பிரமிள் தேர்வுகள்

பிரமிளின் இந்தக் கட்டுரை 1987-இல் அரும்பு என்ற பத்திரிகையில் வந்திருக்கிறது. தி.ஜா. ஃபேஸ்புக் குழுமத்தில் பார்த்தேன். வசதிக்காக இங்கே மீள்பதித்திருக்கிறேன். அவர்களுக்கு நன்றி!


முதல் நாவல் என்று கருதப்படும் பிரதாப முதலியார் சரித்திரம், அன்றைய சமூக நிலையினைச் சிறுசிறு நிகழ்ச்சிகள் மூலம் சித்தரிக்கிறது. கமலாம்பாள் சரித்திரத்தில் வாழ்வின் துயில்நிலையிலிருந்து இரண்டு பாத்திரங்கள் ஆத்மிகமாக விழிப்படையும் பயணம் சித்தரிக்கப்படுகிறது. பத்மாவதி சரித்திரமும் பிரச்சினைகளைக் கட்டுக்கோப்பாகக் கொண்டதுதான். இவற்றில் உள்ள சம்பாஷணைத் திறனும் பாத்திரங்களும், இன்று கூட வீர்யம் குன்றாதவை.

இந்த ஆரம்பங்களை, வை.மு. கோதைநாயகி அம்மாள் போன்றவர்களின் மலிவான உணர்ச்சிக் கதைகளும் வடுவூர் துரைசாமி ஐயங்கார் போன்றோரின் ருசிகரக் கதைகளும், இரண்டு புறமும் இழுத்தன. நமது வாழ்வினையும் மனிதர்களையும் கவனிக்காமல், வெளிநாட்டு நாவல்களது தழுவல்களை நமது வாழ்வின் சித்தரிப்பாக காட்டும் அவசரத் தொடர்கதைகள் தொடர்ந்தன. பத்திரிக்கை வியாபாரத்துக்காக இதைக் கூசாமல் செய்த கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி, நமது பகைபுலத்தை உபயோகிக்கிறபோது கூட, நிகழ்ச்சிகளின் ஒழுங்கும் தர்க்கமும் வெளிநாட்டு சுவாரஸ்ய கதைகளினது தழுவல்களாகவே இருந்தன. டி.கே.சிதம்பரநாத முதலியார் இதை வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார். கல்கி ஆரம்பித்த இந்த சுவாரஸ்யத் தழுவல், தமிழ்வாணனிலிருந்து சுஜாதா ஈறாகத் தொடர்ந்திருக்கிறது. பெருவாரிப் பத்திரிகையினில், இந்தத் தோரணையைக் கையாளாததுடன், இலக்கிய பூர்வமாகக் கணிக்கத் தக்க எழுத்தையும் கூட படைத்தவர்கள் தி. ஜானகிராமனும் த. ஜெயகாந்தனும்தான். இத்தகைய திறனாளிகளைப் படிப்பது, இவர்களை விட நுட்பமாக எழுதுவோரை ரசிப்பதற்கான ஒரு ஆரம்பப் பயிற்சியாகவேனும் இருக்கும்.

இடதுசாரி எழுத்தாளர்கள், தங்களது அரசியல் தீர்வைத்தான் கலைஞர்கள் யாவருமே வெளியிட வேண்டும் என்று கூப்பாடு போட ஆரம்பித்தபோது, எழுத்துலகில் மிகுந்த குழப்பம் பிறந்தது. இடதுசாரி பக்கம் தலையைத் திருப்பி, சல்யூட் அடித்தபடி நடை போடும் படைப்புகள் பிறந்தன. தொன்மையான மரபில் ஊறிய கிராம வாழ்வும் சமூக வாழ்வும், ஒரு பூர்வகுடித்தனமான சரீர வாழ்வாக மட்டும் இவர்களால் சித்திரிக்கப்பட்டுள்ளது. இதற்காக, காமம் சம்மந்தமான சில சுவாரஸ்ய அம்சங்களையும் இவர்களுள் ஓரிருவர் உபயோகித்துள்ளனர். எதையுமே பிரச்னையாக்கி ஒழுக்கத்துடன் தொடர்புபடுத்தும் மனித இயற்கைக்கூட, இவர்களுக்கு அத்துபடியாகவில்லை.

நாவலை ஒரு கலைப் படைப்பாக சிறப்பிக்கக் கூடிய மனம் சிந்தனை சார்ந்த மனமாக இருக்கவேண்டும். பாத்திரங்களது செயல்களுக்கும் முடிவுகளுக்கும் சிந்தனையே ஆதாரமாக வேண்டும். அப்போதுதான் நாவலின் பரந்த களம் அலுப்பு தராது. வெறும் சரீரப் பிரச்சினைகளைச் சார்ந்த மதிப்பீடுகள், ஒரு சில பக்கங்களுக்குள் பிசுபிசுத்துவிடும். மனித மனம் மதிப்பீடுகளை உருவாக்கி அவற்றை அநுபவத்துடன் பொருத்தி விசாரிக்கும் குணத்தைக் கொண்டது. இந்த அடிப்படையுடன், நாவலின் கட்டுக்கோப்புக்குள் முரண்படாதவாறு பாத்திரம் இயற்கையாக வளரவும் வேண்டும். இதற்காக, இயற்கையில் உள்ளதை அப்படியே போட்டோ பிடித்த மாதிரி எழுதவேண்டும் என்று கருதுவது தவறு. பார்க்கப் போனால், ஒவ்வொரு நாவலும் உலகை ஆதாரமாக கொண்டு வளர்ந்த வேறு ஒரு உலகம்தான். எனவே, ‘யதார்த்தம்’ என்பதன் பொருளை, நாவலின் கட்டுக்கோப்புக்குள் ஏற்படும் தர்க்கங்களுக்குள்தான் பார்க்க வேண்டும். இது, இன்று தங்களை விமர்சகர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் சிலருக்குப் புரியாதது, தெரியாதது.

இன்றைய தலைமுறை வாசகர்களுள் எத்தனை பேர், பொய்த்தேவு என்ற நாவலைப் படித்திருப்பார்கள் என்பது சந்தேகம். இதை எழுதியவர் க.நா. சுப்ரமண்யம். தமிழின் மிகச் சிறந்த நாவல் என்று இதைத்தான் சொல்ல வேண்டும்…

புயலிலே ஒரு தோணி, ஒரு கலவர நிலையை அதன் பின்னணியில் மட்டுமே சித்தரிக்கும் நாவல். சுஜாதா பாணியில் எழுதப்பட்ட நாவல் என்றுதான் அதைச் சொல்லவேண்டும். விசேஷமாக, ஜே.ஜே.யை மிகச் சிறப்பிப்பதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட தேர்வு இது. மிகச் சிறந்த தமிழ் நாவலை எழுதிய க.நா.சு. இந்த நாவலை நாவலே அல்ல என்று கூறியதுக்காக, க.நா.சு.வின் நாவலைக் கீழிறக்கிக் கூட இந்தக் குழு கணித்திருக்கிறது. க.நா.சு.வுடன் எனக்கும்தான் தீவிரமான அபிப்ராய வேறுபாடுகள் உள்ளன. அதற்காக, ஒரு சிறந்த நாவலைச் சிறப்பில்லாத நாவல் என்று கூறிவிட முடியுமா?

மோகமுள், தன்னளவில் ஒரு பூரணமான நாவல். தலைப்பைத் தொட்டு நிற்கும் பிரச்சினையுடன் தொடர்புள்ள வேறு பிரச்சினைகளின் கிளைகளும் அதற்கு உண்டு. ஜே.ஜே. சில குறிப்புகளில் எந்த விதப் பிரச்சினையுமே இல்லை. இடதுசாரிகளின் பார்வையை, சரியாக காட்டாமலே, அதை ஓரிரு பாத்திரங்களின் மூலம் ஆசிரியர் கிண்டல் பண்ணுகிறார். இந்தப் பாத்திரங்கள் குறுக்கு வழியில் இடதுசாரி அரசியலை உபயோகித்தமையால் இந்தக் கிண்டல். ஆனால் மதிப்பீடுகளின் யாத்திரையோ அதைப் பிரதிப்பலிக்கும் பாத்திரமோ நாவலின் இல்லாததால், இந்தக் கிண்டல் ஆழமற்ற விகடக் கச்சேரியாகவே நிற்கிறது.

உலகை ஆதாரமாகக் கொண்டு வளர்ந்த இன்னொரு உலகின் ‘யதார்த்தம்’ கூட ஜே.ஜே.யில் இல்லை. ஏனெனில், தன்னளவில் தர்க்கபூர்வமாக ஒருமை பெறாத உலகம் அது. ஜே.ஜே. என்பவன் சந்திக்கும் முதல் மனிதனாலேயே, உணர்வு நாசம் பெறுகிறான் என்கிறார் ஆசிரியர். நாவலில், அவனைச் சந்திக்கும் முக்கியப் பாத்திரம்தான் உணர்வு நாசம் பெறுகிறது. ஜே.ஜே. என்ற பாத்திரமே பிறருக்கு உணர்வு நாசம் தரும் பாத்திரம்தான். இப்படித் தன்முரணான ஒரு உலகம் தன்னளவில் யதார்த்தமானதல்ல. மேலும், ‘அவனுடைய உயிர் திராவிட உயிர் என்றாலும் தமிழ் உயிர் அல்ல’ என்ற மறைமுகமான இனவாதமும் நாவலில் உண்டு. இதை நான் விரிவாக வேறு இடங்களில் விமர்சித்துக் காட்டி உள்ளேன்.

புயலிலே ஒரு தோணி, ஒரு கலவர நிலையையும் அதனூடே தப்பி ஓடிவருவதையும் ‘டாக்குமெண்டரி’யாக, அதுவும் சுவாரஸ்யத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட நாவல். பிரச்சினை என்று மதிப்பீட்டு ரீதியாக எதையும் எழுப்பாத நாவல்.

பின் இரு நாவல்களையும் விடச் சிறந்தவை என்று, கீழேவரும் நாவல்களை குறிப்பிட முடியும். (கீழுள்ள வரிசைக்கிரமத்துக்கு விசேஷ அர்த்தம் இல்லை.)

1. கமலாம்பாள் சரித்திரம்பி. ஆர். ராஜமையர்
2. பொய்த்தேவுக. நா. சுப்ரமண்யம்
3. நாகம்மாள்ஆர். ஷண்முகசுந்தரம்
4. ஒரு நாள்க. நா. சுப்ரமண்யம்
5. வாழ்ந்தவர் கெட்டால்க. நா. சுப்ரமண்யம்
6. அசுரகணம்க. நா. சுப்ரமண்யம்
7. ஜீவனாம்சம்சி.சு. செல்லப்பா
8. வாடிவாசல்சி.சு. செல்லப்பா
9. மோகமுள்தி. ஜானகிராமன்
10. புத்தம்வீடுஹெப்ஸிபா ஜேசுதாசன்
11. நிழல்கள்நகுலன்
12. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்த. ஜெயகாந்தன்

பொய்த்தேவு: சிறந்த தமிழ் நாவல். அரும்பு, மார்ச்-ஏப்ரல் 1987.

தொகுக்கப்பட்ட பக்கம்: பரிந்துரைகள்

3 thoughts on “பிரமிள் தேர்வுகள்

  1. சௌகந்தி // பன்னிரெண்டு புத்தகத்தில் நான்கு திரு க நா சுவுக்கு // நீங்கள் சொல்வது சரியே…

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.