கடுப்பேற்றும் சாஹித்ய அகடமி விருது

வாழும் வள்ளுவம் (1987) 1988-இல் சாஹித்ய அகடமி விருது பெற்ற புத்தகம்.

நான் கி.வா.ஜ.வின் வீரர் உலகம் போன்றவற்றுக்கெல்லாம் விருதா என்று குறைப்பட்டுக் கொண்டேன். கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கு விருது கொடுத்தார்களே என்று மூக்கால் அழுதேன். இந்தப் புத்தகத்தை விருதுக்கு தேர்ந்தெடுத்தவர்களோடு ஒப்பிட்டால் அவற்றை தேர்ந்தெடுத்தவர்களை கோவில் கட்டி கும்பிடலாம். என்ன எழவுக்குடா இதற்கெல்லாம் விருது?

நான் குழந்தைசாமியை குறையே சொல்லமாட்டேன். அவர் நல்ல பொறியாளர், கல்வியாளர். அவருக்கு குறள் பிடித்திருக்கிறது. நாலு கட்டுரை எழுதினார். அவரது கருத்துகள் நேர்மையாகத்தான் இருக்கின்றன. உதாரணமாக குறளில் இல்லாதது எதுவுமில்லை என்பதெல்லாம் உயர்வு நவிற்சி என்பதைத் தெளிவாகச் சொல்கிறார். கற்பு, பெண் பற்றிய விழுமியங்கள் மாறிவிட்டன , தெய்வம் தொழாள் எல்லாவற்றையும் இன்று ஏற்பது கொஞ்சம் கஷ்டம் என்பதையும் தெளிவாகச் சொல்கிறார். ஆனால் புதிய கண்ணோட்டம் எதுவுமில்லை. விருதை மறுத்திருக்கலாம் என்று வேண்டுமானால் குறை சொல்லலாம், ஆனால் அவரும் மனிதர்தான், அதெல்லாம் கொஞ்சம் கஷ்டம்தான்.

தவறு எல்லாம் தேர்ந்தெடுத்தவர்கள் மேல்தான். அனேகமாக ஜால்ராக்கள் தேர்வுக்குழுவில் இருந்திருக்க வேண்டும், செல்வாக்குடையவர் என்று தெரிந்து அவருக்கு விருதைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ஜால்ரா அடிப்பதற்கும் ஒரு எல்லை வேண்டும். தேர்வுக்குழு உறுப்பினர்கள் யாரென்று தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள், ஆசை தீர நாலு வார்த்தை திட்டிக் கொள்கிறேன். அயோக்கியப் பசங்களா!

பொதுவாக இந்த மாதிரி இலக்கியத் திறனாய்வுக்கு விருதே கொடுக்கக் கூடாது. அதிலும் இத்தனை சாதாரணமான கட்டுரைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் அடுத்தபடி எனக்கும் சிலிகான்ஷெல்ஃபில் மாய்ந்து மாய்ந்து எழுதுவதற்கு சாஹித்ய அகடமி விருதைக் கொடுத்துவிடலாம்.

பயங்கரக் கடுப்பாக இருக்கிறது.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்