கிரீஷ் கார்நாட்: நாகமண்டலா

கார்நாடின் நாடகங்களில் ஏதோ குறைகிற உணர்வு ஏற்படும். அப்படி எந்தக் குறையும் தெரியாத நாடகங்களில் ஒன்று நாகமண்டலா.

நாகமண்டலா நாட்டார் நாடகம் ஒன்றை, கூத்து ஒன்றை, பாசரின் நாடகம் ஒன்றைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. நாட்டார் கதையை குறை இல்லாமல், மிகைப்படுத்துதல் இல்லாமல் சொல்கிறார். கார்நாட் செய்திருப்பதெல்லாம் நகாசு வேலைகள் மட்டுமே. அதனால்தான் இந்த நாடகம் சிறப்பாக வந்திருக்கிறது.

நாகமண்டலாவின் கதை பல காலமாக சொல்லப்படும் நாட்டார் கதைதான். மதனகாமராஜன் கதை ஒன்றில் கூட வருகிறது. கணவன் அப்பண்ணாவை தன் பக்கம் இழுப்பதற்காக தயாரிக்கப்பட்ட வசிய மருந்தை பயத்தினால் மனைவி ராணி பாம்புப்புற்றில் கொட்டி விடுகிறாள். ராஜநாகம் வசியமாகி விடுகிறது. இரவில் அப்பண்ணா போல் உருவம் எடுத்து வந்து ராணியுடன் கூடுகிறது. கர்ப்பம் ஆனது தெரிந்ததும் கணவன் நான் தொடாமலே எப்படி கர்ப்பம் என்று கத்துகிறான். மனைவி தான் உத்தமி என்கிறாள். தன் கற்பை நிரூபிக்க பாம்புப் புற்றில் கைவிட்டு சத்தியம் செய்கிறாள் – என்னவென்று? நான் தொட்டது இரண்டே ஆண்கள், ஒன்று என் கணவன், இன்னொன்று இந்த நாகம் என்று! நாகம் அவள் தலை மேல் படம் எடுக்கிறது, அவள் தோளில் மாலையாகிறது. ஊரார் தெய்வப்பிறவி என்று கொண்டாடுகிறார்கள். கணவன் மனைவி சேர்கிறார்கள். ஆனால் ராணியை மறக்க முடியாத நாகம் அவள் தலை முடியையே தூக்குக் கயிறாக பயன்படுத்தி இறந்துவிடுகிறது. இதற்குள் உண்மை தெரிந்த ராணி தன் மகனை ஈமச் சடங்குகள் செய்யச் சொல்கிறாள்.

ராணி செய்யும் சத்தியத்தில்தான் கதை கதையாகிறது. சிறப்பான denouement.

ஆரம்பக் காட்சியை கார்நாட் மிக நன்றாக எழுதி இருக்கிறார். ஊரிலிருக்கும் சுடர்கள் எல்லாம் இரவில் கோவிலில் கூடுவது நல்ல கற்பனை. எல்லாரையும் போரடித்து தூங்க வைக்கும் நாடக ஆசிரியர் ஒரு இரவு முழுவதும் தூங்காமல் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம், கதை மனதிலிருந்து தப்பி இளம் பெண் உருவத்தில் வருவது என்று நல்ல காட்சிகள்.

நாகமண்டலா கன்னடத்தில் பிரகாஷ் ராஜ் நடித்து அஷ்வத் இயக்கத்தில் திரைப்படமாக (1997) வந்தது. இங்கே பார்க்கலாம்.

நாகமண்டலா நல்ல நாடகம். படியுங்கள், பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாடகங்கள்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.