(திருமதி லலிதாவின் புத்தக விமர்சனம் – அது சரி யார் இந்த லலிதா? இந்தத் தளத்தின் ஆசிரியர்களுள் ஒருவரான RVக்கு படிக்க சொல்லிக் கொடுத்ததே அவர் தான். இவர் ஒரு தேர்ந்த வாசகர். சிலிக்கன் ஷெல்ப் இலக்கிய வட்டத்தின் guest உறுப்பினர். சென்னையில் வசிக்கிறார். ஆமாம், திருமதி லலிதா ஆர்வியின் தாய்தான் 🙂 )
அண்மையில நான் படித்த நரசய்யாவி்ன் ஆயுள் தண்டனை மனதைத் தொட்ட சிறுகதைகளில் ஒன்று 94-வயது மூதாட்டி வாழ்க்கையின் நிலையாமையை எவ்வளவு எளிதாக விளக்கி விடுகிறார். தன் வாழ்க்கையில் குறுக்கிட்ட பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை, மேடு பள்ளங்களை மனதில் இருத்தி தன் பேரனுக்கு அரிய தத்துவங்களச் சுலபமாக புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் பாங்கு உண்மையிலேயே பாராட்டுதலுக்கு உரியது.
உயர் பதவியில் இருக்கும் தன் பேரனைப் பார்த்து பாட்டி கேட்கிறாள். ‘உன் கடடுப்பாட்டில் பணியாற்றும் ஒருவரை வேறு பணியிடத்திற்கு மாற்றும் அதிகாரம் உனக்கு உள்ளதா?’
‘ஆம். உண்டு’ இது பேரனின் பதில். அந்த நபர் பணிமாற்றத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்னசெய்வாய்? என்று பாட்டி கேட்க, ‘வலுக்கட்டாயமாகப் பணியிலிருந்து விடுவித்து அனுப்பி விடுவேன்’என்கிறான் பேரன்.
மீண்டும் கேள்விக்கணை தொடுக்கிறாள் பாட்டி. ‘மேலும் அந்தக் காலிப் பணியிடத்தில் வேறு ஒரு நபரை மாற்றவோ அல்லது நியமிக்கவோ கூட உனக்கு அதிகாரம் உண்டா?’ ‘இல்லை’ என்கிறான் பேரன்.
பாட்டி மெளனம் காக்கிறாள். சற்று நேரம் பதில் இல்லை. கண் முன்னே அவள் வாழ்க்கை சினிமா போல் மனத்திரையில் மலர்கிறது.
‘வாழ்க்கைப் பயணத்தில் நீண்டகாலம் பயணிக்கும் பயணி நான். ஆனால் என்னுடன் இருந்த பலரும் என்னைவிட்டுப் பிரிந்துவிட்டார்கள்.அதில் முதியவர்கள், இளையவர்கள் என எத்தனையோ பேர் அடக்கம். என்னை வேறு இடத்திற்கு மாற்ற இறைவனுக்கு மனமில்லை போலும். ஒரு வேளை என்னை அனுப்பக் காலி இடம் ஏதுமில்லையோ என்னவோ? இருந்து அனுபவிக்கவேண்டும் என்பதுதான் எனக்கு விதிக்கப்பட்டுள்ளதோ? இதுதான் எனக்குக் கிடைத்த ஆயுள் தண்டனை என்று நினைக்கிறேன்.’ பாட்டியின் குரலில் விரக்தி தொனித்தது.
பாட்டியின் கூற்று எத்தனை உண்மை! ‘தண்டனை ஆயுளுக்கும் இருக்கலாம். ஆயுசாலேயும் இருக்கலாம் இல்லையா?’ பாட்டியின் வினா பேரனின் சிந்தனையைத் தூண்டியது. இன்றைய ஆதர்சவாதியான பேரன் ‘constant quantity theory’ என்பதையும் உடலில் எந்த விதக் கோளாறும் இல்லாமல் இருக்கும் பாட்டியின் உடல்நிலை டாக்டர்களே வியக்கும் “clinical wonder”என்பதையும் ஒப்பிட்டுப் பாரக்காமல் இருக்க முடியவில்லை.
கடைசியில் பாட்டி ‘சதாயுசா நன்னா ஐஸ்வர்யத்தோடு, ஆரோக்கியத்தோடு வாழவேண்டும்’ என்று மனமார பேரனை வாழ்த்துகிறாள். பேரனுக்கு சற்றே நெருடல் மனதில். உடனே பிறக்கிறது கேள்வி.
‘பாட்டி நீண்ட ஆயுஸ் உங்களுக்குத் தண்டனை என்றால் எனக்கும் அதே தண்டனைதானா?’ பேரன் குழம்புகிறான். பாட்டி சொன்னாள். ‘முகூர்த்தம் ஜ்வலிதம் ஸ்ரேயோ நது தூமாயுதம் சிரம். இது மகாபாரதத்திலே, உத்யோக பர்வத்திலே வரது. ராணி விதுலை சொல்றா. அப்படீன்னா யுகங்களுக்கும் பொகஞ்சுண்டு இருக்கிறத விட ஒரு கணத்துக்குப் ப்ரகாசிச்சுட்டுப் போறது உத்தமம்.”
ஆயுள் தண்டனையை விட ஆயுளால் கிடைக்கும் தண்டனை கொடியதுதான் என்பதுதான் கதையின் முத்தாய்ப்பே.
இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு நரசய்யாவே எழுதிய மறுமொழி:
எப்படி ஏன் என்று தெரியாமல் வைத்திருப்பது ஆண்டவனின் முக்கியமான விளையாட்டுகளில் ஒன்று. செப் 15, 2011 ல் இடபபட்ட இந்த இடுகை இன்று, மதுரையில் எங்கள் தாயார் சிரார்த்தத்திற்கு வந்திருக்கும் எனது கண்களில் பட்டது! நானே மறந்துவிட்டேன். ஆனால் இன்று பார்க்கநேர்ந்தபோது இவ்விடுகை இட்டவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளவேண்டும் எனவே தோன்றிற்று.
உங்களுக்கும் உமது தாயாருக்கும் எனது நன்றிகள்.
ஏனென்றால் நான் தான் அக்கதை எழுதிய நரசய்யா!
தொடர்புடைய சுட்டிகள்:
தென்றல் இதழில் நரசய்யாவின் நேர்காணல் முதல் பகுதி, இரண்டாம் பகுதி (Registration Required) சுட்டிகள் கொடுத்த நண்பர் அரவிந்துக்கு நன்றி!