஒரு வரியில் கற்பு எவ்வளவு செயற்கையான கருத்து என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விட்டார்!

எஸ்.ரா. க.க. பிள்ளை, செல்லம்மாள் மற்றும் காஞ்சனை ஆகியவற்றை தன் தேர்வுகள் என்று சொல்கிறார். காஞ்சனை படிக்கக் கூடிய கதைதான்; அவர் எழுதிய ஒரே பேய்க்கதையோ? ஆனால் காஞ்சனையை நான் சிறந்த சிறுகதை என்று சொல்லமாட்டேன்.

சுஜாதா மனித எந்திரம் கதையைத்தான் நிறைய மாணிக்கங்களில் தலை சிறந்ததாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

என்னுடைய anthology-யில் க.க. பிள்ளை, செல்லம்மாள், ஒரு நாள் கழிந்தது, சாப விமோசனம், பால்வண்ணம் பிள்ளை சிறுகதைகள் இடம் பெறும். மேலே சொன்ன சு. பிள்ளையின் காதல்கள், பொன்னகரம், மனித எந்திரம் ஆகியவை இடம் பெறும். எனக்கு புதிய கூண்டு என்ற கதை ஒரு tour de force. கல்யாணி இன்னொரு ரத்தினம். கல்யாணிக்கு கணவனை ஏமாற்றி இன்னொருவனுடன் உறவு கொள்ளும் தைரியம் இருக்கிறது.

சாதாரணமாக பேசப்படாத, ஆனால் எனக்குப் பிடித்த இரண்டு கதைகள்: ஞானக் குகை, பிரம்ம ராக்ஷஸ். ஞானக் குகை கதை சென்னை லைப்ரரி தளத்தில் முழுமையாக இல்லை. கொஞ்சம் மூளை சரியில்லாத இளைஞனுக்கு பராசக்தியின் தரிசனம் கிடைக்கிறது. அவன் பராசக்தி தனது மனைவி என்று நினைக்கிறான். பிரம்ம ராக்ஷஸ் கதையில் நன்னய பட்டன் உடல் இல்லாத உயிர். மீண்டும் உடலைப் பெற முயற்சிக்கிறான். ஆனால் கணவனை விட்டுவிட்டு அவனுடன் ஓடும் தைரியம் இல்லை. உணர்ச்சிகரமான துன்பக்கேணியில் இலங்கையில் கூலி வேலைக்கு போகும் பெண்ணின் துயரம். மிச்சத்தை தேடித்தான் பார்க்க வேண்டும். (கூடிய விரைவில் anthology-யை பதிக்க வேண்டும்.)

நண்பர் பாஸ்கர் சென்னை லைப்ரரி தளத்தில் புதுமைப்பித்தனின் எல்லாக் கதைகளும் இருக்கின்றன என்ற தகவலைக் கொடுத்திருக்கிறார். மகாமசானம் என்ற சிறுகதையையும் குறிப்பிட்டிருக்கிறார். எனக்கு மகாமசானத்தை விட செல்லம்மாள் சிறுகதை பிடிக்கும். ஓரளவு ஒத்த தீம் உள்ள கதைகள். சுந்தர ராமசாமி மகாமசானம் கதையை தனக்கு எழுதுவதற்குத் தூண்டுதலாக அமைந்தது என்று சொல்லி இருக்கிறார்.

புதுமைப்பித்தனுக்கு பெண் குழந்தை இருந்திருக்க வேண்டும். அவர் கதைகளில் வரும் பெண் குழந்தைகளை தூக்கி வைத்துக் கொஞ்ச வேண்டும் போல இருக்கிறது. க.க. பிள்ளை, ஒ.நா. கழிந்தது ஆகியவற்றில் வரும் பெண் குழந்தைகளின் சித்தரிப்பைப் பாருங்கள்!

தொடர்புடைய பதிவுகள்
ஜெயமோகனின் சிறுகதை தேர்வுகள்
புதுமைப்பித்தனின் எல்லாக் கதைகளும்