நூலகம் தளம் – இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள்

நூலகம் என்ற தளத்தை சமீபத்தில் பார்த்தேன். இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் இங்கே சேகரிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்ப் புத்தகங்கள் மட்டுமல்ல, ஆனந்த கெண்டிஷ் குமாரசாமி எழுதிய Dance of Siva போன்ற ஆங்கிலப் புத்தகங்களும் pdf வடிவில் கிடைக்கின்றன. கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பொதுவாக தமிழகத்து தமிழர்களுக்கு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி அதிகம் தெரிவதில்லை. நான் ஓரளவாவது படித்திருப்பது அ. முத்துலிங்கத்தை மட்டுமே. படிப்பதை விடுங்கள், எனக்கு தெரிந்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் – அ. முத்துலிங்கம், மு. தளையசிங்கம், டொமினிக் ஜீவா, ஷோபா சக்தி, தேவகாந்தன். (தளையசிங்கம் பற்றி ஜெயமோகன் ஓரளவு எழுதி இருக்கிறார். சிறு வயதில் குமுதத்தில் டொமினிக் ஜீவாவின் எழுத்துகளைப் படித்திருக்கிறேன். ஷோபா சக்தி எழுதிய கொரில்லா புத்தகம் சமீபத்தில் நிறைய பேசப்பட்டது. தேவகாந்தன் கதாகாலம் என்ற மகாபாரதப் புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறாராம்.) சராசரிக்கு சற்று மேம்பட்ட வாசகனான, படிப்பில் மோகம் மற்றும் தேடல் உள்ள என் கதியே இதுதான்.

இந்தத் தளத்தை வைத்துக் கொண்டாவது இலங்கைப் படைப்புலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.

பிற்சேர்க்கை: ராஜ்சந்திராவும் சித்திரவீதிக்காரனும் சில புத்தகங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். உங்களைக் கவர்ந்த, உங்களுக்கு முக்கியம் என்று தோன்றும் புத்தகங்களை மறக்காமல் குறிப்பிடுங்கள்!

தொடர்புடைய சுட்டி: நூலகம் தளம்

5 thoughts on “நூலகம் தளம் – இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள்

  1. நீங்கள் குறிப்பிடுவது போல நூலகம் அற்புதமான தளம். நானும் அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துக்களைத்தான் வாசித்திருக்கிறேன். தமிழ்நதியின் எழுத்துக்களை கொஞ்சம் வாசித்திருக்கிறேன். மணா தொகுத்த ”ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள்” நூலில் கவிஞர் சேரன் மற்றும் இன்னும் சில இலங்களை எழுத்தாளர்களின் நேர்காணல்களை வாசித்திருக்கிறேன்.
    \\இந்தத் தளத்தை வைத்துக் கொண்டாவது இலங்கைப் படைப்புலகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்வோம்\\
    பகிர்விற்கு நன்றி.

    Like

  2. ஆர்வி…நன்றி…புனைவுகள் தவிர்த்து அ-புனைவுகளும் அங்கு நிறைய இருக்கின்றன. முக்கியமானவை ‘முறிந்த பனை’ தமிழ் ஈழப் பிரச்னையின் முக்கியமான வரலாற்று ஆவணம். அன்ரன் பாலசிங்கத்தின் ‘விடுதலை வேட்கை’ விடுதலைப் புலிகளின் பார்வையிலிருந்து எழுதப்பட்டது (ஆனால் கவர் செய்த ஏரியா கம்மி). இதைத் தவிர மலையக மக்கள், இலங்கை இஸ்லாமியர் வரலாறுகள், எஸ்பொ-வின் புத்தகங்கள் என்று ‘நூலகம்’ என்ற பெயரை justify செய்யும் தளம்.

    Like

  3. ஆர்வி,
    சுட்டிக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்டிருந்த இலங்கை எழுத்தாளர்களைத்தவிர இன்னொருவரின் புத்தகத்தையும் சமீபத்தில் படிக்க சந்தர்ப்பம் கிடைத்தது.
    ‘அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது’ – வ. ஐ. ச. ஜெயபாலன்…பிடித்திருந்தது.
    சிங்கள குடியானவர்கள் வயலில் உள்ள ஆமைகளின் மேல் காட்டும் கரிசனம் – ‘அந்த’ பக்கத்தின் இன்னொரு சொல்லப்படாத முகத்தை காட்டும்…

    Like

    1. திலகன், செங்கை ஆழியான் என்ற பேரை நான் இது வரை கேள்விப்பட்டதில்லை. உங்கள் தகவலுக்கு நன்றி! இணையத்தில் ஏதாவது கிடைக்கிறதா? நூலகம் தளத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை…

      Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.