அய்க்கண் பேரைக் கேட்டிருந்தாலும் நான் எதுவும் படித்ததில்லை. அவரை பற்றி யாரும் பெரிதாகக் குறிப்பிட்டும் நான் பார்த்ததில்லை. வணிக எழுத்தை பொருட்படுத்தி எழுதும் (எனக்குத் தெரிந்த) ஒரே தீவிர இலக்கிய விமர்சகரான ஜெயமோகன் கூட அவரது மறைவைப் பற்றி குறிப்பிடவில்லை.
இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் திருப்பூர் கிருஷ்ணன் சில பல எழுத்தாளர்களை நினைவு கூர்கிறார். அவர்தான் அய்க்கண் மறைவுச் செய்தியை குறிப்பிட்டிருந்தார். அய்க்கண் தமிழ் பேராசிரியராக இருந்திருக்கிறார் என்றும் நிறைய எழுதி இருக்கிறார் என்றும் தெரிகிறது. ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியை, தோழி சுசீலாவுக்கு பழக்கம் இருக்கலாம்.
எழுத்தாளனுக்கு அஞ்சலி என்பது அவரது புத்தகங்களைப் பற்றி எழுதுவதுதான் என்பது என் உறுதியான கருத்து. தற்செயலாக அவரது அதியமான் காதலி புத்தகத்தின் மின்பிரதி கிடைத்தது.
தமிழ் சரித்திர நாவல்களில் என் எதிர்பார்ப்பு மிக மிகக் கீழேதான். பல குப்பை சரித்திர நாவல்களை படித்து நொந்து நூலாகி இருக்கிறேன். அய்க்கண் சரளமான நடையில், ரொம்ப வளவளக்காமல் ஓரளவு சுவாரசியமான, ஆனால் வெகு சுலபமாக ஊகிக்கக் கூடிய முடிச்சுகளைப் போட்டிருக்கிறார். மிகவும் சிம்பிளான கதைப்பின்னல்தான். புத்தகத்தை சுவாரசியப்படுத்துவது தியமானுக்கும் அவ்வைக்கும் உள்ள பந்தம் எப்படி ஏற்பட்டது என்ற அவர் கற்பனையும், அவர் பயன்படுத்தி இருக்கும் சங்கப் பாடல்களும்தான். படித்தே ஆக வேண்டிய நாவல் இல்லைதான். ஆனால் படிக்கக் கூடிய நாவல்.
ஓர் அகலிகையின் மகள், மண், மாணிக்கம் சார், மாண்புமிகு மாணவன் என்ற சிறுகதைகள் இணையத்தில் கிடைத்தன. அகலிகை வழக்கமான பாதையில் செல்லும் பெண்ணியக் கதை. மற்றவற்றைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை.
ஒரு நாவல், 4 சிறுகதைகளை மட்டும் வைத்து சொல்லிவிட முடியாதுதான். என் கண்ணில் அய்க்கண் இலக்கியம் படைக்கவில்லை. அவர் எழுத்தை வணிக எழுத்து என்றுதான் வகைப்படுத்துவேன். அதியமான் காதலி அறுபது எழுபதுகளில் வாரப்பத்திரிகையில் தொடர்கதையாக வந்திருந்தால் விரும்பிப் படிக்கப்பட்டிருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான் படித்த பல குப்பைகளை விட அ. காதலி எவ்வளவோ பரவாயில்லை. நிச்சயமாக் அய்க்கண்ணின் வேறு ஏதாவது புத்தகம் கிடைத்தால் புரட்டியாவது பார்ப்பேன். ஆனால் தமிழ் வணிக எழுத்தின் வரலாற்றிலும் அவர் ஒரு footnote அளவுக்கு வந்தால் அதிகம்.
அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்