ஜெயமோகனின் “மாடன் மோட்சம்”

தோழி அருணாவை இந்தத் தளத்தில் எழுதும்படி ரொம்ப நாளாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவரும் விதவிதமாக டிமிக்கி கொடுத்துக் கொண்டே இருந்தார், இன்றுதான் மாட்டினார். ஜெயமோகனின் புகழ் பெற்ற “மாடன் மோட்சம்” சிறுகதையைப் பற்றி எழுதி இருக்கிறார். இது எனக்கும் பிடித்த சிறுகதைகளில் ஒன்று, கிளாசிக். இன்னும் நிறைய எழுதுவார் என்ற எதிர்பார்ப்புடன், ஓவர் டு அருணா!

ஊருக்கு வெளியே கையில் வாளும், மீசையுமாக காவல் நிற்கும் சுடலை மாடசாமி ஒரு இரவில் தன் பூசாரியை தேடிக்கொண்டு ஊருக்குள் போவதுடன் கதை ஆரம்பமாகிறது. தன் வீழ்ச்சியின் கதையை பூசாரியுடன் அமர்ந்து அங்கலாய்க்கிறது மாடன். அதில் இருந்து சிறு தெய்வங்களின் இன்றைய நிலை, பால் மாவுக்கும், கோதுமைக்கும் ஆசைப்பட்டு மதம் மாறும் கிராமம், இந்து முன்னணியின் அரசியல், வெள்ளை அங்கி அணிந்த வேத ஆசாமிகள், இதை எல்லாம் புரிந்து கொண்டு தன் வம்சாவழியாக கோழியும், ஆடும் வெட்டி காப்பாற்றி வந்த தன் தெய்வத்தின் நலனிற்காக இவர்கள் அனைவரையும் வைத்து தன் வேலையை சாதித்துக் கொள்ளலாம் என நினத்து ஆழம் தெரியாமல் காலை விடும் பூசாரி அப்பி என எல்லா ஆட்டக்காரர்களையும் வைத்துக்கொண்டு நாஞ்சில் நாட்டு வழக்கில் சமகால நிலவரத்தை தனக்கே உரிய பாணியில் நன்றாக கிண்டல் செய்கிறார் ஜெ.மோ.

”குட்டி தேவதையாக இருந்தாலும் அதுவும் கடவுள்தானே! தன்னை மீறிய சம்பவங்களின்போது கல்லாகி விடுதல் என்ற பொது விதியிலிருந்து அது மட்டும் எப்படித் தப்ப முடியும்?” போன்ற வரிகள் அங்கதத்தின் உச்சம்.

மாடன், கோவிலில் குடியேறிய பிறகு அங்கு நடக்கும் கூத்துக்களை படித்து சிரித்து கண்ணீர் வந்தது. தலை முறையாக தனக்கு ஊழியம் செய்யும் பூசாரியின் கட்டாய வெளியேற்றத்தைக் கூட, கடாவிற்க்கு ஆசைப்பட்டு பார்த்து கொண்டு இருக்கும் மாடன் ஒரு குறியீடு மட்டுமே என நினைக்கிறேன்.

விஜயகாந்த் வில்லன் வேஷம் கட்டியது போல் மாற்றப்பட்டு, எல்லா விதமான காம்ப்ரமைசும் பண்ணிய பின்னரும் தான் விரும்பும் பலி கிடைக்கப் போவதில்லை என அறிந்து அதிர்ச்சியுடன் பழைய மாடனாக உக்கிரமாக வாள் வீசி புறப்பட எத்தனிக்கையில், நிறுவனமயமாக்காப்படுவது கடவுளே ஆனாலும் எஞ்சுவது நிறுவனம் மட்டுமே என மாடன் உணரும் இடம், தலைப்பை சொல்கிறது. மாடனையும், அவரின் செயலையும், நிலமையையும் ஒரு குறீயீடாகவே நான் படித்தேன்.

நாஞ்சில் நாட்டு வழக்கு புரிந்தால், கிண்டல்களை இன்னும் ரசிக்கலாம்.