சாகித்ய அகாடமி விருதை துவைத்து காயப் போட்டாயிற்று. இப்போது ஞானபீடம்.
இது வரை இரண்டே இரண்டு தமிழ் எழுத்தாளர்கள்தான் ஞானபீட விருது பெற்றிருக்கிறார்கள். அகிலன் சித்திரப்பாவை நாவலுக்காகவும், ஜெயகாந்தன் தன் எழுத்துக்களுக்காகவும் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். அசோகமித்திரன், லா.ச.ரா., அழகிரிசாமி, கி. ரா, தி.ஜா., சா. கந்தசாமி, ஜெயமோகன் யாரும் விருது கமிட்டி கண்ணில் படவில்லையா?
ஜெயகாந்தன் கவுரவிக்கப்பட வேண்டியவரே. அவரது தாக்கம் அவரது எழுத்துகளை விட பெரிது. ஆனால் வயதாகிக்கொண்டே போகும் அசோகமித்திரன், கி.ரா. மாதிரி ஆட்களை கவனிங்கப்பு!
சித்திரப்பாவை அகிலனின் எழுத்துகளில் சிறந்தது என்று நினைக்கிறேன். முழுமையான வெற்றி அடையவில்லை என்றாலும் நாவல் வந்த காலத்தில் அது ரசிக்கப்பட்டிருக்கும். கால ஓட்டத்தில் நிற்காது என்று அப்போதே யூகிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். ரொம்பவும் குற்றம் சொல்வதற்கில்லை.
அகிலன் 1977-இல் இந்த விருதைப் பெற்றார். அப்போது விகடனில் வந்த செய்தி: (சித்திரப்பாவை விகடனில் தொடர்கதையாக வந்தது.)
‘அகிலன் எழுதிய சித்திரப் பாவை நாவலுக்கு ஒரு லட்ச ரூபாய் ஞானபீடப் பரிசு’ என்ற செய்தி கிடைத்தபோது, அகிலனுக்கு ஒரு வாசகர் எழுதியிருந்தார்:
‘நாலரைக் கோடி தமிழர்களும் பெருமிதம் அடையத்தக்க நிகழ்ச்சிக்குத் தாங்கள் காரணமாக இருப்பது எவ்வளவு மகிழ்ச்சிக்குரியது! தமிழர்களிடமும் ஞானபீடம் அங்கீகாரம் பெற்று, வானபீடமளவுக்கு அல்லவா உயர்ந்துவிட்டது!’
அண்மையில், ஞானபீடப் பரிசளிப்பு விழா டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்றபோது இந்தியாவின் மிக உயர்ந்ததோர் இலக்கியப் பரிசு தமிழுக்குக் கிடைத் திருக்கிறதே என்ற பெருமிதத்தில் டில்லிவாழ் தமிழர்கள் திரண்டு வந்திருந்தார்கள்.
பரிசளிப்பு விழாத் துவக்கத்தில் தேர்வுக் குழுத் தலைவர் டாக்டர் வி.கே.கோகக், ஞானபீடம் சிறந்த நூலை எப்படித் தேர்ந்தெடுக்கிறது என்பதை விளக்கினார். “பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பெறும் ஒரு நூல் ‘மிகச் சிறந்தது’ என்பதை மட்டும் வைத்துக்கொண்டு அதற்காகவே தேர்ந்தெடுத்துவிடாமல், அந்த ஆசிரியரின் மற்ற படைப்புக்களையும் சீர்தூக்கிப்பார்த்து அவருடைய மொத்த படைப்பாற்றலையும் சிறப்பிக்கும் வகையில் அவரது சிறந்த ஒரு நூலைத் தேர்ந்தெடுத்துப் பரிசு வழங்குகிறோம்” என்று குறிப்பிட்டார். “பாரதத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் அகிலனும் ஒருவர். 1963-ல் சாகித்ய அகாதமியின் பரிசு பெற்றவர். 1975-ல் ‘எங்கே போகிறோம்‘ நாவலுக்கென ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரின் பரிசைப் பெற்றவர்” என்றும் குறிப்பிட்டார்.
ஞானபீட அமைப்பை நடத்திக் கொண்டிருக்கும் சாந்தி பிரசாத் ஜெயின், ஞானபீடத்தின் உயரிய நோக்கங்களை விளக்கினார்.
அதைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஒரு பேழையில், பரிசு பெற்றதற்கான அத்தாட்சி இதழ் ஒன்றும், கலைமகள் சிலை ஒன்றும், ஒரு லட்ச ரூபாய்க்கான செக் ஒன்றையும் (இதற்கு வரி கிடையாது) பிரதமர் மொரார்ஜி தேசாய், அகிலனுக்கு வழங்கினார்.
“இந்தப் பரிசு எனக்குக் கிடைத்த பரிசு அல்ல; தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் கிடைத்த பெருமை!” என்று ‘ஞானபீடம்’ அகிலன் குறிப்பிட்டார்.
அகிலனுக்குத் தாம் பரிசளித்ததை ஒரு பெருமையாகக் கருதுவதாகச் சொல்லிவிட்டு, “தமிழ் மிகவும் வளமான மொழி. இலக்கியச் செல்வம் நிறைந்த மொழி. இந்தியாவிலுள்ள பல மொழிகளை விடச் சிறந்த மொழி. இந்தி தமிழுக்கு ஈடாகவே முடியாது. ஆனால், இந்தியாவில் 60 சதவிகிதம் பேர் இந்தி பேசுகிறார்கள்” என்று பிரதமர் ரொம்ப வும் நாசூக்காக இந்திப் பிரச்னையை நினைவுபடுத்தினார்.
“சித்திரப்பாவைக்கு இத்தனை பெரிய சிறப்புக் கிடைத்திருப்பதற்கு என்னைவிட அதிகம் மகிழக்கூடிய மனம் ஒன்று உண்டு. ஆனால், அவர் இன்று உயிருடன் இல்லை. அவர்தான் அமரர் வாசன்” என்று விகடனில் சித்திரப்பாவை எழுத நேர்ந்ததற்கான நிகழ்ச்சிகளை டில்லித் தமிழ்ச் சங்கம் அளித்த பாராட்டு விழாவில் பேசும்போது விளக்கினார் அகிலன்.
இது வரை இந்த விருதை வென்றவர்கள் லிஸ்டை இங்கே காணலாம்.
தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்
தொடர்புடைய சுட்டிகள்: