முத்துலிங்கத்துக்குப் பிடித்த சிறுகதைகள்

அ. முத்துலிங்கம் என் மனம் கவர்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் காலம் இதழுக்கு (மார்ச் 2005-இல்) அளித்த பேட்டியிலிருந்து:

உங்களுக்குப் பிடித்த ஒரு நல்ல சிறுகதையைக் குறிப்பிட முடியுமா?

ஒரு கதையல்ல. ஞாபகத்தில் இருந்த பல கதைகளைச் சொல்ல முடியும்.

இவை நீங்கள் கேட்ட இந்தக் கணத்தில் நினைவில் இருப்பவை. இன்னும் பல உங்கள் கேள்விக்கு பதில் சொல்லி முடித்த அடுத்த நிமிடத்தில் நினைவு வரும்.

ஒரு நல்ல சிறுகதையை உதாரணம் காட்டி விளக்க முடியுமா?

புதுமைப்பித்தனுடைய பல கதைகள் ‘அன்று சம்பளம் போடவில்லை’ என்று ஆரம்பிக்கும். அவர் எழுதிய பொய்க்குதிரை என்ற கதையும் அப்படித்தான் ஆரம்பிக்கிறது. அவருடைய அலுவலகத்தில் சம்பளம் போடாத ஒரு பட்டினி இரவு அவர் அதை எழுதியிருக்கலாம். இந்தக் கதையை நான் பத்து தடவையாவது படித்திருப்பேன். 11வது தரம் படித்தபோதுதான் திடீரென்று அது எவ்வளவு பெரிய கதை என்பது என் மூளையைச் சென்றடைந்தது. அதில் ஓடிய துயரம் சாம்பல் மூடிய நெருப்பு போல கண்ணுக்குத் தெரியாமலே கனன்று கொண்டிருக்கும். நடுத்தர குடும்பத்தில் புதிய கணவன் மனைவி. கணவன் வேலையிலிருந்து இன்னும் திரும்பவில்லை. மனைவி சமைப்பதற்கு காத்திருக்கிறாள். அன்றும் சம்பளம் போடவில்லை. அவர்கள் ஒரு பணக்கார நண்பன் வீட்டுக்கு நவராத்திரி கொலுவுக்கு போகிறார்கள். அங்கே சாப்பிட உட்காரும்போது மனைவி பரிமாறுகிறாள். ஒருவர் அவளிடம் ‘ஊரான் வீட்டு நெய்யே பெண்டாட்டி கையே’ என்று பரிகாசமாகக் கூறுகிறார். வீடு வந்த பிறகு அவள் விம்மி அழுகிறாள். அவளால் நிறுத்த முடியவில்லை. இதுதான் கதை.

சிலர் கதையை மூளையிலிருந்து எழுதுவார்கள். சிலர் இதயத்தில் இருந்து எழுதுவார்கள். இது இதயத்தில் இருந்து பிறந்தது. இதில் தொழில் நுட்ப வெற்றி இல்லை; நேர்த்தியும் இல்லை. அதுதான் சிறப்பு. படித்து முடிக்கும்போது அதில் மறைந்திருக்கும் துயரம் பெரிதாக எழும்பி உங்களைத் தாக்கும். அந்தத் துயரம் கூட பல தடவை சாம்பலை ஊதிய பிறகுதான் தெரிகிறது. நல்ல ஒரு சிறுகதையின் அம்சம்.

புதுமைப்பித்தன் கதைகளில் எனக்குத் தெரியாத நுட்பமா என்று எனக்கு சின்னதாக கர்வம் இருந்தது. முத்துலிங்கம் அதை உடைத்துவிட்டார். இந்த சிறுகதை நன்றாக நினைவிருந்தாலும் அதை நான் பெரிதாக எண்ணவில்லை. நேர்த்தி இல்லை, தொழில் நுட்பம் இல்லை, எளிய சிறுகதை என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் முத்துலிங்கம் விளக்கும்போதுதான் புரிகிறது! அதுவும் பொதுவாக எனக்கு அடுத்தவர் சொல்லி இலக்கியத்தை விளங்கிக் கொள்ளும் சக்தி கிடையாது, ஆனால் இவர் சொல்வது நேராக மண்டையில் இடிக்கிறது. சரி முத்துலிங்கத்துக்கே 11வது தரம் படிக்கும்போதுதான் அது எவ்வளவு சிறப்பான சிறுகதை என்று புரிந்திருக்கிறது, என்னை மாதிரி சுண்டைக்காய்க்கு அது புரியாததில் வியப்பென்ன!

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள், முத்துலிங்கம் பக்கம்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.